வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்!


Published October 26, 2023, விடுதலை நாளேடு, 

கடந்த பத்தாண்டுகளைவிட, அடுத்த பத்தாண்டு களுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நுண்கிருமிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு, புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகியிருக்கின்றனர்.

இருந்தாலும், நோய் எதிர்ப்பு அணுக்களை வெளியில் தேடுவதைவிட, மனித உடலுக்குள்ளேயே தேடலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்மையில், மனித உடலிலேயே சில டஜன் நுண்கிருமி எதிர்ப்பு ‘பெப்டைடுகள்’ இருப்பதை அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு உதவியாக இருந்தது ஒரு, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருமிகளைக் கொல்லும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்காக, தேயிலை, புகையிலை, பாம்பு விஷம், தவளைத் தோல், பூஞ்சைகள், வினோத விலங்குகளின் தாய்ப்பால் என்று சகலத்தையும் விஞ்ஞானிகள் விட்டுவைக்காமல் ஆராய்ந்து வருகின்றனர். இருந்தாலும், மனித உடலிலேயே கிருமிகளைக் கொல்லும் பாக்டீரியாக்கள் இருப்பதை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியிருக்கிறது. மனித உடலில் உற்பத்தியாகும் பல லட்சக் கணக்கான புரதங்களின் பட்டியல் கொண்ட டிஜிட்டல் களஞ்சியத்தில், நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதங்களைக் கண்டறிய, அம் மென்பொருள் உதவியது.

அது அடையாளம் கண்ட 2,603 புரதங்களில், 55 புரதங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சில சோதனைகளில், இந்த நோய் எதிர்ப்புப் புரதங்கள், சில சக்தி மிக்க நோய்கிருமிகளை எளிதில் வென்று காட்டின. இந்த போரில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்கவில்லை. இந்த ஆய்வைத் தொடர்ந்தால் அதிக நேரவிரயமின்றி பல இயற்கையான நோய் எதிர்ப்பு மருந்துகளை மனித உடலிலிருந்தே கண்டறிய முடியும்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

மகப்பேறு(PRAGNANCY) அதி நவீன மருத்துவங்கள் (106)

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (106)

மகப்பேறு
(PRAGNANCY)

மரு.இரா.கவுதமன்


இயல்பான நிலையில் மகப்பேறு நாள், பெண்கள் கருவுற்ற 280 நாள்களில் வரும். மாதவிலக்கம் நின்ற நாளிலிருந்து இந்நாள்கள் கணக்கிடப்படும். 15 நாள்கள் முன்னோ, அல்லது பின்போ மகப்பேறு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் மூன்றாம் மூன்று மாதப் பருவத்தின் கடைசிப் பகுதிகளில் மகளிர் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு. பெண்கள் அதை நினைத்து மனத் தளர்ச்சியோ (Depression), பயமோ (Fear) கொள்ளத் தேவையில்லை. மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும், செவிலியர்களும் இதை வெகு இயல்பாகக் கையாளுவார்கள். அதனால் கவலைப்படாமல் தாயாகப் போகிறோம்’’ என்று பெருமையுடன் குழந்தைப் பிறப்பை எதிர் கொள்ள வேண்டும்.

பொதுவாக குழந்தைப் பிறப்பு மூன்று நிலைகளில் நிகழும். குழந்தைப் பிறப்பின் பொழுது தாய் அதை எளிமையாக நிகழ்த்திக் கொள்ளவும், அதிகம் தொல்லைப் படாமல் இருக்கவும் மருத்துவர்களின் அறிவுரைகளும் செவிலியர்கள் உதவியும் மிகவும் உதவும். பேறுகால நிகழ்வு என்பது ஒரு தனித்துவமான (Unique) அனுபவம். சில நேரம் இந்நிகழ்வு சில மணி நேரம் நீடிக்கும். குறிப்பிட்ட நேரம் என பொதுவாகக் கணிக்க முடியாது. குழந்தைப் பிறப்பு என்பதும், அதை எளிமையாக நிகழ்த்துவதற்கு பெண்ணின் உடல் உறுதியும், மன உறுதியும் மிகவும் இன்றியமையாதவை. சில நேரங்களில் குழந்தைப் பிறப்பு விரைவாகவும் நிகழும் வாய்ப்பும் உண்டாகும். பொதுவாக முதல் பேறு காலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்கு பின் வரும் குழந்தைப் பிறப்பு எளிதாகவும், விரைவாகவும் நிகழும் நிலை இருக்கும்.

குழந்தைப் பிறப்பின் முதல் நிலை: (State I, Early Labor and Active Labor)
கருப்பையில் இருந்து குழந்தை வெளியேறும் செயல்பாடு, கருப்பை தொடர்ச்சியாகச் சுருங்குவதால் ஆரம்பமாகிறது. மெதுவாகத் துவங்கும் இந்தச் சுருங்கல், நேரம் செல்லச் செல்ல அதிகமாகும். கருப்பை சுருங்குவதால் பெண்ணின் அடிவயிற்றில் வலி ஏற்படும். இதையே பேறுகால வலி என்கிறோம். கருப்பை சுருங்குவது தொடர் நிகழ்வாகும் பொழுது வலியும் தொடர்ச்சியாக ஏற்படும். தொடர் நிகழ்வு பலமானதாகவும் அடிக்கடியும், விட்டு விட்டும் வரத் துவங்கும். கருப்பை சுருங்கும் நிலை தொடர்ச்சியாக, அதிகமாக ஏற்படும் பொழுது கருப்பைக் (கழுத்து) வாய் (Cervix) திறக்கும். கருப்பைக் கழுத்து மென்மையாகவும், மெலிந்தும், குறுகலாகவும் மாறி, குழந்தை கீழ்நோக்கி நகரத் துவங்கும். கருப்பை சுருங்குவதால் குழந்தையின் நகர்தல் தொடர்ச்சியாக நிகழத் துவங்கும் முதல் நிலை, பேறு காலத்தில் நீண்ட நேரம் நகரும். முதல் நிலை, இரண்டு கட்டங்களாக நகரும். முதல் கட்டம் “ஆரம்ப நிலை’’ (Early Labor) என்றும், வேகமான நிலை (Active Labor) என்றும் இரண்டு கட்டங்களாக நிகழும்.


ஆரம்ப நிலை: ஆரம்ப நிலையில் கருப்பை மெதுவாகச் சுருங்கத் தொடங்கும். கருப்பைக் கழுத்து மெலிதாகும் (Effaces), கருப்பைக் கழுத்து திறக்கும். கருப்பை சுருங்குவதால் இடுப்பு வலி துவங்கும். ஒவ்வொரு முறையும் கருப்பை சுருங்கும் நிலையிலும் வலி வந்து, வந்து போகும். கருப்பைக் கழுத்துப் பகுதி திறக்கும் பொழுது, லேசான இரத்தம் கலந்த, திரவம் வெளிப்படும். இது கருப்பை வாயில் மூடியுள்ள சளி போன்ற சவ்வாகும். இது கிழிவதால் மேல் குறிப்பிட்ட திரவம் வெளிப்படும். ஆரம்ப நிலை எவ்வளவு நேரம் நீடிக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது. முதல் பேறுகாலத்தில் மணிகளில் துவங்கி நாள்களில் கூடத் தொடரும். அடுத்த மகப்பேறுகளின் இந்த ஆரம்ப நிலை விரைவில் முடிந்து விடும். பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை சுருங்குதல் மெதுவாக நடப்பதால் அதிகத் தொல்லை இருக்காது.
ஆனால், சிலருக்கு வேகமாக இந்தச் சுருங்குதல் அடிக்கடி நிகழும் நிலையில் வலி அடிக்கடி ஏற்படும். மனம் தளராமல், இந்த நிலையில் பெண்கள் இருக்க வேண்டும். மனம் தளர்வடையாமல் இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் உதவும்.
* மெதுவான நடைப்பயிற்சி மேற்-கொள்ளலாம்.
* வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
* மெல்லிய இசையைக் கேட்கலாம்.
* மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இப்பயிற்சியை செவிலியர்கள் பெண்களுக்குச் சொல்லித்தருவர்.
* இருக்கின்ற நிலையில் (Position) இருந்து வசதியான நிலைக்கு மாறி இருக்கலாம்.

சிக்கல்கள் ஏதும் இல்லாத மகப்பேறானால், மருத்துவமனையில் உடனே சேர வேண்டிய தேவை இருக்காது. வலி அதிகமாகும் பொழுது, கருப்பை சுருங்குதல் அதிகமாவது போல் தெரிந்தால் மருத்துவமனையில் சேர்த்து விடலாம். உடனிருக்கும் செவிலியரோ, செவிலிய உதவியாளரோ வீட்டில் உள்ள வயது மூத்த அனுபவம் வாய்ந்த பெண்கள் தகுந்த நேரமறிந்து பேறுகாலம் எதிர் நோக்கும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க உதவுவர். பிறப்புறுப்பில் இருந்து சிறுநீர் கழிப்பது போல் உணர்வுடன் தண்ணீர் வெளியேறினாலோ, லேசான இரத்தப் போக்கு ஏற்பட்டாலோ உடனே மருத்துவமனைக்குச். செல்ல வேண்டும்.

வேகமான நிலை: (Active Labor): வேகமான நிலையில் கருப்-பைக் கழுத்து வேகமாகத் திறக்கும். 6 செ.மீ.லிருந்து, 10 செ.மீ. வரை திறக்கும் கருப்பை வலிவோடு, சீராகவும், அடிக்கடியும் சுருங்கத் துவங்கும். கால்களில் தசைப்பிடிப்பு (Cramps) எற்படக்கூடும். லேசான குமட்டல் ஏற்படும். பனிக்குடம் உடைந்து, நீர் வெளியேறும். முதுகுப் பகுதியில் அழுத்தமும், வலியும் உண்டாகும். இந்த நிலை வரை மருத்துவமனைக்குச் செல்லாமலிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் இருக்கும் உணச்சிவயப்படும் நிலை, குழந்தை இறங்க, இறங்க மாறிவிடும். உடல்வலி அதிகமாகிவிடும், வலி மாத்திரைகள் சற்று வலியைக் குறைக்க உதவும். பேறு-காலத்தில் செவிலியர்களும், மற்றவர்களும் உதவினாலும் இடுப்பு வலியும் மற்ற பேறு காலத் தொல்லைகளையும் குழந்தை பெறும் பெண்தான் தாங்க வேண்டும். (“அழுதாலும்“ பிள்ளை அவள்தான் பெறவேண்டும்’’ என்ற சொலவடை கிராமங்களில் சொல்வதைக் கேட்டுள்ளோம்). வேகமான இந்தப் பேறுகால நிலை, 4 முதல் 8 மணிநேரம் (முதல் பேறு-காலத்தில்) நீடிக்கலாம்.

கருப்பைக் கழுத்து ஒரு மணிக்கு ஒரு செ.மீ மட்டுமே திறந்து கொடுப்பதால் இவ்வளவு நேரம் பிடிக்கும். பேறுகால உதவியாளர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். வாய்விட்டு நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வது பெண்ணின் வசதிக் குறைவை எளிதாக்கும். செவிலிய உதவியாளர்கள் அறிவுரைப்படி, வசதிக் குறைவான நிலையிலிருந்து, வசதியான நிலைக்கு திரும்பிப் படுக்கலாம். வாய்ப்பிருப்பின் ஒரு குளியல்கூட போடலாம்.

வலி வராத நேரங்களில் நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும். வலிகளுக்கு இடையே வயிறுப் பகுதியில் தடவிக்கொடுக்கும் வேலையை (Massage) பேறுகால உதவியாளர்-கள் செய்வர். வேகமான நிலையில் வலி அடிக்கடி ஏற்படும். கருப்பை சுருங்குதல் 60 முதல் 90 விநாடிக்கு ஒருமுறை ஏற்படும். அடி முதுகிலும், மலக் குடலிலும் அழுத்தம் ஏற்படும். தாய்க்கு, இயல்பாகவே முக்கி, குழந்தையை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு துவங்கும். ஆனால். இடுப்பு வலி வராத நிலையில் முக்கக் கூடாது. கருப்பைக் கழுத்து முழுமையாகத் திறக்காத நிலையில் வேகமாக முக்கினால் கருப்பைக் கழுத்தில் வீக்கம் ஏற்பட்டு குழந்தை பிறக்கும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும். தாய்க்குக் களைப்பையும் ஏற்படுத்தும். இந்த நிலை சுமார் 15 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நீடிக்கும்.


ஞாயிறு, 11 ஜூன், 2023

கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!

கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

 – மருத்துவர் இரா. கவுதமன்

பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ‘மரணம்’தான் இறுதியானது. “ஆக்கல்’’, “காத்தல்’’, “அழித்தல்’’ இவையெல்லாம் கடவுளின் செயல் என்று பகுத்தறிவு உள்ள மனிதன்தான் நினைக்கிறான். மற்ற உயிரினங்கள் எதற்கும் இந்த உணர்வோ, நினைப்போ இல்லை. இயல்பாக பிறக்கிறது, வாழ்கிறது இறக்கிறது. மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியால் “கடவுள் செயல்’’ என்ற நம்பிக்கையுடன் அறியப்பட்ட இந்த மூன்று செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன் மருத்துவ அறிவியல் மூலம் ஆளுமை செலுத்துகிறான் என்பதுதான் உண்மை.

ஓர் உயிரை உருவாக்க முடியுமா என்று மதவாதிகளின் கேள்விக்கு மருத்துவ அறிவியல், “முடியும்’’ என்றே விடைபகருகிறது. செயற்கை முறையில் “மரபணுக்கள்’’ (Genes)  உருவாக்கம் உயிரை உருவாக்கும் முயற்சியில் பெரும் வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது. “படியாக்கம்’’ (Cloning) என்று அழைக்கப்படும் முறையில் நம்மைப் போலவே மற்றொரு உருவத்தை உருவாக்குகிறார்கள். “குருத்தணு’’ (StemCell) சேமிப்பு வங்கிகள் இன்று பல நாடுகளில் வந்துவிட்டது. குருத்தணு சேமிப்பு பல தீர்க்க முடியாத நோய்களைக் குணமாக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

“எல்லாம் அவன் செயல்’’ என்று நிறைய குழந்தைகள் பெற்றுத் தள்ளிய காலம் மாறி, “நாம் இருவர்’’ என்ற நிலை வந்து, இன்று அதுவும் மாறி, “ஒரு குடும்பம், ஒரு குழந்தை’’ என்ற நிலை பல குடும்பங்களில் இன்று வந்துவிட்டது. குழந்தைப் பேற்றை மனித அறிவியல் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. குடும்பக் கட்டுப்பாட்டை எளிய அறுவை மருத்துவத்தால் வெற்றிகரமாகச் செயலாக்க முடிகிறது.

அறுவை மருத்துவமின்றி “கருத்தடைப் பொருள்கள்’’ மூலம் கருத்தரித்தலைத் தடுக்கவோ, தள்ளிப் போடவே முடியும். குழந்தையே பெறமுடியாத நிலைகளில் “மலடி’’ என்று பெண்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்த காலம் மாறி இன்று, “மலட்டுத் தன்மைக்கு ஆண்களே பெரிதும் காரணமாக இருக்கிறார்கள் என்று அறியப்பட்டு, அதை மாற்றி, மகப்பேற்றை அனைவரும் பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. “கருத்தரிப்பு மய்யங்கள்’’ இந்த மாற்றத்தை மனிதர்களுக்கு வழங்கியுள்ளது.

தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே “இனி வரும் உலகம்’’ என்ற நூலில் எழுதியபடி, “குடுவைக்குள் குழந்தை பிறக்கும்’’ (Test Tube Babies) என்ற பெயர் மாற்றத்தோடு கருத்தரிப்பு மய்யங்களால் இன்று செயலாக்கப்பட்டு வருகிறது. உயிரினங்கள் உருவாக்கம் என்பது “ஆக்கல்’’ என்ற கடவுளின் செயல் என்பது முழுமையாகப் போய், மனிதன் நினைத்தால் மகப்பேற்றை உருவாக்கிக் கொள்ள முடியும். தேவையான அளவுக்கு செயல்படுத்திக் கொள்ள முடியும். தேவையில்லையென்றால் குழந்தையே பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். குறைபாட்டினால் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பின் அதைச் சீராக்கி மகப்பேற்றை உருவாக்க முடியும் என்ற நிலை

ப்பாடுகள் எல்லாம் கடவுளின் கைகளிலிருந்து மனிதர்கள் கைகளுக்கு வந்துவிட்டன.

அடுத்து கடவுளின் செயல் என்று கூறப்படும் “காத்தல்’’ என்பதும் மனிதனின் கைகளுக்கு மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியரின் சராசரி வயது 25 லிருந்து 30 என்று கூறப்பட்டது. ஆனால், இன்று சராசரி வயது 55 லிருந்து 60 ஆக மாறிவிட்டது. “மந்திரமோ’’, “விதியோ’’, “கடவுள் செயலோ’’ இந்த மாற்றத்தை உருவாக்கவில்லை. மனிதனின் அறிவியல்தான் இப்பேர்ப்பட்ட மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நோய்கள் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் கொன்றன. மருத்துவத் துறையின் தொடர்ந்த ஆய்வுகள், சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கி, நோய்க் காரணிகளை ஆய்ந்து, நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளைக் கண்டறிந்து உயிர்களைக் காத்தன. ஒரு காலத்தில் கோடிக் கணக்கான மக்களைஅழித்த கொள்ளை நோய்கள் இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கோடிக்கணக்கான (சுமார் 5 கோடி) மனிதர்களை உலகம் முழுவதும் பலி வாங்கிய “பெரியம்மை’’ (Small Box) நோய் ஒரு தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிப்பால் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுபோன்று எண்ணற்ற நோய்கள், நுண்ணுயிர்களாலும் (Bacterias), வைரஸ்களாலும் ஏற்படுவதை தடுக்கக் கூடிய ‘உயிர்க் கொல்லி’ (Anti-Biotics) மருந்துகள், தடுப்பூசிகள் இன்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, மனித குலத்தைக் “காத்து’’ வாழ வைத்திருக்கின்றன. விபத்துகளால் ஏற்படும் தொல்லைகள், குறைபாடுகளிலிருந்து மனிதர்களைக் “காக்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்.

மாரடைப்புப் (Heart Attack)போன்ற நோய்களால் ஏற்படும். திடீர் மரணங்களைத் தடுக்கும் வகையில் தொடர் மருத்துவ ஆய்வுகள், இதயத் தமனி அடைப்பு நீக்கி (Coronary Artery Disease) மருந்துகள், மருத்துவ முறைகள் (Angioplasty) இதயத்தமனி மாற்று வழி அறுவை மருத்துவம் (Coronary Artery Bye Pass Surgery) போன்றவை மாரடைப்பைத் தடுப்பதுடன், திடீர் மரணம் ஏற்படாமல் மனிதர்களைக் “காத்து’’ நீண்ட நாள் வாழ வைக்கிறது என்பது உண்மை. ஏதாவது அறுவை மருத்துவம் இன்று பல்லாயிரம் பேரை வாழ வைக்கிறது. இதன்மூலம் அழிவு வேலையும் தடுக்கப்பட்டுவிட்டது.

(தொடரும்

மரணத்திற்குப் பின் வாழ்க்கை…

 

மரணத்திற்குப் பின் வாழ்க்கை… – மருத்துவர் இரா. கவுதமன்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15,2023

மரணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. உயிருள்ள அனைத்தும் ஒரு நாள் மரணமடைந்தே தீரும். உயிருள்ள ஒவ்வொரு உயிரிகளும் மரணமடையாமல் இருக்க முடியாது. ஆத்திகர்கள் நாம் செய்யும் “புண்ணியங்கள்’’ நம்மை வாழ வைக்கும் என்று கூறுவதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம் மரணத்திற்குப் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் நம்மைப் பற்றிய நினைவுகளை மனங்களில் தங்க வைக்கும் என்பதைத் தவிர, பகுத்தறிவுக்கு ஒவ்வாத எண்ணங்கள்தான் இவை.

நம் இதயம் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. மூளையும் அவ்வாறே செயல்படுகிறது. இரத்த ஓட்டம் நிற்காமல் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. காதுகள் கேட்கின்றன. கண்கள் பார்க்கின்றன. மூக்கு மூலம் உள் செல்லும் காற்றால், நுரையீரல்கள் உயிர்காற்றை நாள் முழுதும் இடைவிடாமல் உறிஞ்சி உடல் செல்களுக்கு அனுப்புகின்றன. உடலில் ஏற்படும் நச்சுகளை சிறு நீரகங்கள் இடைவிடாமல் வடிகட்டி வெளியேற்றுகின்றன. உண்ணும் உணவில் இருக்கும் சத்துகளை குடல் உறுப்புகள் உறிஞ்சி இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் செலுத்துகின்றன. ஒரு பெரிய தொழிற்சாலையில் பல பகுதிகள் செயல்பட்டு, ஒரு முழுமையான பொருளை உருவாக்குவது போல், நம் உடல் எனும் இயந்திரத்தில் பல உறுப்புகள் செயல்பட்டு, நம்மை இயக்குகிறது. இதையே நாம் “உயிர்’’ என்கிறோம். உடலின் பொறிகள் சரியாகச் செயல்படாத நிலையையே நோய் என்கிறோம்.

எப்படி தொழிற்சாலையில் உள்ள ஒரு பொறி பழுதானால் அதை சரியாக்கி மீண்டும் இயங்க வைக்கிறோமோ. அதேபோன்று நோயினால் உடலில் ஏற்படும் பழுதுகளை மருத்துவத்தால் சீராக்குகிறோம். பொறிகள் பலவும் ஒருங்கிணைந்து தொழிற்சாலை இயங்குவது போலவே உடல் உறுப்புகள் பலவும் இணைந்து செயல்பட்டே நம் உடலுக்கு இயக்கத்தைக் கொடுக்கின்றது. பழுதைச் சீராக்க முடியாத நிலையில் தொழிற்சாலை இயங்க முடியாத நிலை ஏற்படுவது போல், சீராக்க முடியாத பழுதுகள்(நோய்கள்) ஏற்பட்டால் உடல் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதையே “உயிர்’’ போய்விட்டது. என்றும் “மரணம்’’ என்று கூறுகிறோம்.

எனவே “உயிர்’’ என்று உருவகப்படுத்தப்படுவதற்கு தனியான குணநலன் கொண்டதாகவோ, அருவமாகவோ, ஆன்மாவாகவோ, ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ மாறுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மேலே கூறிய அனைத்தும் நம் கற்பனைகளால் உருவகப்படுத்தப்பட்டவையே. நம் உடல் இயக்கத்தையே நாம் “உயிர்’’ என்கிறோம். இயக்கத்தை நம் உடல் நிறுத்திவிட்டால் “உயிர் போய்விட்டது’’ என்கிறோம். இதைத் தவிர உயிருக்கு வேறு எந்த விதமான மறு சுழற்சி கிடையாது என்பதே உண்மை. ஆதலால், “உயிர்’’ போன பின்பு ஆவி, பேய், கடவுள், மறு பிறவி என்று கூறுவதெல்லாமே அறிவியல் அடிப்படையற்ற, கற்பனையாக உருவகப்படுத்தப்பட்டவையே! இவையனைத்தையும் பாமர மக்களிடம் பரப்பியவர்கள், தங்களின் சுய நன்மைக்கும், பொருளீட்டவும் இதை ஒரு வாய்ப்பாக்கி வருமானம் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

மனித உயிர் போன பின்பு இத்தனை வகையில் மீண்டும் அவை இருப்பதாகக் கூறுபவர்கள் இறந்த மற்ற உயிரினங்களுக்கு இதுபோன்ற நிலைகள் வருகிறதா என்று ஏன் கூறுவதில்லை? ஒரு பசு (கோமாதா) கடவுளாகவோ, ஒரு எருமை மாடு (எமனின் வாகனம்), ஒரு நாய்(பைரவர்), ஒரு பன்றி(வராகமூர்த்தி) போன்றவை ஆவியாகவோ, பேயாகவோ அலைவதாக யாருமே கூறுவதில்லை. அப்படிக் கூறினால் அதை நாம் நம்புவோமா? அதென்ன, மனித உயிர்களுக்.கு மட்டும் மரணத்திற்குப் பின் இத்தனை கற்பனைகள்? இத்தனை கற்பனைகளை மரணத்திற்குப்பின் இருப்பதாகக் கூறுபவர்கள் உண்மையில், எப்பொழுதாவது கடவுளையோ, பேய்களையோ, ஆவிகளையோ நேரில் பார்த்ததாக அறிவியல் முறையில் உறுதி செய்திருக்கிறார்களா? இல்லை என்பதே விடையாக இருக்கும்.

“மரணத்திற்கு பின் வாழ்வு’’ என்பது ஆவியாகவோ, பேயாகவோ, கடவுளாகவோ, மறு பிறவியாகவோ இல்லை. பின் எப்படி இந்தத் தலைப்பு என்று வியக்கிறீர்களா? ஆம், மரணத்திற்குப் பின் நாம் வாழ முடியும். மருத்துவ அறிவியல் அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. மூளைச் சாவு என்று மரணத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் நம் “உடல் உறுப்புகள் கொடை’’யாக மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். மூளை மீண்டும் செயல்படாத மூளைச்சாவு ஏற்பட்டவரை, மருத்துவர்கள் இதயத்துடிப்பை செயல்பாட்டிலேயே வைத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்துள்ள ஒருவரின் உறவினர்களின், இரத்தச் சொந்தங்களின் அனுமதியுடன் அவரின் இதயத்தை வேறு ஒருவருக்குப் பொருத்தி அவரை வாழ வைக்கலாம். அவரின் நுரையீரலை பழுதானவருக்குப் பொருத்தி அவருக்கு உயிரூட்ட முடியும். சிறுநீரகச் செயல்பாட்டை இழந்த இரண்டு பேருக்கு, மூளைச் சாவு அடைந்தவரின் சிறு நீரகங்களைப் பொருத்துவன் மூலம் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியும். குடிபோதையாலோ, நோய்களாலோ ஒருவரின கல்லீரல் செயலிழந்திருந்தால் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல், அவரின் வாழ்வை மீட்டுத் தரும். அவர் உயிரோட்டம் நின்றுவிட்டால் அவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் அவருடைய இரண்டு கண்களைக் கொடையாக வழங்குவதன் மூலம், இருவருக்குப் பார்வை வழங்க முடியும். மரணமடைந்தவர் கண்கள் மூலம், பார்வை இழந்த இருவர் உலகைப் பார்க்க முடியும்.

இப்பொழுது இரத்த சேமிப்பு வங்கிகள் போல் “எலும்பு சேமிப்பு வங்கிகள்’’(Bone Back) செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. மரணமடைந்தவரின் எலும்புகளைக் கூட இன்று மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இன்று வந்துவிட்டது. மூளைச்சாவு அடைந்த ஒருவர் உறுப்புகளைக் கொடையாக அளிப்பதன் மூலம் அவர் உறுப்புகளைப் பெற்றவர்கள் மூலம் உலகைப் பார்க்க முடியும் நோயாளிகளாக மாறி வாழ்விழந்து மரணமடையும் நிலையில் உள்ள அய்ந்து பேர்களை மூளைச்சாவடைந்தவர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவுதான் “மரணம்’’ என்று நிலை ‘நாட்டப் பட்டபின், “மரணத்திற்குபின் வாழ்வு’’ என்பதை மருத்துவத்துறை தன் அறிவுக்கொடையாக மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.

மரணம் நிகழ்ந்த பின் கண்களைக் கொடை-யாக வழங்குவது போல், மருத்துவக் கல்லூரிகளுக்கு நம் உடலைக் கொடையாக வழங்குவதன் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் கல்விக்கு நாம் உதவ முடியும். எரியூட்டப்பட்டு சாம்பலாவதாலோ, புதைத்து அழுகுவதாலோ யாருக்கும் பயனின்றிப் போகும் நம் உடல், உடற்கொடை கொடுப்பதன் மூலம், மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்கு நாம் பயன்பட முடியும். “கடவுளை மற, மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியார் கூற்றுக்கேற்ப மரணமடைந்தவர்கள் கடவுள்களாகிறார்கள், அவர்களை வணங்க வேண்டும் என்பதெல்லாம் மறந்து (கடவுளை மறந்து) மரணமடையும் நிலையில் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடுக்கும் மனித நேயச் (மனிதனை நினைத்து) செயல்பாட்டின் மூலம் மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ முடியும்.

(முற்றும்)

மரணம்(5)

 

மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…- மருத்துவர் இரா. கவுதமன்

2023 மருத்துவம் மார்ச் 1-15,2023

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம்.

பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு முன்பே உணர்ந்துவிட்டார் போலும்’’ என்றெல்லாம் கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால், இதற்கு எந்தவித மருத்துவ, அறிவியலும் அடிப்படையாக இல்லை. எல்லா மதங்களிலும் மரணத்தைப் பற்றி பலவகை
மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

எல்லா மதங்களிலும் மரணமடைந்தவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதுவும் திடீரென ஏற்படும் மரணங்களில் மரணமடைந்தவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் ஆவியாக மாறி அலைகின்றனர் என்ற நம்பிக்கை பரவலாக அனைவர் மனதில் இருக்கிறது. அதிலும் நல்லவர்கள், நம்மை வழி நடத்திய பெரியவர்கள் நல்ல ஆவிகளாக மரணத்திற்குப் பின்னும் நமக்கு நல்வழி காட்டுவதாகவும், கெட்டவர்கள் கெட்ட ஆவிகளாக மாறி நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை. திடீரென மரணமடைந்தவர்கள் தங்கள் ஆசை நிறைவேறும் வரை ஆவியாக அலைந்து மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்புவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

ஆவிகளைப் பற்றிய எண்ணங்களும்,நம்பிக்கைகளும் நாளடைவில் பேய்களாக உருவாகியது. பேய்கள், பிசாசுகள் கற்பனைக்கு, மதம், மத குருமார்கள், அதை வளர்த்ததும் ஒரு முக்கிய காரணம். கடவுள் பற்றிய நம்பிக்கையைப் போலவே “சாத்தானை’’ப் பற்றிய நம்பிக்கையும் பெரும்பாலான மதங்களிலும் உள்ளன. நாகரிகம் வளரும் காலத்தில் ஒரு பேரரசாக உருவாகிய கிரேக்கம் பல கடவுள்களை நம்பி, அவற்றுக்கு உருவம் கொடுத்து, சிற்பங்களாக வடிக்கத் துவங்கினர். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒரு கடவுளைக் கற்பிப்பதும், அதை வணங்கும் பழக்கமும் கிரேக்க நாட்டிலேயே உருவானது. அதற்குப் பிறகு வந்த ரோமப் பேரரசில் அரசனே கடவுள் என்ற நிலைகளில் நம்பிக்கை கொள்ளும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டனர்.

ரோமப் பேரரசு காலத்தில் தோன்றிய ‘செமிடிக்’ மதங்கள் பல உருவ வழிபாடுகளை மாற்றி, ஒரு கடவுள் தத்துவத்தை முன் வைத்தன. ‘பைபிளில் வரும் ஆப்ரகாம் கதைக்குப் பிறகு உருவான மதங்கள் “செமிடிக் மதங்கள்’’ என்றழைக்கப்பட்டன. யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் இவையனைத்தும் ஒரு கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை வைத்தன. யூதர்களின் வேதமான “தோரா’’விலும் அதிலிருந்து கிளைத்த கிறித்துவர்களின் வேதமான “பைபிளி’’லும், அதற்குப்பின் வந்த இஸ்லாமியர்களின் வேதமான “குர்ஆனி’’லும் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுவது போலவே, “சாத்தானை’’ப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

நன்மை செய்பவர் கடவுள், தீமை செய்பவர் சாத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நன்மை செய்யும் “பரிசுத்த ஆவி’’களும் தீமை செய்யும் கெட்ட ஆவிகளும், “பிசாசுகள்’’, “இரத்தக் காட்டேரிகள்’’(ஞிக்ஷீணீநீuறீணீ) தோன்றின அதே ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் நன்மை செய்யும் தேவதைகளும், தீமை செய்யும் ஆவிகளும் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்ப, அப்பகுதியின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.

பயத்தின் விளைவாகவே, அந்த ஆவிகளும், பேய்களும் தம்மைப் பிடித்துக்கொள்ளும் என்ற நிலையில் அவற்றை மனநிறைவடையச் செய்ய, அந்தக் கற்பனை உருவங்களை அமைதிப்படுத்த அவற்றை வணங்குவதும், அவற்றிற்கு வேண்டியதைப் படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
கடவுளுக்கும், மக்களுக்கும் தொடர்பு உண்டாக்கும் இடைத்தரகர்களாக, “அர்ச்சகர்களாக’’ வாழ்ந்தனர். கடவுள் ஆவிகள், பேய்கள் இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்களாக இவர்கள், மக்களால் நம்பப்பட்டனர். இந்தியாவில் ஆரியர்கள் இந்தத் தரகுப் பணிகளை செய்யத் துவங்கினார்.

அரசர்களே மதகுருமார்களின் கட்டளை-களாக ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்-கொண்டு செயல்படும் பொழுது அவர்கள் கீழ் வாழும் குடிமக்கள் மதகுருக்களின் ஆணைகளை, கடவுளின் ஆணைகளாக, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு அடங்கிப் போயினர். சர்வ வல்லமை உடைய மனிதர்களாக மதகுருக்கள் மாறிப்போயினர். பல பகுதிகளில் கடவுளின் ஆணைகளை அறிந்தவர்களான இந்த அர்ச்சகர்களே தங்கள் வாரிசுகளுக்கு மதச்சடங்குகளும், அவை தங்கு தடையின்றி தொடரும் முறைகளையும் சொல்லித் தந்தனர். அதன் விளைவாக அர்ச்சகர் பரம்பரை தோன்றியது. புரோகிதர்கள் மட்டுமே தெய்வீக சம்பிரதாயம் அறிந்தவர்களாக பல மதங்களில் மாறிப்போனார்கள்.

புரோகிதனுக்கு மட்டுமே கடவுளை அணுகும் வழிமுறைகள் தெரியும் என்றும், கடவுளின் விருப்பையும், வெறுப்பையும் காட்டும் மந்திரங்கள் அவனுக்கும், அவன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். பரம்பொருளுக்கும், பக்தனுக்கும் இடையே இந்த இடைத்தரகன் பாதி தெய்வீகத்தன்மை உடையவன் ஆனான். அவன் துணையின்றி ஒருவரும் நேரடியாக தெய்வத்தைத் தொழுவதோ, தெய்வத்துடன் தொடர்புகொள்ளவோ முடியாது என்ற நிலை நாளடைவில் மக்களிடையே பரவச் செய்யப்பட்டது. புரோகிதர்களும், அர்ச்சகர்களும், பூசாரிகளும் சமூகத்தில் அஞ்சத் தக்கவர்களாகவும், அவர்கள் சொற்கள் தெய்வீக அருள்வாக்காகவும் மாறிவிட்டது.
நாட்டை ஆளும் மன்னர்களும் அந்த தெய்வீக அருள்வாக்கிற்குக் கட்டுப்பட்டனர். மன்னர்களையும் மிஞ்சிய அதிகாரம் உடைய அவர்களைப் பார்த்து மக்கள் பயத்துடன் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த கடவுள்களை நெருங்க இந்தப் பூசாரிகள் தேவைப்பட்டனரோ, அவர்களையே மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் (பய, பக்தி) நெருங்கும் நிலை ஏற்பட்டது.

– தொடரும்

மரணம்(3) & (4)

 

மருத்துவம் : மரணம்(3)

2023 பிப்ரவரி 1-15, 2023 மருத்துவம்

மருத்துவர் இரா. கவுதமன்

உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும்.

கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும்.

தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட நாள்கள் இருக்கும் நோயாளிகளின் தசைகள் மெலியும், குரல் சரியாக எழும்பாது. அதனால் நோயாளி தெளிவின்றி மெல்லிய குரலில் பேசுவார். தோலில் புதிய செல்கள் தோன்றும் நிலை நின்று விடுவதால், தோலின் தடிமன் குறைந்து, மெலிதாகி விடும். அதனால் எளிதாக சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படும். நீண்ட நாள்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் “படுக்கைப் புண்கள்”(Bed Sores) ஏற்படும்.

எதிர்பார்ப்பின்மை, பற்றின்மை(Withdrawal and Detachment):மரணம் நிகழும் பொழுது நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்க வேண்டுமென்றோ, அவர்களிடம் உறவாட வேண்டுமென்ற உணர்வோ ஏற்படாது. களைப்பும், சலிப்பும் உண்டாகும்

உயிரோட்டம் குறைதல் (Declining Vital Signs) : உடலின் உயிரோட்டம் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கும். உடலின் இயல்பான வெப்பநிலையான 98.4குதி யில் இருந்து மெல்ல குறையத் தொடங்கும். குறையத் துவங்கும் உடல் வெப்பம் இறப்பு நிகழும் பொழுது முழுமையாகக் குறைந்து உடல் குளிர்ச்சியடைந்து விடும்.

நாடித் துடிப்பு : நாடித் துடிப்பு, இலகுவாகி, குறைந்து கொண்டே வந்து முழுமையாக நின்றுவிடும் (இயல்பு நிலை 72/நிமிடம்)

மூச்சுவிடுதல்: முதலில் மூச்செடுத்து விடலாம் அல்லது மெலிதாகி நின்றுவிடும். (நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விடுதல் இயல்பு நிலை)

இரத்த அழுத்தம் : இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் 120/80 MM of Hg என்றிருக்கும். மரணம் நிகழ்கையில் இரத்த அழுத்தம் முழுமையாகக் குறைந்து ஒன்றுமே தெரியாத நிலை ஏற்படும்.

இதய மின்னலைப் பதிவு (ECG): இயல்பு நிலையில் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். இதய மின்னலைப் பதிவு, இறப்பு ஏற்படும் பொழுது ஒரே கோடு போல் தெரியும்.

கிளர்ச்சியடைதல் (Agitation): திடீரென நோயாளி பலம் பெற்றவர் போல் கிளர்ந்தெழுவார். இரத்தக் குழாய்களில் செலுத்தப்படும் மருந்துக் குழாய்களைப் பிடுங்கி எறிய முயல்வார். படுக்கையை விட்டு எழுந்து, இறங்க முயல்வார். செவிலிய உதவியாளர்களையும், பிடிக்க வரும் உறவினர்களையும் தள்ளிவிடுவார்.

உணர்விழத்தல் : உயிரோடு இருக்கும் பொழுது இயல்பான நிலையிலிருந்த பார்த்தல், கேட்டல், நுகர்தல் மாறுபடும். தெளிவான ஓசையுடன் வெளிப்படும் பேச்சு, தெளிவின்றி, மெதுவாக, புரிந்து கொள்ள முடியாத நிலையில் வெளிப்படும். எதிரில் இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத தெளிவின்மை ஏற்படும். இந்த மாற்றங்கள் பகலைவிட, இரவில் மேலும் மங்கலாகத் தோன்றும். சிலருக்கு இறப்பதற்கு முன்
மூளையில் சில சுரப்புகள் அதிகம் சுரக்கும்.அதன் விளைவாக நோயாளி திடீரென பார்க்கவோ, பேசவோசெய்வார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவை மாறி அனைத்தும் அடங்கிவிடும். “அணைகின்ற விளக்கு பிரகாசிப்பது போல்’’, தொடுதல், கேட்டல் இரண்டுமே கடைசியாக மறையும் உணர்வுகள்.

ஆழ்மயக்கம் ((Coma) :  ஆழ்ந்த தூக்கம், ஆழ்ந்த மயக்கமாக மாறி முடிவில் விழிக்க முடியாத நிலை ஏற்பட்டு மரணம் உறுதிப்படும்.

மரணத்தின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
உடல் உறுப்புகள் இயக்கங்கள்
முழுமையாக நின்றுவிடும்.
இதயம் துடிக்காது
மூச்சு நின்றுவிடும்
மூளை செயல்பாட்டை நிறுத்திக்
கொள்ளும்.
இறப்பின் அறிகுறிகள்:
நாடித்துடிப்பு இருக்காது; நின்றுவிடும்.
மூச்சு நின்றுவிடும்.
உடல் குளிர்ந்து விடும். எந்த இயக்கமும் உடலில் இருக்காது.
கண்களின் பாப்பா (Pupils)வெளிச்சத்திற்கு சுருங்காமல் விரியாமல் நிலைக் குத்தி நின்றுவிடும்.
மரணத்திற்குப் பின் :
மரணம் நிகழ்ந்த உடனே உடலின் தசைப் பகுதிகள் அனைத்தும் இயல்பான இறுக்கம்(Toxe) தளர்ந்து, இளகிவிடும், குடல், வயிற்றுத் தசைகள் இளகுவதால் உடலின் உள் இருக்கும் மலம், சிறுநீர் வெளியேறிவிடும். தோல் இறுக்கம் தளர்ந்து, தொய்வடைந்துவிடும்.
உடல் இயல்பாக இருக்கும் எடையை விட கூடிவிடும்.
உடலின் இயல்பான வெப்பநிலையான 98.40தி முழுவதுமாகக் குறைந்து 1.50தி நிலைக்கு வந்துவிடும். அதனால்தான் உடல் குளிர்ந்துவிடுகிறது.
உடலின் இரத்த ஓட்டம், இரத்தக்குழாய்கள் செயலிழப்பதால் புவி ஈர்ப்பு விசையால் இரத்தம் கீழ்நோக்கித் தேங்கும். இரத்தம் தேங்கும் இடங்களில் தோல் கருஞ்சிவப்பாகத் தென்படும்.

உடல் இறுக்கம் (Stiffness) : உடலின் இயக்கம் நின்றுவிடுவதால் அனைத்துத் தசைகளும் இறுக்கமடையும். முதல் முதல் முகமும், கழுத்துப் பகுதியும் இறுகிவிடும், அவ்விறுக்கம் சிறிது, சிறிதாகக் கிழிறங்கி மார்பு, வயிறு, கை, கால்கள் என்று பரவும். இவ்விறுக்கம் விரல்களின் நுனிவரை பரவும்.
தசைகள் இறுகினாலும், கைகளும், கால்களும் இயக்கமின்மையால் தொய்வடைந்து விடும்.
மரணம் நிகழ்ந்த மூன்று மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை உடல் இறுக்கத்தால் விறைத்துவிடும். இதை “மரண விறைப்பு” (Rigor Mortis)என்று அழைக்கிறோம்.
மரண விறைப்பு பொதுவாக 2 மணி முதல் 4 மணிக்குள் ஏற்படும்,
மரண விறைப்பு நேரம், எதிர்பாராத மரணங்களில் மரணம் நிகழ்ந்த நேரத்தைக் கணிக்க உதவும்.
இதன் மூலம், விபத்துகள், கொலை, தற்கொலை போன்றவற்றின் மரண நேரத்தை மருத்துவர்களால் கணிக்க உதவும்.
மரணவிறைப்பு விலகி, மீண்டும் உடல் தளர்வடையும்.

மருத்துவர் இரா.கவுதமன்

“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு’’
என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல்,
“ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’
என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி.
மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் புதைத்து வைக்காமல் பாதுகாக்கும் நிலை வளரத் துவங்கியது.

மனித உடலின் அழியும் தன்மையை உணர்ந்தபின் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இறந்தபின் அந்தப் பிணம் மீண்டும் உயிர்பெறாது என்கிற எண்ணம் தோன்றும் வரை அந்தப் பிணத்திற்கு, உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்த உணவுகள், பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்கும் பழக்கம் ஏற்பட்டது (இன்றும் திதி கொடுப்பது, பிண்டம் வைப்பது. படையலிடுவது போன்ற செயல்பாடுகளின் முன்னோடியே இது).

பிணங்களின் மேல் மலர்கள், வாசனைப் பொருள்களை வைத்து வணங்குதல் போன்றவையே பின்னாள்களில் மரணச் சடங்குகளாயின. எகிப்தில் பழங்காலத்திலேயே இறப்பு என்பதில் நம்பிக்கை இல்லாமல், இறந்த உடலில் உயிர் மீண்டும் வரும் என்று நம்பினர். பிணம் அழுகுவதைக் கண்டதும், அதைப் பாதுகாக்க வேண்டி உடலைப் பதப்படுத்தும் முறைகளைக் கையாளத் துவங்கினர். முதல் கட்டத்தில் தைலங்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் தெரியாதவாறு ஒரு வகை ஆடையால் இறுக்கப் போர்த்திக் கட்டி அவற்றைப் பாதுகாக்கும் வண்ணம் பிரமிடுகளின் உள்ளே உடலை வைத்தனர். அந்த உடல் மீண்டும் உயிர் பெறும் என்கிற நம்பிக்கையில், அவர்கள் பயன்படுத்திய தங்க நகைகளால் உடலை அலங்கரித்து வைத்தனர். மற்றும் உடைகள், காசுகள், உணவு வகைகள் போன்றவையும் அந்தப் பிரமிடுகளில் வைக்கப்பட்டன. நாட்டின் அரசன் இறந்தால், அவன் மீண்டும் உயிர் பெற்றதும், அவனுக்குப் பணிவிடை செய்ய பணியாளர்களையும் உயிரோடு பிரமிடுகளில் அடைக்கும் வழக்கமும் இருந்தது.

திராவிட நாகரிகமான மொகஞ்சதாரோ,ஹரப்பா போன்ற பகுதிகளிலும், இந்தியாவின் தென் பகுதிகளிலும் பெரிய மண் பானைகளில் உடல்களை வைத்துப் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இறந்தவர்களின் ‘ஆவி’ திரும்ப வந்து, உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துமோ என்ற பயத்தின் விளைவாகவே புதைக்கும் பழக்கம் தோன்றியது. ஆனால் மரணமடைந்த பெற்றோர்கள், நண்பர்கள் தீங்கு செய்யமாட்டார்கள் என்கிற நம்பிக்கையால் அவர்களைப் புதைத்த இடத்தை வணங்குவதும், அவர்களுக்கு பிடித்ததைப் படைத்தல் போன்ற வழக்கங்கள் வளர்ந்தன. இறந்த ஆவிகள் மீண்டும் எழுந்து வராமல் இருக்க புதைத்த இடத்தில் பெரும் பாறைகள் வைக்கப்பட்டன. நாளடைவில் அந்த ஆவிகளைத் திருப்திப்படுத்த உயிர் பலி கொடுக்கும் பலிபீடங்களாக அவை மாறிப்போயின.

ஆரம்ப காலகட்டங்களில் தங்கள் தங்குமிடங்களை ஒட்டியே பிணங்களை புதைக்கும் வழக்கம் இருந்தது. தங்கள் குலத்தின் மூத்தவர்கள், (மீண்டு வராத நிலையில்) அவர்கள் நல்வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே அவர்கள் குலத்தின் தெய்வங்களாயினர். (இன்றும் கூட பூஜை அறையில் குடும்ப மூதாதையர்களின் படங்களை வைத்துக் கும்பிடும் பழக்கம் பல வீடுகளில் காணலாம். ஒரு குழுவின் தலைவன் அக்குழுவிற்கு வழிகாட்டும் நிலையிலிருந்ததால் அவன் இறந்தபின் அவனைப் புதைத்த இடத்தில் அடையாளத்திற்கு கற்களையும்,. கட்டைகளையும் நட்டு வைக்கும்வழக்கம் ஏற்பட்டது. இதையே ‘நடுகல்’ என்று அழைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. அதேபோல் நாட்டை ஆண்ட அரசன் இறந்தபின் அவனை அடக்கம் செய்த இடத்தில் மண்டபம் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன.
அறிவும் கலைத்திறனும் வளர வளர மன்னனைப் போன்ற உருவங்கள், சிற்பமாக வடிக்கும் பழக்கம் ஏற்படத் துவங்கியது. ஆரம்பக் காலகட்டங்களில் இந்தத் தலைவன் அல்லது அரசனுடைய சிலைகளே தெய்வங்களாகவும், வணங்குவதற்குரிய பொருளாகவும் மாறின. அவர்களைப் புதைத்த இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் தோன்றிய விதத்தையும், இறந்தவர்கள் கடவுள்களானதைப் பற்றியும், கோயில்கள் ஏற்பட்ட விதம் பற்றியும் பல அறிஞர்கள் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுத்துள்ளனர்.

திரு பி.ளி. பார்பஸ், திரு. து. வீசல்லு, திரு. ஃபிரேசர், திரு. ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் போன்ற சமூகவியல் ஆய்வாளர்கள் பல பகுதிகளில் வாழ்ந்த பல குழுக்களையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்து, உயிர்களின் மரணம் என்ற இயற்கை நிகழ்வுகளை ஒவ்வொரு இன மக்களும் அணுகிய முறைகளையும் ஆய்வு செய்து பல கட்டுரைகளைத் தந்துள்ளனர். மனிதன் குகைகளில் வசித்த காலம் முதல், நாகரிகமடைந்த காலம் வரை பலவற்றையும் ஆய்வு செய்தே அக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. குகைகளில் வாழ்ந்த மனிதன் இறந்த உடன் அவனைச் சுற்றி இருந்தவர்கள் அந்த உடலை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். இதுவே குகைக்கோயில்கள் தோன்றக் காரணமாயின.

ஆரம்பத்தில் அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகள், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்கள் என்ற எண்ணமும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளை ‘படையல்’ என்கிற பெயரில் வைத்து வணங்குவதும், வணக்கத்திற்குரியவர்களாக அவர்களை நினைத்ததும், அவர்களைப் புதைத்த இடத்தில் நடுகல் போன்றவற்றை நட்டு வணங்குவதும், அந்த உடல்கள் இருந்த இடத்தை வணங்குதல் போன்ற பழக்கங்கள், அறிவு வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலும் எல்லா மதங்களிலும் இன்றும் இருப்பதைக் காணலாம். பழங்காலப் பழக்க வழக்கங்கள் எல்லா மதங்களிலும் இன்றும் தொடர்ந்தாலும், “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள மாட்டார்’’ என்னும் உண்மையை மட்டும் மனிதர்கள் இன்று உணர்ந்துள்ளனர் என்பதே ‘உண்மை.’ –

(தொடரும்)