செவ்வாய், 20 டிசம்பர், 2016

இனிமேல் நடக்க முடியுமா?

வயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித் திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சார்ந்த மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளும்போது, இது புரிய ஆரம் பிக்கும்.

முழங்கால் மூட்டு

முழங்கால் மூட்டு நமது உடம்பில் உள்ள எல்லா மூட்டுகளை விடவும் பெரிதான மூட்டு. இது ஃபீமர்  எனப்படும் தொடை யெலும்பு, டிபியா  எனப்படும் கணுக்காலோடு இணையும் நீண்ட எலும்பு, முழங்கால் சில்லை இணைக்கக் கூடியது. இது நமது உடல் எடையைத் தாங்கவும், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்ற கடினமான வேலைகளின்போது அவற்றால் ஏற்படும் அழுத் தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூட்டுவாதம் என்றால் என்ன?

இடுப்பு, முழங்கால் போன்ற உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளைப் பொதுவாகவும், வெகு குறைவாகச் சிறிய விரல் மூட்டுகளைப் பாதிக்கும் பிரச்சினை மூட்டு நோய் எனப்படுகிறது.

முழங்கால் மூட்டுவாதம் யாரை பாதிக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும், மூட்டுவாதம் முதுமை காரணமாக ஏற்படும் நோய் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த நிலைப்பாடு இப்போது மாறி, 40-45 வயதிலும்கூட அது தாக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. முழங்கால் மூட்டுவாதம் ஏற்படுவதற்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகின்றனர்:

40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பெண்கள்
உடல்பருமன் கொண்டவர்கள்

இளம்வயதில் முழங்கால் காயமடைந்தவர்கள் அல்லது அதற்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
பலவீனமான முழங்கால் தசைகளைக் கொண்டவர்கள்

மூட்டுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்பவர்கள்

அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்பவர்கள்

மூட்டுவாதத்தால் மூட்டுக்குள் என்ன நடக்கிறது?

முதுமை காரணமாக வலுவிழக்கும் மூட்டின் உள்ள மைப்புகள், அதிக உடல் எடை, காயம், தசை வலிமையின்மை போன்ற காரணங்களால் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, மூட்டின் குருத்தெலும்பு மெல்லத் தேயத் தொடங்கிச் சிதைய ஆரம்பிக்கிறது.

இதற்கு எதிர்வினையாக, மூட்டு எலும்புகளின் நுனியில் சிறு ஊசிகள் போன்று புதிய எலும்பு வளரத் தொடங்கி நுண்நரம்புகளைக் குத்தி வலியை ஏற்படுத்தும். இவை மட்டுமல்லாது மூட்டுஉறை, தசைநார்கள் தடித்துச் சுருங்கி ஒட்டுமொத்த மூட்டையும் உருக்குலைக்கும். இப்படி மூட்டின் அனைத்து அமைப்புகளும் பாதிக்கப்படுவதால் இது முழு மூட்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.

முழங்கால் மூட்டுவாதத்தின் அறிகுறிகள் என்ன?

மூட்டு வலி, 30 நிமிடங்களுக்கு மிகாத மூட்டு விறைப்புத் தன்மை, மூட்டு வீக்கம், மூட்டை முழுதாக மடக்க அல்லது நீட்ட முடியாத நிலை, மூட்டை அசைக்கும்போது ஏற்படும் உராய்வு சத்தம் போன்றவை.

அன்றாட பிரச்சினைகளைப் பொறுத்தவரை, நடப்பது, மாடிப்படி ஏறுவது, நிற்பது, எழுந்திருப்பது, காலை மடக்கி உட்காருவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற சாதாரண நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமமும் அயர்ச்சியும் ஏற்படும். மேலும், வீட்டு விசேஷங்களில் பங்கெடுப்பது, பண்டிகைகளைக் கொண்டாடுவது, பொழுதுபோக்குச் செயல் பாடுகள், விளையாட்டுகளில் பங்கேற்பது உள்ளிட்டவையும் கேள்விக்குறியாகும். சுருக்கமாக, ஒரு நபரின் செயல்பாடு, வாழ்க்கைத் தரத்தில் குறைவு ஏற்படும்.

மூட்டுவாதத்தால் சாதாரண இயங்கு நிலையிலிருந்து, 'மூட்டுச் செயலிழப்பு' என்ற இறுதி நிலையை எட்டுவதற்குச் சராசரியாக 10-15 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மூட்டுவாதம் கொண்ட வர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான அறிகுறிகள், அன்றாடப் பிரச்சினைகள், சிகிச்சைக்கான தேவைகளைக் கொண்டிருப்ப தில்லை.

சிலருக்கு மிதமான அளவில் பிரச்சினைகள் இருக்கலாம், வேறு சிலருக்கு மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மிகக் கடுமையான பிரச்சினை இருக்கலாம். ஒவ் வொருவருக்கும் ஏற்றவாறு வலி நிவாரணி, மருந்தில்லா சிகிச் சைகள், மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை எனப் பல்வேறுபட்ட சிகிச்சைத் தேர்வுகள் உள்ளன.

முழங்கால் மூட்டுவாதத்தைக் குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால், முழங்கால் மூட்டுவாதம் உரு வாவதை முன்கூட்டியே தடுப்பதற்கு, கண்டறிந்தவுடன் மோசமடையாமல் கட்டுப்படுத்துவது பெருமளவில் சாத்தியமே. அவற்றில் மிக அவசியமானவை: உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, மூட்டின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல்

உடல் எடை குறைப்பு

ஆரோக்கியமான உடல் எடையைவிட அதிகரிக்கும் ஒவ் வொரு 5 கிலோவுக்கும் முழங்கால் மூட்டுவாதத்துக்கான ஆபத்து 36 மடங்கு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

அதிக உடல் எடை மூட்டுவலியை அதிகமாக்கி, உடலியக்கத்தைக் குறைக்கும், அதனால் மேலும் எடை கூடித் தசைகள் வலுவிழந்து, மூட்டு அழுத்தம், வலி அதிகரிப்பு போன்றவற்றின் சுழற்சி மீண்டும் ஏற்படுகிறது. அதிக எடை கொண்டவர்களில், மூட்டு வாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக மொத்த எடையில் 10% வரை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறது.

உடல் எடையைக் குறைப்பதற்கு, உணவு மாற்றம் மட்டு மல்லாமல் முழு உடல் சார்ந்த உடற்பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கும். அதே போல், எடையைக் குறைத்த பின்னர், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு உடற்பயிற்சி நிபுணர், உணவியல் வல்லுநர் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பதும் பயனளிக்கும்.

காலுக்கான உடற்பயிற்சிகள்

வலுவற்ற முழங்கால் தசைகள் மூட்டுவாதம் உண்டாவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பதால், அவற்றைப் பலப்படுத்துவது அவசியம். ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் கண்காணிப்பில் தொடர்ச்சியாகச் செய்யப்படும் தசை வலிமைப் பயிற்சிகள் (குறிப்பாகக் குவாட்ரி செப்ஸ் எனப்படும் முன்தொடை தசை அல்லது முழு காலுக்கான வலிமை பயிற்சிகள்), நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது போன்ற ஏரோபிக் பயிற்சிகளை ஆறு மாதங் களுக்குச் செய்துவந்தால் மூட்டுவலி குறைந்து, செயல்பாடு அதிகரித்து, வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவது நிரூபிக்கப் பட்டுள்ளது.

நடப்பது, மிதிவண்டி ஓட்டும் உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவையா?

மூட்டுவாதம் கொண்டவர்கள் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்து உடல் செயல்பாடின் மையை முடிந்தவரை குறைக்க வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம்  19 முதல் 64 வரை வயது உடையவர்களின் ஆரோக்கியத்துக்குக் குறைந்த பட்சம் வாரத்துக்கு 150 நிமிடங்கள் துடிப்பான நடைப்பயிற்சி, யோகா, மிதிவண்டி ஓட்டுவது போன்ற மிதமான ஏரோபிக் பயிற்சி களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

இந்த உடற்பயிற்சி வழிகாட்டல்கள் மூட்டுவாதம் உடைய வர்களுக்கும் பொருந்தும். ஆரம்பத்தில் சிறிது சிரமமாகத் தெரிந் தாலும், உங்களால் முடிந்த மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியைச் செய்ய முயற்சியுங்கள். 150 நிமிடங்களை 40-50 நிமிடங்கள் எனப் பிரித்துக்கொண்டு வாரம் 3 அல்லது 4 நாட்கள் செய்யலாம். இதுவரை உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வாரம் 150 நிமி டங்களை அவசரப்படாமல் படிப்படியாக அடை வதை இலக்காகக் கொண்டு செயல்படலாம். வாய்ப்பிருந்தால் கால்கள், இடுப்பு, முதுகு, வயிறு, கைகளின் தசைகளுக்கு வலிமை தரும் பயிற்சியை வாரம் இரண்டு முறை செய்தால், மேலும் பலன்கள் கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவாதம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளைவிட, தொடர்ச்சியான உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கி, வலியைக் குறைத்து, உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்து, மூட்டின் ஆரோக் கியத்தை மேம்படுத்தி நன்மையே செய்யும்.

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் கூடுதல் பயன்கள்: இதய நோய், நீரிழிவு நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்; உடல் எடையைச் சீராக வைத்திருக்க முடியும்; மனச் சோர்வு, பதற்றம் இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க முடியும்; அன்றாட வேலைகளைச் செய்யும் திறனைப் பராமரிக்க முடியும்.

முழங்கால் மூட்டில் அதிகப்படி அழுத்தத்தைக் குறைப்பதற்கான எளிய வழிகள்

மூட்டு வலி, அதிகப்படியான மூட்டு அழுத்தத்தைக் குறைக்க வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தலாம்

மாடிப்படி ஏறும்போது, பக்கவாட்டு பிடியைப் பிடித்துக் கொண்டு ஏறலாம்

மாடிப்படி ஏறும்போது, பாதிக்கப்படாத/அல்லது குறை வாக வலியுள்ள காலை முதலில் வைத்து ஏறவும்

வெகு நேரம் காலை மடக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டாம்

ஹை-ஹீல்ஸ் செருப்புகளை அணிய வேண்டாம். இது இடுப்பு, பாதம், முழங்காலின் அமைப்பை மாற்றி மூட்டு களில் கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும்

நீங்கள் கடினமான உடலுழைப்பு தேவைப்படும் வேலையைச் செய்பவரானால், உங்கள் வேலையைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்யலாம் அல்லது தேவைக்கேற்றவாறு மற்றவர் உதவியைப் பெறலாம். 
-விடுதலை,19.12.16

வியாழன், 8 டிசம்பர், 2016

வெயில் ஏன் சோர்வடைய வைக்கிறது?

மனிதர்கள் வெப்ப ரத்தப் பிராணிகள். அதனால் நம்முடைய உடல் எப்போதும் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும். பாம்பு, தவளை போன்ற குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்பநிலை, சூரியன் இருக்கும்போது வெப்பமாகவும், சூரியன் மறைந்த பிறகு குளிராகவும் மாறிவிடும்.

தண்ணீர் வறட்சி

வெயிலில் நாம் வெளியே செல்லும்போது நம் முடைய உடல் வெப்பத்தைப் பெறும். அதேநேரம் அதிகம் வெப்பமடைந்துவிடவும் கூடாது. அப்படி அதிக வெப்பமடைந்தால் வெப்ப மயக்கம் போன்ற பிரச்சினை உடலைக் கடுமையாகப் பாதிக்கலாம். வெயிலில் மட்டுமல்லாமல் கடுமையாக உழைக்கும்போதும் உடல் வெப்பமடையும்.

இப்படி அதிக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு, வியர்வையை வெளியேற்றி உடல் தன்னையே குளுமைப்படுத்தித் தற்காத்துக்கொள்கிறது. அதிகமாக வியர்த்த பிறகு போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், ஒரு புள்ளியில் உடலில் உள்ள தண்ணீர் பெருமளவு வற்றிப் போய் உடலின் உள்ளுறுப்புகள் வறண்டுவிடும். இதனால்தான் உடல் சோர்வும் மந்தமும் அடைகிறது. அப்போது சாதாரண வேலையைச் செய்யவும், நடக்கவும், கையைத் தூக்கவும்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

உள்ளே ஒரு கடிகாரம்

வெப்பம் மட்டுமில்லாமல், குளிரும் மக்களைச் சோர்வுறச் செய்யும். நாம் வெப்பரத்தப் பிராணியாக இருப்பதால்தான் இதுவும் நடக்கிறது. குளிர்காலத்தில் உடல் தன் இயல்பான வெப்பநிலையைப் பராமரிப்பதற்கு நிறைய ஆற்றலைச் செலவழிக்கும். உடல் நடுக்கம், பற்கள் கிட்டிப்பதுகூட, குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு உடல் ஆற்றலைச் செலவழிக்கும் ஒரு வழிதான்.

அப்புறம் சூரியன் நம் உடலைச் சோர்வடைய மட்டுமே வைக்கிறது என்று நினைப்பதும், தவறான நம்பிக்கை. நமது உடலுக்குள்   என்றொரு கடிகாரம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. இந்தக் கடிகாரத்தை இயக்குவது சூரியனே.

காலை ஆனவுடன் எழுந்திருக்க வேண்டும் என்ற தூண்டு தலைத் தருவதும், மாலை ஆனவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதும் இந்தக் கடிகாரம்தான். இந்தக் கடிகாரத்தின் பேச்சைக் கேட்டு நடந்தாலே, நம் உடலில் பாதி விஷயம் ஒழுங்காக நடக்கும். ஆனால், நாம் கேட்கிறோமா
-விடுதலை,8.12.16

இருமலும் தும்மலும் எத்தனை மீட்டருக்குப் போகும்?

காற்றில் பரவும் கிருமிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், நம்மைச் சுற்றி யாராவது இருமுவதை நினைத்துப் பார்ப்பதே மிகப் பெரிய பயங்கரமான அனுபவம்தான்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத் தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியின்படி, உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவர் மட்டுமல்ல, தொலைவில் இருப்பவர் இருமி னாலும் தும்மினாலும்கூட நமக்கு நோய் தொற்றுவதற்கான சாத்தியம் மிகமிக அதிகம்.

இருமும்போது ஒருவர் வெளியிடும் திரவத் துளிகள் ஆறு மீட்டர் தொலைவுக்குப் பயணிக்கும். அதேநேரம் தும்மும்போது வெளியிடும் திரவத் துளிகள் எட்டு மீட்டர் தொலைவுக்குப் பயணிக்குமாம்.

அப்படிப் பார்த்தால் இந்த இரண்டு இடைவெளிகளுக்குள் நாம் எங்கே இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால், வெளியிடப்படும் திரவத் துளிகளில் உள்ள நோய்க் கிருமிகள் 10 நிமிடங்கள்வரை உயிருடன் இருக்கக்கூடியவை.

நோய் பரப்ப வேண்டாம்

இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாடுகளில் உடல் நலம்-நோய்த்தொற்று பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான், ஒருவருக்கு உள்ள நோய்த் தொற்று பெரும்பாலோருக்கு எளிதாகப் பரப்பப்படுகிறது. இது மிக முக்கியமான சமூகச் சீர்கேடு.

ஏனென்றால் காசநோய் போன்ற தீவிர-தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்கள், பலருடைய அலட்சியம் காரணமாகவே மோசமாகப் பரவுகின்றன.

தும்மும்போதும், இருமும் போதும் மூக்கு, வாயிலிருந்து கிருமிகள் வெளியேறாமல் இருக்கக் கைக்குட்டைத் துணியையும் டிஷ்யு பேப்பரையும் பயன்படுத்த வேண்டும். இது அடுத்தவருக்கு மட்டுமல் லாமல், நமது உடல்நலனுக்குமேகூட ரொம்ப நல்லது.

அப்புறம் ஒரு விஷயம் எவ்வளவு சிறியதாகவும், பெரிதாகவும் தும்மினாலும் நம்மால் கண்களைத் திறந்துகொண்டு தும்ம முடியாது. தும்மும்போது இதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்க மாட்டோம் என்றாலும், கண்களைத் திறந்துகொண்டு தும்முவது மட்டும் சாத்தியமில்லை.

-விடுதலை,8.12.16

புதன், 7 டிசம்பர், 2016

அரிப்பு ஏற்படுவது ஏன்?


அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்து விட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்து வதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத் துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின்  ஈ என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் எனும் வேதிப் பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? தொலைபேசி (லேன்ட்-லைன்) போன் வேலை செய்யும் கருவி போன்றது இது. தொலை பேசியில் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்பு கேபிள்தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல் கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறி யும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக் கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக் கொள்ளா விட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, நிக்கல் வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் கரப்பான் நோய் என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர் ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத் துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், தோல் மடிப்பு நோய்  தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத் தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக் கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப் பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்க லாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச் சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரண மாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம்.

குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத் துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ஹிஸ்டீரியா என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

உடம்பு அரித்தால் ஒரு அவில் போட்டுக்கோ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.
-விடுதலை,5.12.16