செவ்வாய், 18 ஜூலை, 2017

ஆரோக்கியம் காக்கப் போராடிய அய்வர்



ஆதி மருத்துவர்கள் பெண்கள்தான். உணவில் தொடங்கி மகப்பேறுவரை பெண்களே மருத்துவத்தின் ஆணிவேராக அன்றும் இன்றும் திகழ்ந்துவருகின்றனர். நவீன அறிவியலின் ஒரு கூறான அலோபதி மருத்துவத் துறையில் 19ஆம் நூற்றாண்டில் நுழைந்து பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். இந்திய அளவில் அப்படி சாதித்த அய்ந்து பெண்கள் பற்றிப் பார்ப்போம்.

சென்னையின் அடையாளம்

பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலம். இந்தப் பின்னணியில் ஒரு பெண் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டது எங்கே தெரியுமா? சென்னையில்! 1875இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் மருத்துவம் படிக்க முடிந்தது. சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.

இருபது ஆண்டு சேவை

எடித் பீச்சி, பிரிட்டனின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவர். பெண்ணுரிமைச் செயல்பாட் டாளரும் கூட. ஸ்விட்சர்லாந்தில் 1877இல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1883ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பம்பாயின் புகழ்பெற்ற காமா மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை ஏற்று சேவை புரிந்தார். 1896இல் பம்பாயில் பரவிய ஆட்கொல்லி நோயான பிளேக், காலராவைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பணியாற்றினார். ஆண்  பெண் மருத்துவர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டை எதிர்த்து, சம ஊதியம் தர வலியுறுத்தினார். பம்பாய் பல்கலைக்கழக செனட்டின் முதல் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

நாட்டின் முதல் பெண்

ஆனந்தி பாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்ணும்கூட. குழந்தைத் திருமணம் செய்துகொண் டாலும், பெண்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருடைய கணவர் கோபால் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக் காவில் மருத்துவம் படிக்க ஆனந்தியைத் தனியாக அனுப் பும் துணிச்சலான முடிவை 1883இல் அவர் எடுத்தார். மேற்கு நாடு ஒன்றுக்கு ஆனந்தி படிக்கச் செல்வதை இந்துப் பழைமைவாதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

உலகிலேயே இரண்டாவது மகளிர் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா கல்லூரியில் 19 வயதில் ஆனந்தி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். இளங்கலைப் படிப்பை முடித்தாலும், முதுகலை படிப்பை முடிக்க இயலாத வகையில், அவரை காசநோய் தாக்கியது. 1886இல் ஆனந்தி நாடு திரும்பினார். கோலாப்பூர் அரசவை, அந்த ஊரில் இருந்த ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவ மனையின் பெண்கள் பிரிவுத் தலைவராக அவரை நியமித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர் காலமானார்.

இந்தியாவில் பயின்ற முதல் பெண்

காதம்பினி கங்குலி. கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் படித்ததன் மூலம் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் பட்டம் (1878) பெற்றவரும் இவர்தான். 1883இல் பிரம்ம ஞான சபை சீர்திருத்தவாதி துவாரகாநாத் கங்குலியை அவர் மணந்தார். அதற்குப் பிறகு ஆசிரி யர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பினி மருத்துவம் படித்தார்.

இதன்மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பினி பெற்றார். ஆனந்தி பாய் அமெரிக்காவிலும், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் ஒரே ஆண்டில் (1886) மருத்துவப் பட்டம் பெற்றனர். 1892இல் பிரிட்டனுக்குச் சென்று தன் மருத்துவப் படிப்பை கூர்தீட்டிக் கொண்டார். இந்தியா திரும்பிய கொஞ்ச காலத்திலேயே தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

மக்கள் சேவைக்கு வந்த முதல் பெண்

ரக்மா பாய், நாட்டின் மகளிர் மருத்துவமனை ஒன்றில் சேவையாற்றிய முதல் இந்தியப் பெண். அவரது மாற்றாந்தந்தை ஷாகாராம் அர்ஜுன் மருத்துவர் என்பது இதற்கு முக்கியக் காரணம். குழந்தைத் திருமணத்துக்கு ஆட்பட்டாலும், மணமகன் வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவம் படிக்க முனைந்தார் ரக்மா. அதற்கான சட்டப் போராட்டத்திலும் வென்றார். 

லண்டன் மருத்துவப் பள்ளியில் அவர் படிக்கச் செல்வதற்கான செலவுக்குப் பொது நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட ஊக்குவித்தவர் பம்பாய் காமா மருத்துவ மனையின் பெண் மருத்துவர் எடித் பீச்சி. 1889இல் லண்டன் சென்ற ரக்மா, 1895இல் நாடு திரும்பி சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். அந்த வகையில் பொது மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்ணும் இவரே.

விடுதலை,18.7.17

புதன், 12 ஜூலை, 2017

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?




பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊத காரணமாகிறது.

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்ளாததுதான்.  பழச் சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, அவ்வப்பொழுது பழச் சாறுகளைப் பிழிந்தே அருந்த வேண்டும்.

டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப் பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டவே வேண்டாம். சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க கூடாது. பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களில் உள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

நமக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கும். பழச்சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பழச்சாறு குடிக்கும்போது, மடமடவென குடிக்காமல், மெதுவாக சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.

ஏனென்றால், பழச்சாற்றை விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ் நீரோடு நன்கு கலக்கச்செய்து பின்னர் உள்ளே அனுப்ப வேண்டும். இப்படி செய்யும் போது, உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
-விடுதலை,3.7.17

.

எலும்புகள் வலுப்பட உட்கொள்ள வேண்டிய உணவுகள்




உடலுக்குத் தேவைப்படும் சத்துக்களில் கால்சியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனமடைவதோடு ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கே கால்சியம் சத்து குறைபாடு வருகிறது என்ற நிலை மாறி, இன்று ஆண்களும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்குத் தேவையான வைட்டமின் டி சத்தும் நமக்கு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிலெல்லாம் கால்சியம் மற்றும் வைட்ட மின் டி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா...

பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நாம் அறிந்ததே. அதனால், தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையின் பேரில் புரோட்டீன் பவுடர் கலந்தும் பால் அருந்தலாம். தயிரிலும் அதே அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும் புரதத்துடன் கால்சியம் நிறைந்திருக்கிறது.

அதேபோல், உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று அத்திப்பழத் துண்டுகளை சாப்பிடலாம். முக்கியமாக, அனைத்து கடல் உணவுகளும் கால்சியம் சத்துப்பொருளை உள்ளடக்கியவையே.

பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகளும் காணப்படு கின்றன.

சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதேபோல் கருப்பு உளுந்து, சோயாபீன்ஸ், கொள்ளு போன்றவைகளிலும் கால்சியம் உள்ளது. 

நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை



இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக     ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப் பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந் தைகள் பாதிக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக் கிறது.குழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்தசோகை யைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர்.

ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப் படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்த சோகையுடன் குழந்தை பிறக்கிறது. குழந்தை குறை மாதத்திலும் பிறக் கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக் கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.

அதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
-விடுதலை,3.7.17

நீரிழிவால் வரும் மன அழுத்தம்!



நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை... பிரிக்க முடியாதவை... நீண்டகாலமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மனச்சோர்வு நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல மனச்சோர்வு நோயால் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாலும் அது சர்க்கரை நோயில் கொண்டு வந்துவிடும் அபாயமும் இருக்கிறது.மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டு விட்டு, எந்த வேலையும் செய்யாமல் புகை, மது போன்ற பழக்க வழக்கங்களுடன் உடலை குண்டாக்கிக்கொண்டே இருந்தால் பி.எம்.அய். எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் அதிகரிக்கும். பி.எம்.அய் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகம்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பத்து சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அதிலும் 60 வயதை நெருங்குபவர்களாக இருந்தால் சுமார் 23 சதவிகிதம்  பேருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன் போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கான காரணிகளாக சொல்லப்பட்டாலும் மேற்சொன்ன ஆய்வில் இன்னொன்றும் தெரியவந்தது. அது மனச்சோர்வு நோயால் சிரமப்பட்டாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மையே. பெண்களாக இருப்பின் இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

அதாவது, மனச்சோர்வு பாதித்த ஆண்களைக் காட்டிலும் பெண் களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இதையே மாற்றிப் போட்டு பார்க்கலாம். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து மனச்சோர்வு நோய். சர்க்கரை வியாதி இல்லாத பெண்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு மனச்சோர்வு வருவதற்கு 29 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் முடிவுகள்தான் இவை.

எல்லாம் சரி, சர்க்கரை நோய் வந்தால் ஏன் மனச்சோர்வு வருகிறது? சர்க்கரை நோயினால் நமது உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றங்கள் ஒரு காரணம். அந்த நோயுடன் நடத்தக்கூடிய வாழ்க்கை இருக்கிறதே... அது இன்னொரு காரணம். பாதிப் பேருக்கு மேல் தனக்கு சர்க்கரை இருக்கிறது என்று தெரியவந்த அந்த நாளில் ஏதோ உயிர்கொல்லி நோய் வந்ததைப் போன்று அதீத மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். நேரத்துக்கு உணவு சாப்பிடலைன்னா குளுக்கோஸ் இறங்கிருது. முன்னாடி மாதிரி தாம்பத்தியத்திலும் ஆர்வம் இல்லை... என்ற ரீதியில் சர்க்கரை நோயாளிகள் புலம்புவதில் ஏகப்பட்ட நடைமுறை உண்மைகள் உண்டு.

-விடுதலை,3.7.17

புதன், 5 ஜூலை, 2017

வாந்திக்கு என்ன காரணம்?



வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரி யாவோ ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்சார் செல்கள் உடனே உணர்ந்து, வேகஸ் நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்து விட்டால், அந்தச் செய்தியை வாந்தி மய்யத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, வாந்தி எடு என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும். பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத்தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப் பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள வால்வு திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எது வானாலும் ஒவ் என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறி விப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

முக்கியக் காரணங்கள்

கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன்சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந் துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தலாம். முதல் நாள் இரவில் நிறைய மது குடித்த வர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடி படுதல், மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.
காதும் ஒரு காரணம்தான்!

காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினை களாலும் வாந்தி வரும். காதில் 'வெஸ்டிபுலர் அபாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்க வைக்கிறது; உட்கார வைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்த அமைப்பு தூண்டப் படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்து / கடல் / விமானப் பயணங்களின்போது வாந்தி வருகிறது.

உளவியல் காரணங்கள்

சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாகலாம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ள பயப்படு பவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள், காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ் வகையைச் சேர்ந்தது. உங்களுக்கு என்ன காரணத்தால் வாந்தி வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். பலன் கிடைக்கும். 

குக்கர் உணவும், உடல் உபாதைகளும்

நம் மக்கள் நீரின் பண்பை அளப்பதற்கு முன்பு ஒரு அளவீட்டு முறை வைத்திருந்தனர். அது என்ன வென்றால் துவரம்பருப்பு எளிதில் வேகக்கூடிய நீர் - மென்னீர் என்றும், நேரம் எடுத்துக்கொள்ளும் நீர் - கடினநீர் என்றும் வகை பிரித்து வைத்திருந்தனர்.

மென்னீரின் உச்சம் மழைநீர். மழைநீரில் சமைத் தால் சோறு, பருப்பு அத்தனையும் தனிச்சிறப்புடன் சுவைக்கும். கொதிக்கும் மழைநீரில் பருப்பைப் போட்டால் அடுத்த நொடியில் காதலன் தொட்ட காதலி பூரித்து மலர்வாளே, அதுபோல் பருப்பு மலர்ந்து இளகிச் சிரிக்கும்.

மெய்யாகவே பருப்பின் புறவிளிம்பு பூப்போல விரிந்து இருப்பதை நம்மால் காண முடியும். இந்த முறையில் பருப்பு மலர்ந்து உயிருக்கு ஆற்றல் வழங்கும். முன்னரே சொன்னதுபோல குக்கரில் அவிக்கும் பருப்பு, விருப்பமற்ற தீண்டலுக்கு உள்ளான பெண்போல, இறுகி விரைத்துக்கொள்ளும். குக்கரில் வேக வைக்கும் போது பருப்பில் உறைந்திருக்கும் காற்று ஆற்றல், பிரிந்து வெளியேறுவதில்லை. உள்ளுக்குள்ளேயே அடைத்து திணிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை நாம் உண்ணும்போதும் காற்றுச் சத்து உடலில் உயர்கிறது. அடுத்த வேளை உண்கிறபோது முன்னர் உண்ட உணவு முழுமையாகச் செரித்திருந்தால், அதாவது வாயு வடிவிலான கழிவு முழுமையாக உடலில் இருந்து நீங்கியிருந்தால், காற்றுக் கழிவின் தேக்கம் இருக்காது. இப்படி உண்பதற்கான அடிப்படை விதியை மீறிக்கொண்டே இருப்ப தால்தான் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பின்னர் பருப்பு, கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற சத்து மிகுந்த உணவை உண்டதும், வயிறு உப்பிப் பொருமுகிறது. தொடர்ந்து வாயுப்பிடிப்பு உடல் முழுதும் சுற்றிச் சுழன்று அடிக்கிறது.

-விடுதலை,26.6.17