திங்கள், 24 அக்டோபர், 2022

சிறுநீரகச் செயலிழப்பு - (91)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (91)

டிசம்பர் 16-31,2021

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic Renal Failure):

உடலின் பிற நோய்கள் காரணமாக சிறுநீரகங்கள் மெதுவாகப் பாதிப்படைந்து கொண்டே வரும். நீரிழிவு நோய் (Diabetes), மிகு இரத்த அழுத்தம் (Hypertension), இரத்தக் குழாய் நோய்கள் (Vascular Diseases), நாளமில்லாச் சுரப்பி நோய்கள் (endocrine glandular disease), கல்லீரல் நோய்கள் (Hepatic Diseases) ஆகிய பல நோய்கள் மெல்ல மெல்ல நீண்ட காலத்தில் சிறு நீரகங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பாதிப்பு என்று எந்த அறிகுறிகளுமே தெரியாது. சிறுநீரகங்கள் பாதிப்பு  அளவைத் தாண்டும்பொழுதுதான் மெல்ல, மெல்ல சிறுநீரகங்கள் பாதிப்பு அறிகுறிகளாகத் தெரியத் துவங்கும். அந்த நேரத்தில் மருத்துவம் செய்து முழுமையாக சிறுநீரக நோய்களிலிருந்து வெளியேறினால், சிறுநீரகங்கள் செயலிழப்பைத் தவிர்க்க முடியும். ஆனால், மற்ற உறுப்பு நோய்களை முழுமையாகச் சீராக்காவிட்டால் மீண்டும் சிறுநீரகங்கள் பாதிப்பும், செயலிழப்பும் தவிர்க்க முடியாது.

நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மீது குறுகிய கால நோய்த் தாக்குதல்: (Acute-on-Chronic Renal Failure):

ஏற்கனவே நாள்பட்ட சிறுநீரகங்கள் பாதிப்படைந்த சிறுநீரகங்கள் மேல் திடீரென்று ஏற்படும் உடனடி பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சரியாக சிறுநீரகங்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிந்து மருத்துவம் செய்தல் உடனடி தேவை. ஆரம்ப நிலை மருத்துவம், குறுகிய கால நோய்ப் பாதிப்பைச் சீராக்குவதில் நோய்க்கு மருத்துவம் செய்து கொண்டிருப்பர். உடனடி ஆபத்துகள் சீரான பின்பு, நீண்ட நாள் மருத்துவம் நோயாளியைக் காப்பாற்றும். அப்பொழுதுதான் நீண்ட நாள் சிறுநீரகங்கள் நோய் மருத்துவரால் அறியப்பட்டால் அதற்கான மருத்துவம் தொடங்கப்படும்.

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கான காரணிகள்:

உடனடிச் சீறுசீரகச் செயலிழப்பு – சிறுநீரகங்கள் திடீரென செயல் இழப்பதற்கான காரணிகள்:

*             நஞ்சுகள், நச்சுத் தன்மை உடைய செயற்கை உரங்கள், வேண்டுமென்றோ, (தற்கொலை எண்ணத்துடன்) அல்லது எதிர்பாராமலோ உண்டுவிட்டால் அது நேரடியாக சிறுநீரகங்களைப் பாதிக்கும்.

*               விபத்து போன்ற நிகழ்வுகளால் சிறுநீரகங்-களில் அடிபட்டால் சிறுநீரகம் செயலிழந்து விடும்.

*               சிறுநீரகங்களில் (Poly Cystic Kidney) எளிதில் பல நீர்க் கட்டிகள் அதிகமாவதாலும், பெரியதாவதாலும் அவை சிறுநீரகங்களின் செயல்பாடுகளைத் தடுத்து, செயலிழப்பை ஏற்படுத்தும்.

*               சீராகாத நீண்ட நாள் நோய்த் தொற்று, வடிப்பான்களை (Nephrons) அழித்து, சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.

*               மரபணு (Genetical) மாற்றங்கள் உடைய சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாகிறது என மருத்துவர்கள் கண்டுள்ளனர்.

*               HIV (எய்ட்ஸ்) நோய் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும்.

நோயின் அறிகுறிகள்: சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்பவும், துணை நோய்களின் நிலைமைக்கு ஏற்பவும் மாறுபாடாகத் தெரியும். ஆரம்ப நிலை நோயில் பொதுவாக, குறிப்பாக எந்த அறிகுறிகளும் வெளிப்-படையாகத் தெரியாது. சிறுநீரக வடிப்பான்கள் செயலிழப்பு அதிகமாகும் போது, கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படும். கழிவுகள் முதலில் இரத்தத்தில் கலந்து தேங்கத் துவங்கும். பிறகு உடலில் தேங்கும். உடலில் தேங்கும் கழிவுகளான நைட்ரஜன், யூரியா போன்றவை நச்சுத் தன்மை உடையவை. நைட்ரஜன் கழிவுகள் வயிற்றில் தேங்கும். வயிற்றில் அதனால் நீர் கோக்கத் துவங்கும். அதனால் வயிறு உப்பத் துவங்கும். (Azotemia) பெருத்த வயிறு, நாளடைவில் மூச்சு விடுவதில் தொல்லை ஏற்படுத்தும். அதேபோன்று யூரியா இரத்தத்தில் கலந்து, கரைய முடியாத நிலை ஏற்படும்பொழுது “யூரியா’’ மிகுந்து “மிகை இரத்த யூரியா’’ (Uremia) நிலைக்குச் சென்று விடும். இதனால் இரத்தத்தில் நச்சுத் தன்மை உண்டாகிவிடும். இது தவிர மேலும் பல அறிகுறிகள் தோன்றத் துவங்கும். யூரியா, இரத்தத்தில் மிகும்பொழுது,

*             குமட்டல், வாந்தி

*              நீர்மக் குறைபாடு (Dehydration)

*               எடைக்குறைவு

*               இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Nocturnal Urination)

*              இயல்பைவிட அதிகமாக, வெளிர்த்த சிறுநீர் கழித்தல் (Pale Urine)

*               சிலருக்கு அடர்த்தியான, குறைந்தளவு சிறுநீர் கழிக்கும் நிலை.

*               சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும்.

*               சிறுநீர் கழிக்கும் போது வலி, அதிகம் முக்கி வெளியேற்றும் நிலை.

*              பாஸ்பேட் நச்சு இரத்தத்தில் சேர்வதால்.

*               அரிப்பு.

*              எலும்புகள் பாதிப்பு.

*               எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் ஒன்று சேராமை.

*               தசைப் பிடிப்பு (Cramps) போன்றவை பாஸ்பேட் நச்சு மிகுவதால் ஏற்படும்.

*               பொட்டாசியம் இரத்தத்தில் மிகுந்த அளவு சேர்வதால்: (Hyperkalemia) இதயத் துடிப்பு பாதிப்பு (Abnormal heart rhythms)

*               நாளடைவில் இதயச் செயலிழப்பு (Heart failure)

(தொடரும்…)

சிறுநீரகச் செயலிழப்பு (90)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (90)

டிசம்பர் 1-15,2021

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு. இரா. கவுதமன்

நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. பொதுவாக சிறுநீரகங்களின் செயல்பாடு 15 சதவிகிதத்-திற்கும் குறைவாக அமையுமானால், அதை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பே “சிறுநீரக இறுதிக்கட்ட நோயின் இறுதிச் செயல்பாடாகக் (End stage kidney disease) கருதப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு, ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’’ (Acute kidney failure) என்றும், “நாள்பட்ட காலச் சிறுநீரகச் செயலிழப்பு’’ (Chronic kidney failure) என்று இருவகைப்படும். உடனடி சிறுநீரகச் செயல்பாடு திடீரென ஏற்படும். ஆனால், எளிதில் குணமடையும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு தோன்றி, மெதுவாக, மெதுவாக அதிகமாகி முழுமையாக செயலிழப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்த அளவு பாதிப்பு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பின், சிறுநீரகங்கள் மீண்டும் சரியாகாது. இயல்பு நிலை திரும்பாது. நாள்பட்ட நோயில் பெரும்பாலும் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படையும். சில நோய்களில் ஏதேனும் ஒரு சிறுநீரகம் மட்டும் பாதிப்படையும் நிலை உண்டானால், மறு சிறுநீரகம் முழுச் செயல்பாட்டில் இயங்கும். சிறுநீரகச் செயல்பாடுகள் நிற்பதற்கு, முன் நோய்கள் பலதும் காரணமாக உள்ளன. உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organisation – WHO) ஆய்வின்படி உடனடி செயலிழப்பு ஆண்டுக்கு 1000 பேருக்கு, மூவர் பெறுவதாகவும், நாள்பட்ட செயலிழப்பு 1000 பேரில் ஒருவருக்கு வருவதாகவும் ஆண்டு ஆய்வில் தெரிவித்-துள்ளது. 10,000 பேரில் மூவர் புதியதாக இந்நோயால் பாதிப்படைவதாகவும் மற்றொரு அறிக்கையில் உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறுநீரகச் செயலிழப்பு வகைகள்:

சிறுநீரகச் செயலிழப்பு, உடனடி செயலிழப்பா அல்லது நாள்பட்ட காலச் செயலிழப்பு என்பதை இரத்தத்தில் உள்ள “கிரியேட்டினின்’ (Creatinine) அளவை வைத்தே மருத்துவர்கள் முடிவு செய்வர். இரத்த சோகை (Anaemia), சிறுநீரகங்கள் சிறுத்து விடுதல் (பொதுவாக “மீள் ஒலி அலைப் பதிவு (Ultrasonography) மூலம் சிறுநீரகத்தின் அளவை அறியலாம்) போன்றவற்றைக் கொண்டும் நோயின் தன்மையை அறிய முடியும்.

உடனடி சிறுநீரகச் செயலிழப்பு:

இச்செயலிழப்பு பொதுவாக நச்சுப் பொருள்களை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ உட்கொள்வதால், அந்த நஞ்சு சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும். இதன் விளைவாக சிறுநீர் போவது முழுமையாகத் (Oliguria) தடைப்பட்டு விடும். ஒரு நாளைக்கு வளர்ந்தவர்கள் 400 மி.லி. அளவேயும், 1 கிலோ எடையுள்ள குழந்தை 0.5 மி.லி.  சிறுநீருமே கழித்தால் சிறுநீரகப் பாதிப்பை உணர்த்தும். சிறுநீரக உடனடிச் செயலிழப்பு, சிறுநீரகம் முன்புறம் (Pre renal), சிறுநீரக உட்புறம் (Intrinsic), சிறுநீரகம் பின்புறம் (Post renal) என்று மூன்று வகைப் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் நஞ்சுகள் என்ன வகை என்பதை உடனே அறிந்து, மருத்துவம் செய்யாவிடில் சிறுநீரகங்கள் சட்டென்று செயலிழந்து விடுவதோடு, மீண்டும் சீராக்க முடியாமலேயே போய்விடும். விரைவான, சரியான நஞ்சு முறிவுகள், சிறுநீர்ப் பிரிப்பு (Dialysis) போன்றவை உடனடியாக மேற்கொள்வதாலும், மற்ற உடலுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கண்டறிந்து மருத்துவம் மேற்கொள்வதாலும், நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்புவார். சிறுநீர்ப் பிரிப்பு மருத்துவம் உடனடி மேற்கொள்வதால், மற்ற மருத்துவமும், மற்ற உறுப்புகளைச் சீராக்க நேரமும் மருத்துவருக்குக் கிடைக்கும்.

*              சில பெரிய அறுவை மருத்துவத்தின்-பொழுது, நீண்ட நேரம் சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தம் தடைபடும் நிலை ஏற்படும். அதனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். எடுத்துக்காட்டாக, இதயத் தமனி மாற்று (வழி) பாதை (Coronary Artery Bye pass surgery – CABG) அறுவை மருத்துவம் போன்றவற்றில் நான்கு, அய்ந்து மணி நேரம் அறுவை மருத்துவம் நடக்கும். அதுபோன்று சிறுநீரகங்கள் பாதிப்படையும் வாய்ப்பும் ஏற்படும்.

*              கிருமிக் கொல்லி மருந்துகள் (Anti-biotics) எதிர்பாராத விதமாக அதிக அளவு எடுத்துக் கொள்வதால், சிறு நீரகங்கள் சேதமடையும். நீண்ட நாள்கள் உட்கொள்ளப்படும் கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) எதிர் வினையாகச் சிறுநீரகங்கள் பாதிப்படையும். எந்தெந்த மருந்துகளால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்றறிந்து அவற்றைத் தவிர்ப்பதும் அல்லது எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும்.

*              தேனீப் பூச்சிகள், பாம்புக்கடி நஞ்சு போன்றவை சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும்.

*             தொடைப் பகுதி அறுவை மருத்துவத்தில் இரத்த ஓட்டக் குறைவை உண்டாக்க தொடைப் பகுதியைக் கட்டி விடுவர். அறுவை மருத்துவம் முடிந்த பிறகு, கட்டுகள் பிரிக்கப்பட்டவுடன், திடீரென ஏற்படும் இரத்த ஓட்டத்தின் பின் விளைவாக சில நேரங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும்.

*              உடனடி சிறுநீரகங்கள் செயலிழப்பு பெரும்பாலும் நலமடையக் கூடிய நோய். எதனால் அந்நோய் உண்டானது என்ற சரியான காரணத்தைக் கண்டறிந்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டைச் சீராக்கும் வாய்ப்புகள் அதிகம். நஞ்சுப் பொருள்களுக்கு, மருந்துகளுக்கு எதிர் வினையாற்றும் மருந்துகள் கொடுப்பதன் மூலம், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மீண்டும் சீராக்க முடியும். அதேபோல் பூச்சிகள், பாம்புக் கடியையும் எளிதில் குணமாக்கலாம்.

*             ஆனால், உடனடி செயலிழப்புக்கு ஆளானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்புக்கு உடனடி செயலிழப்பு ஏற்பட்டதும் ஒரு காரணமாக அமையும். எனவே, இந்நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பிற்கு பின்னணியில் நீரிழிவு நோய் (Diabetes) ஒரு முக்கியக் காரணியாக இருக்கும்.

*             மிகு இரத்த அழுத்தம் (Hypertension) ஒரு முக்கியக் காரணி.

*              இரத்தக் குழாய் நோய்கள் (Vascular diseases)  நீண்ட நாள்கள் இருக்கும்பொழுது, சிறுநீரக இரத்தக் குழாய்களையும் பாதிக்கும்.

(தொடரும்…)

சிறுநீரகக் கற்கள் (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (41)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (41)

நவம்பர் 1-15,2021

சிறுநீரகக் கற்கள்

(KIDNEY STONES)

மரு.இரா.கவுதமன்

சிறுநீரகக் கற்களின் வகைகள்:

              கால்சியம் ஆக்ஸலேட்: சுண்ணாம்புச் சத்தான கால்சியத்தைக் கரைத்து வெளியேற்றத் தேவையான அளவு நீர்மம் இல்லாத நிலையில் சிறுநீரில் உள்ள ‘ஆக்ஸலேட்’ என்ற வேதிப் பொருளோடு இணைக்கிறது. “கால்சியம் ஆக்ஸலேட்’’ துகள்களாக மாறி, நாளடைவில் கற்களாக உருமாறும். இவ்வகைக் கற்கள் எளிதாக உருவாவதால், அதிகமாக உருவாகும் நிலைமை ஏற்படும்.

              யூரிக் ஆசிட்: (Uric Acid): இவ்வகைக் கற்கள் அதிக அளவு தோன்றும் வாய்ப்புடையவை. புலால் உணவுகளில், மீன் உணவுகளில் “ப்யூரின்’’ (Purines) கள் என்ற இயற்கை வேதிப் பொருள்கள் அதிக அளவு இருக்கும். ப்யூரின்கள் அதிகமாக உட்கொள்வதால் (புலால் உணவுகள்) அவை உடலில் வேதி மாற்றமடைந்து, “மானோசோடியம் யூரேட்’’ (Mono sodium Urate) என்னும் வேதிப் பொருளாக மாறும். இவையே யூரிக் ஆசிட் என்ற அமிலமாகவும், பிறகே சிறுநீரகக் கற்களாகவும் உருப்பெறும். இவை பாரம்பரியமாக வரும் வாய்ப்பும் பெற்றவை.

              ஸ்ட்ருவைட் (Struvite): இவ்வகை கற்கள் ஒரு சிலருக்கே ஏற்படும். சிறுநீரகப் பாதைகளில் ஏற்படும் நோய்த் தொற்றே இவ்வகைக் கற்கள் தோன்றக் காரணம்.

              சிஸ்டைன் (Cystine): மிகவும் அரிதாகவே தோன்றும் இவ்வகைக் கற்கள் பாரம்பரியமாகத் தோன்றும் வாய்ப்பு அதிகம்.

நோயின் அறிகுறிகள்: சிறுநீரகக் கற்கள் சில நேரங்களில் மணலைப்போல் மிகவும் சிறு சிறு துகள்களாக, மெல்லியதாக இருக்கும். சில நேரங்களில் பருமனாக அளவில் பெரிதாக மாறிவிடும். கற்களின் அளவின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் வேறுபடும்.

சிறுநீரகக் கற்கள் பெரிதாகும்பொழுது அறிகுறிகள் தென்படும். ஆரம்ப நிலையில சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்படும். சில நேரங்களில் சிறுநீரோடு இரத்தம் கலந்துவரும். முதுகுப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். அடி வயிற்றில் ஆரம்ப நிலையில் லேசான வலி இருப்பது போல் உணர்வு இருக்கும். திடீரென தாங்க முடியாத வலி முதுகின் பகுதியில் விலா எலும்புகளுக்குக் கீழேயும், அடி வயிற்றிலும் ஏற்படக் கூடும். முதுகில் தோன்றும் வலி, கீழே இறங்குவதுபோல் தோன்றலாம். முதுகில் துவங்கும் அடி வயிற்று வலி கீழ் வரை இறங்கி, அடி வயிறு வரை பரவும். குமட்டல், வாந்தி ஏற்படும். வயிற்றில் சங்கடம் இருக்கும். ஆண்களுக்கு ஆண் குறியின் நுனியில் வலி ஏற்படக் கூடும். பெண்களுக்கு சிறுநீர்ப் புற வழியில் வலி ஏற்படலாம்.

நோயறிதல்: சிறு துகள்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் ஏற்படுத்தாது. ஆனால், வேறு வயிற்றுத் தொல்லைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளும்பொழுது கற்கள் இருப்பது தெரிய வரும்.

ஊடுகதிர் நிழற்படம் (X-Ray): மிகவும் எளிமையான ஆய்வு. பொதுவான உடல் நல ஆய்வுகள் (Master health check up) செய்யும்பொழுது எதிர்பாராமல் சிறுநீர்க் கற்கள் இருப்பது தெரியவரும். திடீரென ஏற்படும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி ஏற்படும்பொழுது எடுக்கப்படும் ஊடுகதிர் படத்தில் சிறுநீரகக் கற்கள் நன்கு தெரியும்.

மீள் ஒலிப் பதிவு (Ultra Sound): சிறுநீரில் இரத்தம் கலந்து வரும் நிலையிலேயோ, வலி, வாந்தி போன்றவை ஏற்பட்டாலோ உடனே மீள் ஒலிப் பதிவு செய்து பார்த்தால் சிறுநீரகக் கற்கள் இருப்பதை அறிய முடியும். கற்களின் அளவு, அவை இருக்குமிடம் போன்றவற்றை துல்லியமாக இந்த ஆய்வு வெளிப்படுத்தும். இது மிகவும் நம்பிக்கையான உறுதியான, துல்லியமான ஆய்வு. மருத்துவம் செய்வதற்கும், எவ்வகையான மருத்துவம் மேற்கொள்ளலாம் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்து, அதை உடனடியாகச் செய்வதற்கான வாய்ப்பை, மீள் ஒலிப் பதிவு ஆய்வு பெருமளவு உதவி செய்யும்.

கதிரியக்க ஊடுகதிர் படம் (CT Scan): இவ்வகை ஆய்வும், கற்களின் அளவு, கற்கள் இருக்குமிடம் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.

இரத்தம், சிறுநீர் ஆய்வுகள்: இரத்தம், சிறுநீர் ஆய்வுகள் மேலே கூறிய ஆய்வுகள் போன்ற துல்லியமாக இல்லாவிடினும், ஓரளவு நோயைக் கண்டறிய உதவும். மற்ற இணை நோய்கள் காரணமாக சிறுநீர்க் கற்கள் உண்டாகி உள்ளதா என அறிய இரத்த ஆய்வு உதவும். சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று உள்ளதா என அறியவும், அதன் மூலம் சிறுநீர்க் கற்கள் உண்டாகும் வாய்ப்பை அறியவும் சிறுநீர் ஆய்வு உதவும்.

சிறுநீர்க் கற்கள் ஆய்வு: சில நேரங்களில், மிகச் சிறிய கற்கள், சிறுநீரில் வெளியேறும். அவற்றை ஆய்வு செய்து அவை எந்த வகை வேதிப் பொருள்களால் ஆனது என்று கண்டறிய இந்த ஆய்வு உதவும். இதனால் எதிர்வரும் நாள்களில், அந்த வகையான கற்கள் தோன்றாமல் தடுக்க இந்த ஆய்வு உதவும்.

மருத்துவம்: பொதுவாக கற்களில் உள்ள வேதிப் பொருள்கள், அளவு, அவை உண்டாக்கும் (வலி போன்ற) அறிகுறிகளைப் பொறுத்து என்ன வகை மருத்துவம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வர்.

கற்கள் தானாகவே வெளியேற வாய்ப்பு: அளவில் மிகவும் சிறிய கற்கள் பெரும்பாலும் சிறுநீரில் தானாகவே வெளியேற வாய்ப்பு இருக்கும். வயிற்றில் வலி இல்லாமல் இருந்தாலோ, மருந்துகளால் வலி குறைந்தாலோ, வலியை ஓரளவு தாங்கும் திறன் நோயாளிக்கு இருக்கும் நிலையில் நான்கு முதல் ஆறு வாரங்களில் சிறுநீரக சிறு கற்கள் வெளியேறும் வாய்ப்பு அதிகம். இயல்பான நிலையில் குடிக்கும் அளவு குடிநீர் அருந்த வேண்டும். வயிற்றிலோ, முதுகிலோ வலி ஏற்படாமல் தடுக்க வலியைப் போக்கும் மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி ஏற்படும் நிலை இருப்பதால் அதற்கான மருந்துகளையும் மருத்துவர் அறிவுரையைக் கேட்டு உண்ண வேண்டும்.

மருந்துகள்: சில வகை மருந்துகள் கற்களின் ஒரு பகுதியைக் கரைத்து சிறியதாக்கி விடும். அப்பொழுது கற்கள் தானாகவே சிறுநீரில் வெளியேறும் வாய்ப்பு ஏற்படும். சில மருந்துகள் (Tamsulosin – Flomax) சிறுநீர்க் குழாய்களின் இறுக்கத்தைப் போக்கி, தளர்வடையச் செய்யும். அதனால், சிறுநீர்க் குழாய்கள் விரிந்து கொடுக்கும். இந்த விரிவாக்கம் கற்களின் அளவைவிடப் பெரியதாக இருந்தால், கற்கள் தானாகவே சிறுநீர் மூலம் வெளியேறி விடும். இம்மருந்துகளோடு வலி நீக்கி மருந்துகளையும், வாந்தி வராமல் தடுக்கும் மருந்துகளையும் மருத்துவர்கள் கொடுப்பர். வெளியேறும் கற்களின் வேதிப் பொருள் ஆய்வு, மீண்டும் கற்கள் வராமல் தடுக்கும் உணவுகள், சில வேளைகளில் மருந்துகளும் இதற்கு உதவும்.

(தொடரும்…)

திங்கள், 17 அக்டோபர், 2022

சிறுநீரகக் கற்கள் (மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (40)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (40)

அக்டோபர் 16-31,2021

சிறுநீரகக் கற்கள்

(KIDNEY STONES)

மரு.இரா.கவுதமன்

ஒவ்வோர் ஆண்டும், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு சமயத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிப்படைகின்றனர். இந்நோயால் அதிகளவில் பாதிப்படைபவர்கள் ஆண்களே. 11 சதவிகிதம் ஆண்கள் பாதிக்கப்பட்டால், 8 சதவிகிதமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பருத்த உடல் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் வரும் வாய்ப்பு ஏற்படும்.

சிறுநீரகக் கற்கள்: சிறுநீரில் உள்ள வேதிப் பொருள்கள், கடினப்படுவதால், கெட்டியான சிறுநீர்க் கல் தோன்றுகிறது. சிறுநீர்க் கற்கள் பொதுவாக நான்கு வகைப் பொருள்களால் உருவாகின்றன. பொதுவாக, கால்சியம் ஆக்ஸலேட்  (Calcium Oxalate), யூரிக் ஆசிட் (Uric acid), ஸ்ட்ருவைட் (Cystine), சிஸ்டைன் (சிஹ்stவீஸீமீ) போன்ற வேதிப் பொருள்களே சிறுநீரகக் கற்கள் உண்டாகக் காரணமாகின்றன. சிறுநீரில் பல உடலின் கழிவுகள் வடிகட்டப்-படுகின்றன. சிறுநீரில் இவை கரைக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்படுகின்றன. சில நேரங்களில் அதிக அளவு கழிவுப் பொருள்கள் வடிகட்டப்பட்டு, அவை கரைந்து வெளியேறத் தேவையான அளவு நீர்மம் இல்லாத நிலை ஏற்படும். அதுபோன்ற நேரங்களில், கழிவுகள் சிறு, சிறு துகள்களாகப் படியத் துவங்கும். நாளடைவில் சிறு, சிறு படிகங்களாக (Crystals)  உருப்பெரும் இத்துகள்கள்.

அந்நிலையில் வடிப்பான்களில் (Nephrons) வடிக்கப்படும் நீர்மங்கள் இவற்றைக் கரைத்து வெளியேற்ற, தங்களால் முடிந்தளவு சிறுநீரகங்கள் முயலும். சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்ற முடியாத நிலையில் அவை அங்கு தேங்கும். அக்கழிவுகள் வேறு சில வேதிப் பொருள்களையும் கவரும். கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட், சிஸ்டைன், க்சேந்தைன் (Xanthine), பாஸ்பேட் போன்ற வேதிப் பொருள்கள், சிறுநீரகக் கழிவுகளுடன் சேர்ந்துவிடும். இவை அனைத்தும் இணைந்து, கடினமாகி கற்கள் போன்று உருமாறிவிடும். இயல்பான நிலையில் சிறிய படிவங்கள், அல்லது சிறு கடினப் பொருள்கள், சிறுநீரில் வெளியேறிவிடும். பெரிய கடினப் பொருள்கள் சிறுநீரகத்திலேயே, வெளியேற முடியாமல் தங்கி விடும். பெரும்பாலோருக்கு உடலில் தேவையான அளவு நீர்மச் சத்து இருக்கும். அவர்களுக்கு சிறுநீரகத்தில் அதிகமாக நீர்மங்கள் வெளியேற்றப்-பட்டு, வேதிப் பொருள்கள் படிவங்களாக மாறும் முன்பே கரைத்து வெளியேற்றப்பட்டுவிடும்.

தேவையான அளவு உடல் நீர்மங்கள் இல்லாதவர்களுககு சிறுநீர்க் கற்கள் எளிதாகத் தோன்றும். சிறுநீர்க் கற்கள் படிந்த உடன், அதன் பருமன் அதிகமாகி சிறுநீரகத்திலேயே நின்றுவிடும். சில நேரங்களில் சிறிய அளவு கற்கள், சிறுநீர்க் குழாய்களில் இறங்கி, சிறுநீர்க் குழாய்களை (Ureters) அடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பல நேரங்களில் மிக மிகச் சிறிய கற்கள் சிறுநீரோடு வெளியேறிவிடும். சற்று பருமனான கற்களோ, பெரிய கற்களோ சிறுநீரில் வெளியேற முடியாத நிலை ஏற்படும். அத்தகைய கற்கள் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை (Bladder), சிறுநீர்ப் புறவழி (Urethra) போன்ற பகுதிகளில் எங்கேயாவது அடைத்துக் கொள்ளும் நிலையேற்படும். அந்த நிலையில் கடுமையான வலி ஏற்படும்.

சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணங்கள்:

*              மிகக் குறைந்த அளவு தண்ணீர் பருகுதல். இதனால் உடலில் நீர்மம் குறைந்த அளவே இருக்கும்.

*             உடற்பயிற்சி அதிக அளவில் செய்தல். இதனால் வியர்வை அதிக அளவில் வேளியேறி நீர்மக் குறைபாடு ஏற்படக் கூடும்.

*              சிறிய அளவில் உடற்பயிற்சியும், கழிவுகள் வியர்வையாக வெளியேறாமல் உடலில் தேக்கமடையும் நிலையை உண்டாக்கும். பின் விளைவாக சிறுநீரகங்களில் இவை தங்கும்.

*              உடல்பருமன் (Obesity)

*             அறுவை மருத்துவத்திற்குப் பின் ஏற்படும் எடைக் குறைவு. கடுமையான நோய்களுக்குச் செய்யப்படும் பெரும் அறுவை மருத்துவத்தில் ஏற்படும் நீர்மக் குறைபாட்டை சரிவரக் கவனித்துச் சீராக்காவிட்டால் சிறுநீர்க் கற்கள் தோன்ற வாய்ப்பாகிவிடும்.

*              அதிக அளவு உப்பு, சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளல்.

*             சிறுநீரக, சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று இப்பகுதிகளில் அழற்சியை உண்டாக்கும். அழற்சியின் காரணமாக உண்டாகும் வீக்கம், சிறுநீரகப் பணிகளைப் பாதிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை ஏற்படும். அதனால், கழிவுக் கரைசல்கள் கற்களாக மாறும் நிலை ஏற்படும்.

*              பாரம்பரிய நோயாகவும் சிலருக்கு வரும் நிலையும் ஏற்படும்.

*              ஃபிரக்டோஸ் மாவுச் சத்து அதிக அளவு உள்ள உணவுகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகக் கூடும். நாம் தினமும் எடுக்கும் சர்க்கரை, பழச்சாறுகளில் இந்த மாவுச் சத்து அதிக அளவில் இருக்கும்.

*              ஏற்கெனவே சிறுநீரகக் கற்கள் வந்து குணமாகி இருந்தால் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம்.

*              வயிறு, குடல் நோய்களுக்கு அறுவை மருத்துவம் செய்திருந்தால் சிறுநீரகக் கற்கள் தோன்ற வாய்ப்பு அதிகம்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic Kidney Disease)

*              மூட்டு நோய்கள், குடல் நோய்களின் பின் விளைவாக சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.

*             கால்சியம் மாத்திரைகள், சிறுநீர்ப் பிரிப்பூக்கி (Diuretics) மருந்துகள் நீண்ட காலம் உண்பதால், சிறுநீர்க் கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

(தொடரும்…)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் ( மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (39)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (39)

அக்டோபர் 1-15,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

KIDNEYS & INFECTIONS

மரு.இரா.கவுதமன்

மருத்துவம்:

சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்றை எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போது மருத்துவம் செய்து, நோயை எளிதில் குணமாக்கலாம். நோய்க்கு அடிப்படைக் காரணமான நோய்க் கிருமிகளை அழிப்பதன் மூலம் நோயை எளிதில் குணமாக்கலாம். கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) மூலம், நோய்க் கிருமிகளை அழித்தால் நோய் எளிதில் குணமாகும். பொதுவாக, நைட்ரோப்யூரன்டைன், சல்பா, அமாக்ஸிசிலின், செஃபலோஸ்போரின் பாக்டிரிம், டாக்ஸிசைக்ளின், சிப்ரோப்ளாக்ஸின் போன்ற மருந்துகள் நோயை எளிதில் கட்டுப் படுத்துபவை. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தையோ அல்லது கூட்டாக இரு மருந்துகளோ மருத்துவர் அறிவுரைப்படி உண்ண வேண்டும். அறிகுறிகள் நின்ற உடன், குணமாகி விட்டதாகக் கருதி, மருந்துகள் உண்பதை நிறுத்தி விடக் கூடாது. மருந்துகளை முழுப் பருவமும் முடிய உண்ண வேண்டும். மருத்துவர் அறிவுறுத்திய காலம் முடிய மருந்துகளை தவறாமல் உண்ண வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படும் நிலை இருக்கும். பொதுவாக ஆண்களில் சிலருக்கு, நோய்த் தொற்று இரண்டாம் முறையும் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு அய்ந்து பேரில் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். பொதுவாக ஒரே வகை நோய்க் கிருமிகள் (ஈ கோலி _ E.Coli) காரணமானாலும், அடுத்தடுத்து வரும் நோய்த் தொற்றுக்கு வேறு நோய்க் கிருமிகளும் காரணமாகக் கூடும். சில நேரங்களில் சில வகை நோய்க் கிருமிகள் இரத்தத்தோடு கலந்து, அதிக அளவில் பெருகி, மீண்டும் சிறுநீர்ப் பாதையைத் தாக்கும். சில வகைக் கிருமிகள் வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை. பொதுவாக ஒருவருக்கு ஆண்டுக்கு மூன்று முறையும், அதற்கு மேலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட்டால், நோயாளியை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சற்று நீண்ட நாள்கள் கிருமிக் கொல்லி மருந்துகளை (Anti-biotics) உண்ணச் சொல்வர். உடலுறவு முடிந்தவுடன் ஒரு நேரம் உயிர்க்கொல்லி மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவும். நோய்த் தொற்றின் அறிகுறிகள் தோன்றும் ஆரம்ப நிலைகளிலேயே, ஓரிரு நாள்கள் கிருமிக்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் மேலும் வலுவடையாமல் தடுக்கும். சிறுநீர் ஆய்வுகள்  நோய்த் தொற்றை அறிய உதவும்.

நோய்த் தொற்றைத் தவிர்க்கும் வழிகள்:

¨           சிறுநீர்க் கழிக்கும் உணர்வு தோன்றியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும்.

¨           ஒவ்வொரு முறையும், சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறும் வரை பொறுமையாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.

¨           சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கும் நிலையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

¨           அதிகம் தண்ணீர் பருக வேண்டும்.

¨           அதிக வீரியமற்ற சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

¨           உடலுறவுக்கு முன், பிறப்புறுப்புகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

¨           உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது நலம். அதனால் சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்தாலும் அவை சுத்தமாக்கப்பட்டுவிடும்.

¨           கருத்தடைச் சாதனங்கள், ஆணுறைகள் போன்றவை கூட ஒவ்வொரு வகையில் நோய்த் தொற்றை உண்டாக்கக் கூடும். அதை மாற்றி வேறு வகைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் அறிவுரையைக் கேட்கலாம்.

¨           உள்ளாடைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

¨           பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்த ஏற்றவை. இறுக்கமான உள்ளாடைகள் அணியக் கூடாது.

¨           இறுக்கமான ஆடைகள் நோய்த் தொற்றை எளிதில் உண்டாக்கும்.

¨           நோயின் அறிகுறிகள் தெரியும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும்.

¨           அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றைத் தவிர்க்க, சிறிது காலம் தொடர் மருத்துவம் தேவை. மருத்துவர் அறிவுரை பெறுவது கட்டாயத் தேவை.

¨           தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது.

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று – சிக்கல்கள்(Complications)

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை மருந்துகளால் எளிதில் குணமாக்கலாம். சீரான மருத்துவம் செய்யப்படாத நோய்த் தொற்றே பல சிக்கல்களை உண்டாக்கும். இச்சிக்கல்கள் நாளடைவில் ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கும்.

சிறுநீரக நோய்த் தொற்று (Kidney Infection – Pyelonephritis): 

நோய் சீராக மருத்துவம் செய்யப்படாத நிலையில் நோய்க் கிருமிகள், சிறுநீர்ப்பையையும் தாக்கி அழற்சியை (Cystitis) ஏற்படுத்தும். பின் அங்கிருந்து சிறுநீர்க் குழாய்கள் (Ureters) வழியே சிறுநீரகங்களுக்குப் பரவும் நிலையேற்படும். சிறு நீரகங்களில் உள்ள வடிப்பான்களில் அழற்சி (Nephritis) யை உண்டாக்கும். வடிப்பான்களில் அழற்சி பெருகி, வடிநீர்க் குழாய் முடிச்சுகள் அழற்சி (Glomarular Nephritis) யாக மாறிவிடும். முடிவில் சிறுநீரகம் முழுவதும் அழற்சியாக (Pyelonephritis) என்ற நிலை ஏற்பட்டு விடும்.

நோய்க்கிருமிப் பரவல் (Sepsis): 

சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு முற்றிய நிலையில் அங்கிருக்கும் தந்துகிகள் மூலம், கிருமிகள் இரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் பரவிவிடும். கிருமிகள் நச்சும் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் (Septicemia). இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure): 

பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று, சிறுநீரகத்தில் காயங்களை ஏற்படுத்தும். அது வடிப்பான்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். வடிப்பான்கள் பாதிப்பால், சிறுநீர் வடிப்பது நின்றுவிடும். சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்துவிடும்.

கருவுறுதலும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றும் (Pregnancy & Urinary Tract Infection): 

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று கருவுற்ற தாய்மார்களையும், கருப்பையில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றால் கருவுற்றவருக்கு மிகு இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படும். அதனால் குறைமாதப் பிறப்பு (Premature delivery), பேறுகால வலிப்பு (Eclampsia) போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படும்.

இந்நோயை முறையான மருத்துவம் மூலம் எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப நிலையில் மருத்துவம் மூலம் நோயை முழுமையாகச் சீராக்க முடியும்.                 (தொடரும்)

வெள்ளி, 14 அக்டோபர், 2022

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் ( விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்) (38)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (38)

செப்டம்பர் 16-30,2021

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்

(KIDNEYS & INFECTIONS)

மரு.இரா.கவுதமன்

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று (Urinary Tract Infection – UTI)

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் (Ureters), சிறுநீர்ப்பை (Cystitis), சிறுநீர்ப் புற வழி (Urithritis) ஆகியவற்றில் ஏற்படும் நோய்த் தொற்றாகும். சிறுநீர் நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் கரைசலேயாகும். இயல்பான நிலையில் சிறுநீர், கிருமிகள் இல்லாமல் சுத்தமாகத்தான் இருக்கும். நோய்த் தொற்று, நுண் கிருமிகளால் வெளிப்புறத்தில் இருந்துதான் ஏற்படும். நோய்த் தொற்று ஏற்படும் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். சிறுநீர்ப் புறவழியில் ஏற்படும் நோய்த் தொற்று, “சிறுநீர்ப் புற வழி அழற்சி’ (Urethritis) யையும், சிறுநீர்ப்பை நோய்த் தொற்று, “சிறுநீர்ப்பை அழற்சி’ (Cystitis) யையும், ‘சிறுநீரக நோய்த் தொற்று’ (Pylonephritis) ‘சிறுநீரக வடிப்பான் அழற்சி’யையும் உண்டாக்கும். இவை ஓர் உறுப்பில் துவங்கினாலும், மற்ற உறுப்புகளிலும் பரவி அழற்சியை ஏற்படுத்தும்.

சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று மிகவும் எளிதாகப் பற்றிக் கொள்ளும் தொற்று நோயாகும். இத்தொற்று நோய் ஆண்களை விட எளிதாக பெண்களுக்கு பற்றிக் கொள்ளும். 5 பெண்களில் ஒருவருக்கு என்ற நிலையில் இந்நோய்த் தொற்று ஏற்படும். பெண்களின் பிறப்புறப்பும் (Vagina),, ஆசனவாயும் (Anus) அருகருகே அமைந்திருப்பதால் ஆசனவாய் மூலம் வெளியேறும் நுண்கிருமிகள் எளிதாக பிறப்புறப்பில் பரவும் நிலை ஏற்படும். அதனால் நோய்த் தொற்று பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சுத்தமற்ற பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அசுத்தமான நீரைக் கொண்டு பிறப்புறுப்பு-களைக் கழுவுவதாலும் இந்நோய்த் தொற்று ஏற்படும். சுத்தமற்ற உறுப்புகளுடன் ஏற்படும் உடலுறவும் நோய்த்தொற்று உண்டாக்கும். ஆண்களுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படும். குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படுவர். ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப் படுகிறார்கள். ஆண்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இந்நோய் எளிதாகத் தொற்றிக் கொள்ளும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு “விந்து நீர் சுரப்பி’ (Prostate gland) பருமனடைவதால் இந்நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். விந்து நீர் சுரப்பி பருமன் (Enlarged Prostate), சிறுநீர்க் கழிப்பதில் மாறுபாட்டை உண்டாக்கும். சிறுநீர்ப் பையில் (Bladder) உள்ள சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், தேக்கமடைந்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிறுநீர்ப்பை இறக்கம் (Bladder Prolapse) நோய்த் தொற்று எளிதில் ஏற்படக் காரணமாக அமையும். நீரிழிவு நோய் (Diabetes)உள்ளவர்களுக்கு நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் சரியாகவும் ஆகாது. குழந்தைகளுக்கு சிறுநீரக உறுப்புகளின் அமைப்பு மாறுபட்டிருந்தாலும் எளிதில் இந்நோய் பற்றிக் கொள்ளும். பெரும்பாலும் ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நுண்கிருமிகளே இந்த நோய்த் தொற்றுக்குக் காரணியாக அமைகிறது. சிலருக்கு நீண்ட நாள் தொற்று இருப்பின் வேறு நுண் கிருமிகளும் காரணமாகி இருக்கக் கூடும்.

“சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்பது பொதுவான நோய்த் தொற்றாகும். சிறுநீரகப் பாதை முழுவதும் ஏற்படும் நோய்த் தொற்றையே ‘சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று’ என்று குறிப்பிடுகிறோம். ‘சிறுநீர்ப்பை-யில் மட்டும் சில நேரங்களில் நோய்த் தொற்று ஏற்படக் கூடும். நோய்க் கிருமிகள் சிறுநீர்ப் பையை மட்டுமே தாக்கி, அழற்சியை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) யும் அடிக்கடி ஏற்படக் கூடிய நோய்த் தொற்றாகும். இத்தொற்றில் சிறுநீர்ப்பை (Bladder) மட்டும் பாதிக்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடும். எல்லா நேரங்களிலும் சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்று, சிறுநீர்ப்பை நோய் தொற்றாக மாறாது. ஆனால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்று எளிதாக மற்றப் பகுதிகளில் பரவும். ஆரம்ப நிலையில் எளிதில் கட்டுக்குள் வரும் இந்நோயைப் புறக்கணித்தால், அதிகமாகி சிறுநீர்ப்பையைப் பாதிப்பதோடு, நாளடைவில் சிறுநீரகங்களையும் பாதிக்கும் நிலையேற்படும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரியாக்காவிடில், அது சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாகி விடும்.

நோய்க் காரணிகள்:

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று நோய்க் கிருமிகளால்தான் ஏற்படுகிறது. ‘ஈ.கோலி’ (E.Coli) என்ற நோய்க் கிருமிகளே இந்நோய்க்குக் காரணியாகிறது. சிறுநீர்ப் புறவழி (Urethra) வழியேதான் ஏற்படுகிறது. 90% நோய்த் தொற்று இவ்வகை நுண்கிருமிகளால்தான் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

சிறுநீர்ப் பாதையின் உட்புறச் சவ்வுகளில் நோய்க் கிருமிகள் தாக்கும் பொழுது அழற்சி ஏற்படும். அதன் விளைவாக அப்பகுதியில் சிவப்பாகவும் வீக்கமும் ஏற்படும். நோய்த் தொற்றின் விளைவாக ஏற்படும் அறிகுறிகள்:

=             இடுப்பெலும்பின் பகுதியில் வலி.

=             இடுப்பெலும்பின் கீழ்ப் பகுதியில் அழுத்தம்.

=             அதிக முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.

=             சிறுநீர் கழித்த பின்னும், சற்று சிறுநீர் ஒழுகுதல் (Incontinence)

=             சிறுநீர் கழிக்கும்பொழுது கடுமையான வலி.

=             சிறுநீர்ப் புறவழியில் எரிச்சல், வலி.

=             சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல்.

=             சிறுநீரில் இரத்தம் போதல்.

=             சில நேரங்களில் இரத்தமே வெளியேறுதல்.

=             இரவில் அதிக முறை சிறுநீர் கழித்தல்.

=             சிறுநீர் அடர்த்தியாக இருத்தல்.

=             சிறுநீரின் இயல்பான வண்ணத்தில் மாறுபாடு (Cloudy Urine)

=             நாற்றம் அதிகமான சிறுநீர் (Foul smelling Urine)

=             உடலுறவின்போது பிறப்புறுப்புகளில் வலி.

=             ஆணுறுப்பில் வலி.

=             இடுப்பின் பக்கவாட்டில் வலி.

=             களைப்பு.

=             குளிரெடுத்தல், உடலில் அசதி.

=             காய்ச்சல்.

=             குமட்டல், வாந்தி.

=             பசியின்மை.

=             மனக்குழப்பம்.

ஆகிய அறிகுறிகள் சிறுநீர்ப் பாதைத் தொற்றினால் ஏற்படும்.

நோயறிதல்:

சிறுநீர் ஆய்வு: சிறுநீர்ப் பரிசோதனை ஓர் எளிமையான சோதனையாகும். சிறுநீரில் இயல்பான நிலையில் இரத்த அணுக்கள் இருக்கா. ஆனால், நோய்த் தொற்று ஏற்படும்பொழுது, சிறுநீரில் இரத்தச் சிவப்பணுக்கள் (RBCs), இரத்த வெள்ளணுக்கள் (WBCs) நுண்கிருமிகள் ஆகியவை இருக்கும்.

சிறுநீர் நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் (அக்கிருமிகளில்) செயல்பாடும்: இச்சோதனை மூலம், எவ்வகை நோய்க் கிருமிகள் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதை எளிதாக அறியலாம். எவ்வகை மருந்துகள் அக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையவை என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த ஆய்வு, மிகவும் எளிமையான, சரியான, ஒரு முக்கியமான ஆய்வாகும். இவ்வாய்வு நோய்க் கிருமிகளை அறிய உதவுவதுடன், அதை அழிக்கவல்ல, மருந்துகளைக் (Anti-biotics) கண்டறியவும் உதவும்.

மீள்ஒலிப் பதிவு (Ultra sound): வலியற்ற எளிதாகச் செய்யப்படும் சோதனை இது. ஒலி அலைகள் வயிற்றின் மேல் பகுதியிலிருந்து தோல் வழியே செலுத்தி, அதன் ‘மீள் ஒலி’ (எதிரொலி)யை வைத்து ‘இயல்பு’ (normal)நிலையையும், நோய்களில் ஏற்படும் மாறுபட்ட நிலையையும் (Abnormal) எளிதாக இந்த ஆய்வு வெளிப்-படுத்தும். சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்-களை இச்சோதனை வெளிப்படுத்தும்.

சிறுநீர்ப்பை உள்நோக்கி (Cystoscopy): இது ஓர் உள்நோக்கிக் கருவி. சிறுநீர்ப் புறவழி மூலம், உருப்பெருக்கி கண்ணாடி, விளக்குடன் கூடிய கருவியைச் செலுத்தி, சிறுநீர்ப்பையை நேரடியாகப் பார்வையிடலாம். சிறுநீர்ப் பையில் உள்ள குறைபாடுகளை எளிதாக இந்த ஆய்வின்மூலம் கண்டறியலாம்.

கதிரியக்க ஊடுகதிர் படம் (CT scan): சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பையில், நோயினால் ஏற்படும் மாறுபாடுகளை இந்த ஆய்வின் மூலம் எளிதில் அறியலாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை அறிய பல வழிகள் இருந்தாலும், ‘நுண்கிருமி ஆய்வும், மருந்துகள் செயல்பாடு’ அறியும் சோதனை மிகவும் எளிதானதும், உறுதியான ஆய்வாகும். நோய்க்குக் காரணமான நுண்கிருமிகளைக் கண்டு அறிவதோடு, அவற்றை அழிக்கவல்ல மருந்துகளையும் இந்த ஆய்வு தெளிவாக விளக்குவதால் நோய்த் தொற்றறிய இவ்வாய்வே சிறந்தது என மருத்துவர்கள் முடிவு. சிறுநீரகங்கள் நோய்த் தொற்றால் பாதிப்படையும்பொழுது கதிரியக்க ஊடுகதிர் படங்கள் நோயறிய, நோய் பாதிப்பின் அளவை அறிய உதவும்.

தொடரும்…