திங்கள், 17 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (104)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (104)

2022 மருத்துவம் ஜுலை 01-15 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்


கருவுறுதல் நிகழும்பொழுது அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சிலவோ மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம். கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம்.
இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் முதல் பருவ கருவுற்ற காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் குறைக்க உதவும்.

இரண்டாம் மூன்று மாதப் பருவம் (II Trimester) அறிகுறிகள்:
இரண்டாம் மூன்று மாதப் பருவம் அல்லது இரண்டாம் பருவம் என்பது கருவுற்ற 13 வாரம் தொடங்கி, 26வது வாரம் வரை இருக்கும் காலக் கட்டமாகும். முதல் பருவத்தில் உண்டான பல தொல்லைகள் குறையத் தொடங்கி முழுமையாகவே மறைந்து விடும். ஆரம்ப நிலையில் உண்டான களைப்பு குறைந்துவிடும். ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு மாறிவிடும். குமட்டல், சில நேரங்களில், சிலருக்கு உண்டாகும். வாந்தி போன்றவை நின்று விடும். ஆனால், வேறு சில அறிகுறிகள் தோன்றத் துவங்கும். அவற்றை இங்கு காண்போம்.

கருவுற்றலைப் பற்றிய சந்தேகம்:
இதுபோன்ற உணர்வு பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல அறிகுறிகள் இரண்டாம் பருவத்தில் மறைந்துவிடும். பெரும்பாலான பெண்கள் எப்பொழுதும் இருப்பதுபோல் இயல்பான நிலைக்குத் திரும்பி விடுவர். குமட்டல் நின்று விடும், வாந்தி வராது. பசி எடுக்கும். களைப்பும், சோர்வும் மாறி கருவுற்ற பெண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல சங்கடங்கள், இரண்டாம் பருவத்தில் முற்றிலும் நின்று விடுவதால், கருவுற்ற நிலை பற்றி சந்தேகம்கூட பலருக்கு ஏற்படும். உங்கள் உடல் வாகுக்கேற்ப உடல் வீக்கம் (Bump) போன்றவை ஏற்படாமல் இருக்கும். விரைவிலேயே இரண்டாம் பருவத்தில் படபடப்பு (Flutters) ஏற்படும். இதுவே கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தும் அறிகுறியாக சில நேரங்களில் அமையும்.
இரண்டாம் பருவத்தில் கருப்பையில் குழந்தையும், பெண்களின் உடல் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். பலருக்கு உடலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. இடுப்புப் பகுதியிலும், வயிற்றின் பக்கவாட்டிலும் இந்த வலி அதிகமாகத் தெரியும். கருப்பையின் விரிவாக்கத்தால், கருப்பையின் சுற்றுத் தசை நார்கள் (Round ligament), மற்ற தசை நார்கள் விரிவடைவதால் இந்த வலி உணர்வு ஏற்படும். படுக்கையிலிருந்தும், உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக எழுந்தாலும், தும்மும்பொழுதும், இருமும்பொழுதும் இந்த வலியைப் பெண்கள் அதிகம் உணரும் நிலை ஏற்படும். இது தவிர முதுகுவலி (Back Pain), இடுப்பு வலி (Hip pain), கால்களில் வலி போன்றவையும் ஏற்படக்கூடும். வெந்நீர் ஒத்தடம் இடுப்புப் பகுதியில் கொடுப்பதன் மூலம் இந்த வலியைக் குறைக்க முடியும். இடுப்புப் பட்டை (Hip support belt) பயன்-படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.

கவட்டையில் மின்னல் போன்ற உணர்வு (Lightning Crotch):
இரு தொடைகள் சேரும் இடத்தில் பிறப்புறுப்பில் இடிப்பது போன்ற ஒரு இனிமையான உணர்வு (Lightning Crotch) சில நொடிகள் தோன்றி மறையும். எந்த நேரத்திலும் இந்த உணர்வு தோன்றும். ஆனால், நீண்ட நேரம் இந்த உணர்வு இருக்காது. சில பெண்களுக்கு அடிக்கடி இந்த உணர்வு ஏற்படும். சிலருக்கு ஏதாவதொரு நேரத்தில் ஏற்படும்.
சிலருக்கு ஏற்படாமல்கூட இருக்கும். எதனால் இந்த உணர்வு ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. இடுப்புப் பட்டை பயன்பாடு இந்த உணர்வைக் குறைக்க உதவும். குழந்தை வளர்ச்சி கூடும்பொழுதும் அது திரும்பும்-பொழுதும், உதைக்கும்பொழுதும் இந்த உணர்வு அதிகரிக்கும்.

தலைச்சுற்றல் (Dizziness):
கருப்பையில் குழந்தை வளர்ச்சியடையும் பொழுது, இரத்தத்தின் அளவும், இரத்த அழுத்தமும் அடிக்கடி மாறுபடும் நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும். இதனால் தலைச்சுற்றல், தலைபாரம், சில நேரங்களில் மயக்கம் கூட ஏற்படலாம். ஆனால், இது தற்காலிகமானது. சில நொடிகளிலிலே இயல்பு நிலைக்கு பெண்கள் திரும்பி விடுவர். இதற்காக அஞ்ச வேண்டியதில்லை.
அடிக்கடி உணவு எடுத்துக் கொள்வதும், அதிகளவு நீர்மப் பொருள்களை உட்கொள்வதன் மூலம், உடலின் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் தலைச்சுற்றல் ஏற்படும்பொழுது குளியல் கூட அதனைப் போக்கும். தலைச்-சுற்றல் சில நேரங்களில், லேசான மயக்கம் உண்டாக்கும் நிலை ஏற்படக் கூடுமாதலால், அருகில் துணை இருப்பது நலம்.

கரு நெளிவு உணர்தல் (Flutters – quickening):
20 முதல் 21 வாரங்களில், தாயின் உடல்நிலைக்கேற்பவும், கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடியின் (Placenta) அமைந்துள்ள நிலைக்கேற்பவும் கரு நெளிவதை (Flutters-quickening) தாயால் உணர முடியும். முதல் பேறு காலத்தில் இதை முதலில் எளிதாக உணர முடியாது. ஆனால், நாளடைவில் தெளிவாக உணர முடியும். இரண்டாம் பேறு காலத்தில் முன் அனுபவம் காரணமாக இதைத் தெளிவாக உணர முடியும். இந்தக் கருவின் நெளிவுகள் கருவுற்ற தாய்மார்களுக்கு ஓர் இன்பமான உணர்வைக் கொடுக்கும். நஞ்சுக் கொடி கருப்பையின் முன்புறம் அமைந்திருப்பின் கரு நெளிவு தெரிய நாளாகும். இயல்பான நிலையில் நஞ்சுக் கொடி இருப்பின் இந்த உணர்வை எளிதில் உணரலாம். நஞ்சுக் கொடி முன் பகுதி அமைப்பில் இவ்வுணர்வு லேசாகக் கூட தெரியலாம்.
ஆரம்ப நாள்களில் இந்த உணர்வு வண்ணத்துப் பூச்சி, சிறகடிக்கும் உணர்வு போன்று வயிற்றுப் பகுதியில் உணர முடியும். சில நேரங்களில் லேசான அரிப்பு உணர்வுபோல்கூட இந்த உணர்வு தோன்றும். ஓர் இனிமையான உணர்வு உண்டாக்கும் (குழந்தை) கருவின் நெளிவுகள் பற்றி கருவுற்ற பெண்கள் “குழந்தைத் துடிப்பு’’ தெரிவதாக மருத்துவரிடம் சொல்லுவார். குழந்தை வளர, வளர இந்தத் துடிப்பு அதிகமாகி வயிற்றில் இடிப்பது போலவும், உதைப்பது போலவும் தெரியும். கருவுற்ற பெண்களுக்கு, அதுவும் முதல் மகப்பேறென்றால், ஓர் இனிமையான மகிழ்ச்சி கலந்த பெருமித உணர்வை உண்டாக்கும்.
(தொடரும்…)

மகப்பேறு (PRAGNANCY)பிராக்ஸ்டன் ஹிக்ஸ் - நவீன மருத்துவங்கள் (105)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)

2022 மருத்துவம் ஜுலை 16-31 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
பிராக்ஸ்டன் ஹிக்ஸ் (மருத்துவம்
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (105)

கருப்பைச் சுருங்கல்: முதல் மூன்று மாதப் பருவத்திலும், மூன்றாம் மூன்று மாதப் பருவத்திலும் கருப்பையின் தசைநார்கள் லேசாகச் சுருங்கும். ஆனால், பெரும்பான்மை-யான பெண்களுக்கு இந்த நிலை இரண்டாம் மூன்று மாதப் பருவத்தில் உண்டாகும். சில பெண்கள் இந்த மாற்றத்தை உணராமலும் இருப்பர். இந்தச் சுருங்கல் அடிவயிற்றில் லேசான வலியை உண்டாக்கும். தசைப்பிடிப்பு ஏற்பட்டதுபோல் (Cranps) உணர்வு பெண்-களுக்குத் தெரியும். சில நேரங்களில் அடிவயிறு கெட்டிப்பட்டதுபோல் தோன்றும். “பேறுகாலப் பொய்வலி’’ (False labor pain) என மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவர். வலி தொடர்ந்து அதிகமானாலோ, ஏதேனும் கசிவு (இரத்தக் கசிவோ, வெள்ளைப்படுதல் போன்றவை)கள் ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டாலோ மருத்துவ அறிவுரை பெறுவது நலம். பொதுவாக அதிக அளவு குடிநீர் குடிப்பதும், ஓய்வு எடுப்பதும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட உதவும். இவ்வறிகுறியைப் பற்றி பெண்கள் அஞ்ச வேண்டியதில்லை.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Frequent Urination):

குழந்தை கருப்பையில் வளர, வளர அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். குழந்தை கருப்பையில் இருக்கும் நிலைக்கேற்ப சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம். கருப்பை, அதன் உள்ளிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைவதால், சிறுநீர்ப்பையை அழுத்துவதால் இந்த உணர்வு நிகழ்கிறது. தும்மும்பொழுதும், இருமும் பொழுதும் சில நேரங்களில் சிறுநீர்க் கசிவு ஏற்படும். ஆனால், இச்சிறுநீர்க்கசிவு (ரிமீரீணீறீs) அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்கும். அடிக்கடி (சில நேரங்களில் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறைகூட) சிறுநீர் கழிப்பதால், உடலின் நீர்மச் சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க அதிக அளவு குடிநீர் குடிக்க வேண்டும். இது தாய்க்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

மூன்றாம் மூன்று மாதப் பருவம் (Third Trimester) அறிகுறிகள்:
கருவுற்ற காலத்தின் கடைசி மூன்று மாதங்களை மூன்றாம் பருவம் என்கிறோம். 29 முதல் 40 வாரங்கள் இந்தப் பருவம் நீடிக்கும். குழந்தையின் தலைப்பகுதி, கருப்பையின் கீழ்ப்பகுதிக்குத் திரும்பும். பெரும்பாலான பெண்கள் இந்தப் பருவத்தில் பல கடினமான அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பெண்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் கொடுத்தாலும், முதல் பேறுகாலம் என்றால், மனத்தில் ஒருவகை பய உணர்ச்சியும் பல பெண்கள் இப்பருவத்தில் பெறுவர்.
* முதல் பருவத்தில் ஏற்பட்டதுபோல் களைப்பு, குமட்டல், வாந்தி வரலாம்.
* குழந்தையின் வளர்ச்சி அதிகமாவதால் கருப்பை விரிவடையும். அதனால் பெருமூச்சு விட சிரமம் ஏற்படலாம்.
* புரண்டு படுக்கும்பொழுது சங்கடம் ஏற்படக் கூடும்.
* உடல்சூடு சற்று அதிகரிக்கலாம்.
* கருப்பை விரிவடைந்து, சிறுநீர்ப் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர்க் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
* உடலில் நீர்மச் சேர்தல் (Oedena) ஏற்படும். அதனால் கணுக்கால், கைகள், விரல்கள், முகம் ஆகிய பகுதிகளில் நீர்க்கோத்து வீக்கம் ஏற்படும். இந்த வீக்கங்கள் திடீரென வேகமாக அதிகமானால் அல்லது உடல் எடை திடீரென அதிகமானாலோ மருத்துவ அறிவுரை பெற வேண்டும். ஏனெனில் இது “முன்பேறுகால வலிப்பு’’ (Pre-eclampsia) ஏற்படும். அறிகுறியாக இருக்கலாம்.
* அடிக்கடி கால்களில் தசைப்பிடிப்பு (Leg cramps) ஏற்படும்.
* ஊக்கி நீர் (Hormones) அதிகம் சுரப்பதால், கை, கால்கள், முகம் ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி ஏற்படும்.
* ஏற்கெனவே முடி இருக்கும் பகுதிகளில் முடி அடர்த்தியாக வளரும்.
* தொப்புள் வெளித்தள்ளி இருக்கும்.
* வயிறு, மார்பு, தொடைப் பகுதிகளில் தோல் விரிவதால் “வரித் தழும்புகள்’’ (Stretch Marks) ஏற்படும்.
* வயிற்றில் அரிப்பு ஏற்படும்.
* பாலுணர்வு (Sex drive) அதிகம் ஏற்படலாம்.
* முகத்திலும், உடலிலும் கருமை படரும்.
* மலச்சிக்கல் (Constipation)
* நெஞ்செரிச்சல் (Heartburn)
* உணவு செரிக்காமை (Indigestion)
* முதுகு வலி
* சிரைகள் வீக்கம் (Vericose Vains), கால்களிலும் தொடைகளிலும் உண்டாகும். வலியும் தோன்றலாம்.
* வெள்ளை படுதல் (Leukorrhea)
* மார்புகள் வலி (Breast tenderness)
* குழந்தை அடிவயிற்றுக்கு இறங்கும் உணர்வு, இடுப்புப் பகுதியில் வலி (Head fixing) ஏற்படும்.
* மார்புக் காம்புகளில் ஒருவகைத் திரவம் வெளிப்படும்(Colostrum). இதையே “சீம்பால்’’ என அழைக்கிறோம்.
* பொய் வலி(False Pain) (Broxton-Hicks contraction): உண்மையாக இடுப்பு வலி எடுத்து குழந்தை பிறக்குமுன், குறிப்பிட்ட இடைவேளைகளில் பொய் வலிகள் உண்டாகும்.
* உணர்ச்சி வயப்படுதல்: (Emotional distribances): பேறு கால நாள்கள் நெருங்க, நெருங்க தாய்க்கு பலவித மனக் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. கருவுற்ற பெண் தனக்கிருக்கும் ஆர்வங்களில் மனதைச் செலுத்தலாம். எழுதுதல், படித்தல், தையல் பாடல்களைக் கேட்டல், இசைக் கருவிகளை இசைத்தல் போன்றவற்றில் கவனத்தைத் திசை திருப்பலாம்.

பேறுகால முற்பகுதி:

பேறுகால நாள் நெருங்க, நெருங்க, மருத்துவ அறிவுரை அடிக்கடி பெற வேண்டிய நிலை ஏற்படலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.
கொரானோ (Covid 19) தடுப்பூசிகள் தாய் போட்டுக் கொள்ள வேண்டும். அது எந்தப் பக்க விளைவையோ, ஆபத்தையோ, நோய்த் தொற்றையோ உண்டாக்காது.
மருத்துவர் அறிவுரைப்படி தடுப்பூசிகள் சரியான மாதங்களில் போட்டுக்கொள்ள வேண்டும். அது குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.

சில பெண்களுக்கு, பேறுகால “நீரிழிவு குறைபாடு’’ (Gestational Diabetes)ஏற்படும். குழந்தை பிறந்தவுடன், இக்குறைபாடு சரியாகிவிடும். ஆனால், மருத்துவர் அறிவுரையின் பேரில் இக்குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் பேறுகால நேரத்தில் வலிப்பு (Eclampsia) ஏற்படக் கூடுமாதலால், மருத்துவர் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். பேறுகால வலிப்பு மிகவும் ஆபத்தானது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இரத்த சோகை கருவுற்ற பெண்கள் பலருக்கு ஏற்படும் குறைபாடு. தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டைச் சீராக்கலாம்.
மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் வளர்ச்சி, நாடித்துடிப்பு (Foetal Heart Sound), குழந்தை கருப்பையில் நகருதல் (Foetal Movement) ஆகியவற்றையும் எடையையும் கண்காணித்து அறிவுரை வழங்குவர். அதை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
மீள்ஒலிப் பதிவு (Ultra Sonogram): குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாக நமக்குத் தெரியப்படுத்தும்.
(தொடரும்…)):

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மகப்பேறு (Pregnency ) - நவீன மருத்துவங்கள் (103)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (103)

2022 மருத்துவம் ஜூன் 16-30 2022

மகப்பேறு
(Pregnency )
மரு.இரா.கவுதமன்


முதல் பருவ (I Trimester) அறிகுறிகள்:
பெண்களின் மாதவிலக்கம் சுழற்சி சரியாக 28 நாள்களில் நிகழும். மிகச் சிலருக்கே இந்தச் சுழற்சி ஒழுங்கின்றி இருக்கும். அதேபோல் சுழற்சியின்பொழுது, அதிக அளவில் வயிற்று வலி, அதிக இரத்தப் போக்கு போன்றவையும் ஒரு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். இதுபோன்ற நிலைப்பாடு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கம் தள்ளிப்போவதால் கருவுறுதல் நிகழ்ந்துள்ளதா? என்பதைப் பற்றிக் குழப்பம் ஏற்படும். 28 நாள்கள் சுழற்சி ஒழுங்காக நிகழும் பெண்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்படாது. எப்படி இருந்தாலும் ‘கருவுறுதல் ஆய்வில்’ (Pregnency Test) கருவுற்றதை எளிதில் அறியலாம். எளிய சிறுநீர்ப் பரிசோதனை கருவுறுதல் நடந்துள்ளதை வெளிப்படுத்தும். அதேபோல் இரத்தப் பரிசோதனையிலும் கருவுறுதல் நிகழ்ந்ததை வெளிப்படுத்தும். கருவுற்ற சினை முட்டை, கருப்பையின் சுவரில் ஒட்டிக் கொண்டவுடன் ஹெச்.சி.ஜி (HCG) ஊக்கி நீர் இயல்பு நிலையைவிட ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் சுரக்கும்.
இந்த ஊக்கி நீர் சுரப்பு கருவுற்ற ஆறாம் நாள் முதல் அதிகரிக்கும். இரத்தப் பரிசோதனை மருத்துவ ஆய்வு மருத்துவமனையில்தான் செய்ய முடியும். சிறுநீர் ஆய்வு வீட்டில்கூட செய்து கொள்ளக்கூடிய எளிமையான ஆய்வு. கருவுற்ற ஆறாம் நாளிலிருந்தே (மாதவிலக்கு நின்ற 20ஆம் நாள்) இந்த ஆய்வின் மூலம் கருவுற்றதை அறிய முடியும். HCG சுரப்பு இரத்தத்திலும் இருக்கும். சிறுநீரிலும் வெளிப்படும். அதன் அளவை இரத்தத்தில் இருப்பதை வைத்தும், சிறுநீரில் வெளிப்-படுவதைக் கொண்டும் கருவுற்றதை எளிதில் அறியலாம். பொதுவாக மாதவிலக்கு நிகழாத நிலையில் இந்த ஆய்வுகள் செய்வதே சிறப்பானதாகும். கருவுறுதல் ஆய்வுப் பட்டை (Pregnancy Text Card) யில் ஒருசில துளிகள் அதற்குண்டான குழியில் விட்டால், அந்த ஆய்வுப் பட்டையில் உண்டாகும் கோடுகளை வைத்து கருவுற்றதை உறுதி செய்யலாம். இக்கோடுகள் ஒருசில நிமிடங்களிலே தென்படும். ஒருகோடு மட்டும் வந்தால் கருவுறுதல் நிகழவில்லை என்றும், இரண்டு கோடுகள் அந்தப் பட்டையில் வந்தால் கருவுற்றது உறுதி என்றும் அறியலாம்.

கருவுற்றதின் அறிகுறிகள்: (முதல் பருவம் – I Trimester)
* மாதவிலக்கம் நிற்றல்: உடல் உறவுக்குப் பின் இயல்பான நாள்களில் மாதவிலக்கம் வராதபொழுது, கருவுறுதல் நிகழ்ந்ததைச் சந்தேகிக்கலாம். ஒழுங்கான 28 நாள்கள் சுழற்சியில் இந்நிகழ்வை உறுதி செய்யலாம். ஒழுங்கற்ற மாதவிலக்கச் சூழ்நிலையில் இதை அறிவது கடினம்.
* கருவுற்ற உடன் சுரக்கின்ற ஊக்கி நீர்களால், மார்புகள் மென்மையாகும், லேசான வலி ஏற்படும். ஆனால், இந்த ஊக்கிநீர் சுரப்புகள் தொடர்ச்சியாகச் சுரக்கும்பொழுது, உடல் அதற்கு ஏற்ப மாறுதல்களால் மார்புகள் இயல்பு நிலையடையும்.
* குமட்டல், வாந்தி: ‘மசக்கை’ (Morning sickness) என நம் மக்களால் அழைக்கப்படும் இந்த அறிகுறியும் சருவுற்ற ஆரம்ப நாள்களிலேயே தெரிய ஆரம்பிக்கும். பகல், இரவு என பாகுபாடின்றி எந்த நேரத்திலும் ஏற்படும். பெரும்பாலான பெண்களுக்கு குமட்டல் மட்டுமே இருக்கும். பலருக்கு வாந்தியும் உண்டாகும். சில பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலேயும் இருக்க வாய்ப்புண்டு.
* கருவுற்ற காலத்தில் முதல் பருவத்திலேயே குமட்டலும், வாந்தியும் அதிகம் இருக்கும். நாளாக, நாளாக இது குறைந்துவிடும். இந்த அறிகுறிகள் எதனால் ஏற்படுகிறது, எதனால் குறைகிறது என்பதன் காரணத்தை அறிய முடியவில்லை. ஊக்கி நீர் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகள் இந்த நிலையை உண்டாக்கலாம் என்று நினைக்கப்படுகிறது. முதல் பருவத்தில் இயல்பாக எடுத்துக்-கொள்ளும் உணவுகளில் இருக்கும் ஆர்வம் குறைந்துவிடும். உணவைப் பற்றி நினைத்தா-லேகூட குமட்டலோ, வாந்தியோ வருகின்ற நிலைகூட பலருக்கு ஏற்படும். பல பெண்கள் அதுவரை அதிகம் விரும்பி உண்ணும் உணவைத் தவிர்த்து, அதிகம் பிடிக்காத உணவை விரும்பத் தொடங்குவர். பெரும்பாலான பெண்கள் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை, பழங்களை, காய்களை (மாங்காய்) விரும்பி, சுவைத்து உண்பர். சில பெண்கள் சாம்பல்; மண் போன்றவற்றைக்கூட விரும்பி உண்பதையும் பார்த்திருப்போம். இவை மட்டுமின்றி பல பெண்களுக்கு லேசான தலைசுற்றல் முதல் மயக்கம்கூட ஏற்படும். இதுபோன்ற குமட்டல், வாந்தி, உணவு உண்பதில் மாறுபாடு, தலைசுற்றல், மயக்கம் போன்ற பல அறிகுறிகள் முதல் பருவத்தில் தோன்றுவதையே ‘மசக்கை’ என்கிறோம்.

அதிகளவில் சிறுநீர் கழித்தல்: (Increased Urination)
* கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக சிறுநீர் கழிப்பதைவிட அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும். கருவுற்ற காலங்களில் பெண்களின் உடலில் அதிகளவு இரத்தம் சுரக்கும். அதனால் உண்டாகும் அதிகளவு நீர்மம் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும் நிலையால் அதிகளவு சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.
களைப்பு: உடல் சோர்வும், களைப்பும் முதல் பருவத்தில் அதிகம் தெரியும். மற்றொரு அறிகுறியாகும். தூக்க உணர்வும், சில பெண்களுக்கு ஏற்படும். இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. புரொஜெஸ்ட்ரான் ஊக்கி நீர் சுரப்பு இந்நிலைப்பாட்டிற்குக் காரணமாக இருக்கலாம்.
* மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் பெரும்-பாலான கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படுபவை. இது தவிர கருவுற்ற பெண்-களுக்கு மேலும் சில அறிகுறிகள் தோன்றலாம்.
அதிக அளவு சுரக்கும் ஊக்கி நீர்களால் பெண்களின் மன நிலையிலும் சில மாற்றங்கள் உண்டாகலாம். முதல் பருவத்தில் சில பெண்கள் அதிக அளவு உணர்ச்சி வயப்படுவார்கள். சிலருக்கு அழ வேண்டும் போல் உணர்வுகூட ஏற்படும்.

உடல் பருமன்: சில பெண்களுக்கு உடல் பருத்துவிட்டது போல் உணர்வு ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் நேரங்களிலும் இதுபோன்ற உணர்வும் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். அதேபோன்று இப்பொழுதும் தோன்றக் கூடும்.
* லேசான உதிரப் போக்கு: சில பெண்களுக்கு கருவுற்ற நேரத்தில் மாதவிலக்கு நின்று-விட்டாலும், மிக லேசான உதிரப்போக்கு திடீரென ஏற்படக் கூடும். 10 முதல் 14 நாள்களில் கருவுறுதல் நிகழ்ந்த பின் இது ஏற்படலாம். கருவுற்ற சினை முட்டை கருப்பையின் சுவரில் ஒட்டும்பொழுது இதுபோல் இரத்தக் கசிவு ஏற்படலாம். அதைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. மருத்துவ அறிவுரை பெற்று இரத்தக் கசிவைச் சீராக்கலாம்.
தசைப்பிடிப்பு: சில பெண்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படும். அதனால் பிடிப்பு ஏற்பட்ட தசைப் பகுதியில் வலி ஏற்படலாம். இத்தசைப் பிடிப்பு கருப்பையில்கூட ஏற்படலாம். மாதவிலக்கு ஏற்படும்பொழுது உண்டாகும் வலியைப்போல் (அவ்வளவிற்கு இல்லாவிட்டாலும்) லேசான வலி ஏற்படலாம்.

மூக்கடைப்பு: சில பெண்களுக்கு மூக்கில் இருந்து லேசான இரத்தக் கசிவும், மூக்கடைப்பும் ஏற்படும். கருவுறுதல் நிகழும்பொழுது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சில மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம்.
கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம்.
இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரை-கள் முதல் பருவ கருவுற்ற, காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் குறைக்க உதவும்.ஸீ
(தொடரும்…)

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (102)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (102)

Uncategorized மருத்துவம் ஜூன் 1-15 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்

ஆண் இனப்பெருக்க இயக்கம்:

உடலுறவின்பொழுது வெளிப்படும் 15 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆண் அணுக்கள் (Sperms) இருந்தாலும் ஒரே ஓர் ஆண் அணுதான் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு, முட்டையின் உள் சென்றுவிடும். சில நேரங்களில் இரண்டு அணுக்களோ, மூன்றணுக்களோ முட்டைக்குள் வெற்றிகரமாக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அது போன்ற நிலைகளில்தான் இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தைகள் என்று பிறக்கக்கூடிய நிலை உண்டாகும். ஆண் அணு பெண்ணின் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு உள் நுழையும் இந்த நிகழ்வையே “கருவுறுதல்’’ (Fertilisation) என்கிறோம். ஆண் அணு, பெண் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு அதன் உள் நுழைந்தவுடன் கருவுறுதல் என்னும் நிகழ்வு உண்டாகிறது. கருவுற்ற பெண் முட்டை 3 முதல் 5 நாள்களில் கருக்குழாயிலிருந்து நகர்ந்து கருப்பையை அடைந்து, அதன் சுவரில் ஒட்டிக் கொள்ளும் (Implantation). இயல்பான நிலையில் மாதவிலக்கு நடந்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்வு ஏற்படும். கருமுட்டை வெளிப்பாடு (Ovulation) மாதவிலக்கு முடிந்த 14 நாள்களில் (இரண்டு வாரங்களில்) நிகழும். ஆண் கரு இந்தப் பருவத்தில், பெண் முட்டையோடு, இணைந்தால் கருவுறும் வாய்ப்பு அதிகம். ஆண் கரு, பெண் கருவோடு இணைந்து உருவாகும் கருவுற்ற முட்டை (Zygote) நகர்ந்து கருப்பையை அடைய மூன்று முதல் அய்ந்து நாள்கள் ஆகும். அய்ந்து நாள்களில் கருவுற்ற முட்டை, கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு வளர்ச்சி அடையத் துவங்கும். கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு வளர்ச்சி அடையத் துவங்கும். கருப்பைச் சுவரில் ஒட்டிய கருமுட்டையில் செல் பகுப்பு ஏற்படும். ஒரு செல் இரண்டாகவும், இரண்டு செல், நான்காகவும், நான்கு செல்கள் எட்டாகவும், மேலும் பல செல்களாகவும் பகுப்படைந்து பெருகிக் கொண்டே செல்லும். ஒரு செல், இரண்டாகப் பிரிந்தும், மேலும் பலவாகப் பிரிந்தும் வளர்ச்சியடையும்பொழுது அக்கரு, “கருக்கோளம்’’ (Blastomeres) என்றழைக்கப்படும்.

முதல் கருக்கோளம் இரண்டு செல் பகுப்பாக மாறி செல் கோளமாக உருவாக இரண்டு நாள்கள் ‘கரு’ எடுத்துக்கொள்ளும். இரண்டு செல் பகுப்பு, நான்காகப் பிரிந்து கருக்கோளமாக
(4 Blastomeres) உருவாக மூன்று நாள்கள் ஆகும். நான்கு செல்கள் மேலும் ஓரிரு நாள்களில், எட்டு செல் உடைய கருக்கோளமாக (8 Blastomeres) மாறும். முழுமையான வளர்ச்சியடைந்த கருக்கோளமாக (Morula) வளர்ச்சியடைந்த கருவில் இரண்டு பிரிவுகள் உண்டாகும். வெளிப்புறம் அமைந்துள்ள செல்கள் (Outer Cell Mass), வெளிப்புற செல்கள் தொகுப்பாகவும் (Trophectoderm), உள்புற செல்கள் ஒருங்கிணைந்து, ‘உள்புற செல் தொகுப்பாக’வும் (Inner Cell Mass – ICM) மாறுதலடையும். செல்கள் அமைப்பில் மாறுதல் நிகழ்ந்ததும், ஒரு நீர்க்குழி (Cavity) (Blastocyst) கருவினுள் உருவாகும். கருவின் அமைப்பில் நாற்பத்தாறு ‘மரபுத்திரி’கள் (Chromasomes) இருக்கும். இதில் 23 மரபுத்திரிகள் ஆணிடமிருந்தும், 23 மரபுத்திரிகள் பெண்ணிடமிருந்தும் கிடைக்கப் பெற்றவை. பெண்ணிடமிருந்து XX என்ற மரபுத்திரியும், XY என்ற மரபுத்திரி ஆணிடமிருந்தும் கருவில் இருக்கும். XX மரபுத்திரி ஆதிக்கம் அதிகமிருந்தால் பெண்ணாகவும், XY அதிகமிருப்பின் ஆண் குழந்தையாகவும் கரு உருவாகும். மரபுத்திரிகள் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கின்றன. ஒரு மாதத்தில் “சினை நீர்க்கோளமாக’’ (Blastocyst) கரு உருமாறும். வெளிப்புற செல் தொகுப்பு ‘நஞ்சுக் கொடி’’யாகவும் (Placenta), உள்புறச் செல் தொகுப்பு குழந்தையாகவும் உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் 4 வாரங்களில் நிகழும். கருவுற்ற மூன்றாவது வாரத்திலோ, கருவுற்ற 5ஆவது வாரத்தில் ஊக்கி நீர் (Hormone) உற்பத்தி அதிகமாகும். HCG என்ற ஊக்கி நீர், கருவிலிருந்து உற்பத்தியாகும். இந்த ஊக்கி நீர், சினைப்பையில் இருந்து சினை முட்டை மேலும் உருவாகாமல் தடுக்கிறது.

அதன் மூலம் மேலும் கருவுறுதல் நிகழாமல் தடுக்கப்படுகிறது. கரு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு கருவுற்ற நாள் முதல், குழந்தை பிறப்பு வரை ஏற்படும் மாற்றங்கள் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூன்று மாதங்களும் (Trimester) ஒரு பருவமாக, முதல் மூன்று மாதப் பருவம் (I Trimester), இரண்டாம் மூன்று மாதப் பருவம் (II Trimester), மூன்றாம் மூன்று மாதப் பருவம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பருவம் கருவுற்ற முதல் வாரம் முதல், 12ஆம் வாரம் வரையும், 13ஆம் வாரம் முதல் 26ஆம் வாரம் வரை இரண்டாம் பருவமாகவும், 27ஆம் வாரம் முதல், பேறுகாலம் நிகழ்வு வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பேறுகாலம் 280 நாள்கள் நடைபெறும் நிகழ்வு. 40 வாரங்கள் நடைபெறும் (10 மாதங்கள்) நிகழ்வு என்றும் இதைக் குறிப்பிடுவர். மூன்றாம் பருவம் கடைசியில் 15 நாள்கள் முன்போ அல்லது பின்போ மகப்பேறு நிகழ வாய்ப்புண்டு. மாதவிலக்கு நின்ற நாள்களை சரியாகக் கணிக்கத் தவறுதலால் இந்த மாறுபாடு நிகழ்கிறது. ஆனால், இப்பொழுது ‘மீள் ஒலி ஆய்வு’ (Ultra Sound), மூலம் கருவின் வளர்ச்சியையும், பேறுகால நாளையும் துல்லியமாகக் குறிப்பிடும் நிலை உள்ளது.
(தொடரும்…)


மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (101)

 https://unmaionline.com/images/magazine/2022/may/16-31/u11.jpg

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (101)

2022 Uncategorized மருத்துவம் மே 16-31 2022

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்

விந்தணுக்கள் (Sperms): விந்தணுக்கள்தான் ஆண் இனப்பெருக்க அணுக்கள். ஆணிகளின் இரண்டு விரைகளிலும் இவை உற்பத்தியாகின்றன. உற்பத்தி ஆகும் விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymes) வந்தடைந்த பின்பே முழு வளர்ச்சியடைந்த பக்குவமான விந்தணுக்களாக மாறும். இதை விரைகளில் உருவாகும் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியாத மிக, மிக, நுண்ணிய நிலையில் உருவாகும். இதையே “விந்தணு உருவாக்கம்’’ (Spermatogenesis) என்கிறோம். இயல்பான நிலையில் விந்தணுக்கள் அளவு 15 மில்லியனியலிருந்து, 200 மில்லியன் வரைக்கூட ஒரு மில்லி லிட்டர் எண்ணிக்கையில், விந்தில் இருக்கும். ஒரு விந்தணு 40 முதல் 46 ணுனீ நீளம் உடையது. ஒவ்வொரு விந்தணுவும் தலை (Head), கழுத்து (Neck), இடைப்பகுதி (Middle piece), வால் (Tail) என 4 பகுதிகளால் ஆனதாக இருக்கும்.

தலைப்பகுதி: சிறிய பாதாம் வடிவில் ஒரு முனையில் அமைந்துள்ள தலை புரத உறையோடு (Plasma Membrane), கூடிய தலைப்பகுதி தலையுறையோடும் (Acrosome), அணுக் ‘கரு’வோடும் (Nucleus) அமைந்திருக்கும். தலையுறை, விந்தணு தலையின் முன்பகுதியில் அமைந்திருக்கும். ‘மெய் கருஉயிரி கலங்களில் (Golgi apparalus) உள்ள சுரப்புகள் (Enzymes), தலையுறை அமையக் காரணமாகின்றன. கரு உருவாகும்பொழுது, பெண் சினை முட்டையின் உறையைக் கரைத்து (Egg membrane), விந்தணு அதில் ஊடுருவ இந்த நொதியங்கள்(Enzymes)  உதவுகின்றன. விந்தணுவில் உள்ள கருவின் (Nucleus) முனைப்புள்ளி (Pro-Nucleus), ஒரு அமைப்பாக, “நிறப்புரி’’களை (Chromosomes) கொண்டிருக்கும். இவை மூலமே ஓர் ஆணின் ‘மரபணு இயல்புகள் (Heriditary Characters) கருவுக்குக் கடத்தப்படும்.

கழுத்துப் பகுதி: தலைப் பகுதிக்கும், இடைப் பகுதியில் உள்ள சிறிய பாகமே கழுத்துப் பகுதி. இது இரண்டு “நடுமணித் திரள்களால்’’ (Centrioles) உருவானது. நடுமணித் திரள், அருகாமை, தொலைவு நடுமணித்திரள் (Proximal and distal centrioles) என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கருவின் அருகாமையில் இருக்கும் நடுமணித்திரள் “அருகாமை மணித்திரள்’’ (Proximal Centriole) வால் பகுதியின் அருகில் நடுமணித்திரள் “தொலைவு மணித்திரள்’’ (Distal centriole) அமைந்திருக்கும். அதிலிருந்து “அச்சு இழை’’ (Axial Filament) உருவாகும். உயிர்கரு (Zygote) முதன்முதலாக அணுப் பகுப்பு (Cell division) ஏற்பட, அருகாமை நடு மணித்திரள் (Proximal Centriole) தேவை.

இடைப்பகுதி (Middle piece): இடைப்பகுதி ஒரு உருளை வடிவ சிறிய பகுதியாகும். அச்சு இழையை (Axial Filament) உள்ளடக்கிய ‘உயிரணு இழைமணி’’(Mitochondrian)ச் சுருளி (Spiral) இதன் உள்ளே அமைந்திருக்கும். விந்தணுவின் நகரும் இயக்கத்திற்கு இதுவே காரணமாகும். அதனால் இப்பகுதி, “விந்தணுவின் பொறிப் பகுதி’’ (Engine Room) என்றழைக்கப்படுகிறது.

வால்பகுதி (Tail): வால் பகுதி ஒரு நீண்ட, உருண்ட விந்தணுவின் கடைசிப் பாகமாகும். இது “முக்கியப் பகுதி’’ (Main Piece) என்றும், “கடைசிப் பகுதி’’ (End piece) என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பகுதியில், மெல்லிய அச்சு இழை (Axial Filament) உள்ளது. அச்சு இழை உயிரணுப் புரதத்தால் (Cytoplasm) சூழப்பட்டிருக்கும். இதைச்சுற்றி “பிளாஸ்மா’’ உறை (Plasma Membrane) இருக்கும். வாலின் இறுதிப்பகுதி விந்தணுவின் கடைசிப் பகுதியாகும். முக்கியப் பகுதியில் உள்ள அச்சு இழை (Axial Filament) இதிலும் தொடரும். ஆனால், இந்தப் பகுதி அச்சு இழையைச் சுற்றி எந்த உறையும் இருக்காது. அதனால் இப்பகுதி “ஆடையற்ற (Naked) அச்சு இழை’’ என்றழைக்கப்படும்.

ஆண்இனப்பெருக்க இயக்கம்: விரைப்பையில் இருக்கும் இரண்டு விரைகளும் ஆண் அணுக்களையும் (Sperms), டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீரையும் உற்பத்தி செய்கின்றன. ஆண் அணுக்கள் உற்பத்தி ஆவதை “விந்தணு உருவாக்கம்’’ என்று கூறுகிறோம். விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப்பைக்கு (Epididymis) வந்தடைகின்றன. அங்கு சேமிக்கப்படும் விந்தணுக்கள், அங்குதான் முதிர்ச்சியடைகின்றன. முதிர்ச்சியடைந்த விந்தணுக்கள், விந்துக் குழாய்கள் மூலம், உடலுறவின்பொழுது, பெண் குறிக்குள் செலுத்தப்படுகின்றன. ஊக்கி நீர் சுரப்புத் தூண்டுதலால், கூப்பர் சுரப்பிகளும், சிறுநீர்க் குழாய் மொட்டுச் சுரப்பிகளும் விந்தணுக்கள் இயங்கத் தேவையான நீர்மத்தைச் சுரந்து, விந்துவாக மாறுகிறது. இந்த நீர்மங்கள் ஆண் அணுக்களின் இயக்கத்திற்கும், அதற்குத் தேவையான சத்துகளையும் அளிக்கின்றன. ஆண் அணுக்கள் இந்த நீர்மத்திலேயே மிதந்து சென்று பெண் அணுவை (Ovum) அடைகின்றன. விந்துப்பை (Seminal Vesicle) விந்துவில் உள்ள மற்ற பொருள்களை உற்பத்தி செய்து விந்துவோடு கலக்க வைக்கிறது. புராஸ்டேட் சுரப்பி (Prostate Gland) யும், நீர்மத்தையும், ஆண் அணுவின் இயக்கம் மற்றும் அதற்குத் தேவையான உணவுச் சத்தையும் சுரந்து ஆண் அணுவுக்கு வழங்குகிறது.

உடலின் உள் பகுதி (இடுப்புப் பகுதி _ (Pelvic region), வெளிப்பகுதி என இரண்டு நிலைகளில் அமைந்துள்ள ஆண் இனப்பெருக்க உறுப்புகள், அடிப்படையில் ஆண் அணுக்களை உற்பத்தி செய்வதும், அவற்றை முதிர்ச்சியடையச் செய்வதும், அவற்றின் தடையற்ற இயக்கத்தைச் செயல்படுத்தும் செயல்பாடுகளை செவ்வனே செய்வதுமான பணிகளைச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. உடற்குறைபாடுகள் ஏதுமில்லாத நிலையில் சுமார் 15 வயது துவங்கி, 70_80 வயது வரைகூட இச்செயல்பாடுகள் நிகழும் வண்ணம் உடற்கூறு இயங்கியல் (Physiology) அமைந்துள்ளது.
இனப்பெருக்க இயங்கியல் (Physiology of reproduction) ஆண்களைப் பொருத்த வரை நோய்த் தொற்று, நீரிழிவு நோய், புராஸ்டேட் சுரப்பி அழற்சி (Enlarged Prostate), புராஸ்டேட் சுரப்பியல் புற்றுநோய், விரைகளில் புற்றுநோய், சிறுநீரக நோய்த் தொற்று, பாலியல் நோய்த்தொற்று (STD) போன்றவற்றால் பாதிக்கப்படும். ஊக்கி நீர்ச் சுரப்பிக் குறைபாடு(Hormone Deficiency), ஆண் மலட்டுத் தன்மையை உண்டாக்கும். புகைப்பிடித்தல், மதுப் பழக்கம், மனநலக் குறைபாடுகள் போன்றவையும் ஆண்களின் இனப்பெருக்கக் குறைபாட்டை உண்டாக்கும்.
(தொடரும்…)

உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்

 

தெரிந்துகொள்வோம் : உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்

2022 மே 16-31 2022

சீனாவில் கொடுந்தொற்று

5,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஒரு கிராமத்தையே பெரும் நோய்த்தொற்று ஒன்று அழித்தொழித்திருக்கிறது. தற்போது சீனாவில் ‘ஹமீன் மங்கா’ என்றழைக்கப்படும் அகழாய்வு மய்யத்தில், அந்த நோய்க்குப் பலியான நூற்றுக்கணக்கானவர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வயதினர், இளைஞர்கள், சிறார்கள் என்று எவரையும் விட்டுவைக்காத அந்த நோய்த் தொற்றுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் உயிர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை.
அன்டோனியோ அம்மை நோய்
(கி.பி.165-180)
ரோமப் பேரரசின் படை வீரர்கள் பார்தியா அரசுடன் சண்டையிட்டு தாயகம் திரும்பியபோது, வெற்றியோடு அன்டோனியோ அம்மை நோயையும் கொண்டு வந்தனர். அந்த நோய் 15 ஆண்டுகளாகப் பரவி 5 லட்சம் பேருக்கு மேல் பலி கொண்டது. இதனால் ரோமப் பேரரசு பலவீனமடைந்து, பல்வேறு படையெடுப்புகளுக்குக் காரணமானது.
ஜஸ்டீனியன் பிளேக் (கி.பி.541-542)
கிழக்கு ரோமப் பேரரசில், ஒரு பிளேக் நோய் பரவி அந்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. கி.பி.541, 542ஆம் ஆண்டுகளில் பலமுறை கட்டுப்பாட்டுக்குள் வந்து மீண்டும் பரவிய அந்த நோய்க்கு அய்ரோப்பிய மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் பலியானார்கள்!
பிளேக் நோய் (கி.பி.1346-1353)
1300களில் ஆசியாவில் தோன்றிய பிளேக் நோய்த் தொற்று அய்ரோப்பாவுக்குப் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. எலியின் உடலில் உருவாகிய இந்த பிளேக் நுண்ணுயிர், ஈக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியது. இந்த நோயால் அய்ரோப்பிய மக்கள் தொகையில் பாதிப் பேர் மடிந்துபோனதாகக் கூறப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பிலிருந்து அய்ரோப்பா மீண்டு வர 200 ஆண்டுகள் ஆனது.
கோகோலிஸ்ட்லி (கி.பி.1545-1548)
கோகோலிஸ்ட்லி நோய்த் தொற்று பரவலால் மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்கப் பிராந்தியத்திலும் 1.50 கோடி பேர் செத்து மடிந்தனர். டைஃபாய்ட் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த நுண்ணுயிரி மனிதர்களை தற்போதும் அச்சுறுத்தி வருகின்றது.
அமெரிக்க தொற்று நோய்கள்
(16ஆம் நூற்றாண்டு)
அய்ரோப்பா மற்றும் ஆசியப் பகுதிகளில் அவ்வப்போது உருவான அம்மை போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவியது. குறிப்பாக அய்ரோப்பியர்களிடையே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாத அம்மை அமெரிக்க பூர்வ குடிமக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. இதன் விளைவாக பூர்வகுடிகளில் 90 சதவிகிதம் பேர் உயிரிழந்தனர். பிற்காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து படைகள் அமெரிக்காவை எளிதில் ஆக்கிரமித்ததற்கு, அவர்களை எதிர்த்துப் போரிடக்கூடிய பூர்வகுடிமக்கள் அம்மையால் அழிக்கப்பட்டது காரணமாக அமைந்தது.
லண்டன் பிளேக் (1665 – 1666)
கருப்பு மரணம் நோய்த் தொற்றின் உக்கிரமான கடைசி அலை, லண்டன் நகரில் கடந்த 1665ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. எலிகளால் பரவிய அந்த நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்காக லண்டனிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அந்த அலை அடங்குவதற்குள் நகர மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் பலியாகினர்.
எய்ட்ஸ் (1981 முதல்)
அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று முதல் முறையாகக் கண்டறியப்பட்டாலும், 1920களில் மேற்கு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகளிட-மிருந்து இந்த நுண்ணுயிரி மனிதர்களின் உடலுக்குள் பரவியிருக்கலாம் என்று கருதப்-படுகிறது. கூட்டு மருந்து சிகிச்சைகள் உள்பட பல்வேறு சிகிச்சை முறைகள் தற்போது எய்ட்ஸ்க்கு கண்டறியப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு இதுவரை 3.50 கோடி பேர் பலியாகியுள்ளனர்.
ரஷிய பிளேக் (1770 -1772)
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் பிளேக் நோய்த்தொற்று 1770களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப் பட்டவர்கள், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். நோய்ப் பரவலைத் தவிர்ப்பதற்காக தொழிற்சாலைகள் மாஸ்கோவுக்கு வெளியே மாற்றப்பட வேண்டும் என்ற அரசி இரண்டாம் கேத்தரீன் உத்தரவால் கலகம் வெடித்தது. இந்த நோய்ப் பரவல் ஓய்வதற்கு முன்பு 1 லட்சம் பேரை இந்நோய் கொன்றது.

சனி, 15 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (100)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (100)

மே 1-15,2022

மகப்பேறு

(PRAGNANCY)

மரு.இரா.கவுதமன்

ஆண் இனப்பெருக்க இயங்கியல்:

பெண் இனப்பெருக்க உறுப்புகள் பல நிலை மாற்றங்களும் வளர்ச்சியும் அடைவது போலவே, ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன. உடலுக்கு வெளியே இடுப்புக்குக் கீழ், உடலின் தொடைகளுக்கு இடையே விதைப்பையில் இருக்கும், இரண்டு விதைகளிலும், ஆண் பருவமடைந்ததும், ஆண்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீர் சுரப்பால், விந்து உற்பத்தி தொடங்குகிறது. சரியாக முதிர்ச்சியடையாத ஆண் அணுக்கள் விதைகளில் உற்பத்தியாகி, விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epidedymis) வந்து சேரும். அங்கு ஆண் அணுக்கள் முழு வளர்ச்சியடையும். ஆண் அணுக்கள், மிதந்து செல்வதற்குத் தேவையான நீர்மத்தை கூப்பர் சுரப்பிகள் உற்பத்தி செய்து ஆண் அணுக்களின் இயக்கத்திற்கு உதவுகின்றன.

கூப்பர் சுரப்பிகள், சிறுநீர்க் குழாய் மொட்டுச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரக்கும் நீர்மங்கள் ஆண் அணுக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. அதனால் ஆண் அணுக்கள் முழுமையான செயல்பாட்டோடு இயங்கவும், வேகமாக நகரவும் வாய்ப்பு ஏற்படும். வித்துக் குழாய்கள் (Vasdeference), விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymis) துவங்கும் நீண்ட குழாய்கள் ஆகும். தசைகளால் ஆன இக்குழாய்கள் இடுப்புக்குள் சென்று, சிறுநீர்க் குழாயோடு (Urethra) இணைகிறது. சிறுநீர்ப்பை (Bladder)க்கு பின்புறம் இணையும், விந்துக் குழாய்கள் ஆண் அணுக்களை, சிறுநீர்க் குழாய் வழியே வெளிச் செலுத்துகிறது.

பெண் இனப்பெருக்க இயங்கியலில் போல, ஆண் இனப்பெருக்க இயங்கியல் கூட ஊக்கி நீர் சுரப்புகளால்தான் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையின் அடிப்புறம் இருக்கும் பிட்யூட்ரி சுரப்பி (Pitutary Gland) சுரக்கும், நுண்ணறை ஊக்கி நீர்(Follicular stimulating Hormone – FSH) ஆண் விந்தணுக்கள் உற்பத்திக்கு (Spermatogenesis) அடிப்படைக் காரணியாகும். கரு ஊக்கி நீர்(Leutinising Hormone – LH), டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவுகின்றன. டெஸ்டோஸ்டீரான்தான் ஆண்களின் வாலிப வயது மாற்றத்திற்குக் காரணமான ஊக்கி நீராகும்.

அடிப்படையில் இனப்பெருக்கத்திற்கு முழுமையான காரணிகளாக அமைவது ஆண், பெண் இரு பாலருக்கும், நுண்ணறை ஊக்கி நீர், கரு ஊக்கி நீர் (LH), ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், ஆண்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரான் ஆகியவையே ஆகும்.

மாதவிலக்கு (Menopause) பெண்களுக்கு நிற்பதுபோல், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி  நிற்பதில்லை. ஊக்கி நீர் ஆண்களுக்குச் சுரந்து கொண்டே இருப்பதால் 80 வயது வரைகூட விந்தணு உற்பத்தியாகும். சில ஆண்களுக்கு, விரைகளில் நுண்மையான மாற்றங்கள் 45 முதல் 50 வயதில் நிகழலாம். இவை 70 வயது வரை கூட தொடரும். ஆனால்,  இம்மாற்றங்கள் நிகழ்ந்தாலும் விந்தணு உற்பத்தி நிற்காது. ஆனால், நீரிழிவு நோய் (Diabetes Malitus), களைப்பு, உடல் சோர்வு, மனத்தளர்ச்சி, பாலியல் உறவியல் ஆர்வமின்மை (Fatigue) (Weakness) (Depression) (Lack of interest)  மருந்துகளால் ஏற்படும் ஆண்மை இழப்பு (Impotence), விறைப்புத் தன்மைக் குறைபாடு (Erecticle Disfunction) போன்றவை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கும்.

(தொடரும்…)

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (99)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (99)

ஏப்ரல் 16-31,2022

மகப்பேறு

(PRAGNANCY)

மரு.இரா.கவுதமன்




சினைப்பையில் உள்ள சினைமுட்டை, ஊக்கிநீர் தூண்டுதலால் பக்குவமடைந்து, சினைப் பையிலிருந்து வெளியேறும். வெளியேறும் முட்டை, கருமுட்டைக் குழாய் வழியே, கருப்பையை அடையும். சினைப்பையில் உற்பத்தியாகும் ஊக்கி நீர் கருமுட்டை, கருப்பையில் தாங்கும் வகையில் கருப்பை சுவர்களில் மாற்றங்களை உண்டாக்கும். இம்மாற்றங்கள் கருப்பை உட்சுவர்களில் (Endometricen) ஏற்படும். இந்த சினை முட்டை, ஆண் அணுவோடு இணைந்துதான் கரு உண்டாகும். ஒருவேளை கருத்தரித்தல் நிகழாவிட்டால் உட்சுவர் புறணி (lining) சிதைவடைந்து, மாதவிலக்காக -_ உதிரப் போக்காக வெளிப்படும். ஆண் அணுவோடு (Sperm) இணையும் நிலை சினை முட்டைக்கு ஏற்பட்டால் கருத்தரித்தல் (Fertilisation) நிகழும். கரு வளர்ச்சியடைந்து குழந்தையாக உருவாகும். ஆண் அணுவோடு இணைந்த கருமுட்டை கருப்பையின் உட்சுவரில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளர்ச்சியடையும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களாக பெண்கள் பருவமடைவர். மார்புகள் வளர்ச்சியடையும். பெண்கள் உடல் வளர்ச்சி, அவர்களின் வனப்பை மேலும் அதிகமாக்கும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் நிகழ ஊக்கி நீர்களே காரணமாகின்றன.

இனப்பெருக்க இயங்கியல்: (Physiology of Reproduction):

பெண்களின் இனப்பெருக்க இயங்கியலை முதலில் நோக்குவோம். பெண்களின் இனப்பெருக்கத் தகுதியைப் பெறும் பருவத்தையே ‘பருவமடைதல்’ (Menarche) என்கிறோம். பருவமடைதல் என்பது முதல் மாத விலக்கம் (Menarche) ஏற்படும் நிலைப்பாடு ஆகும். ஊக்கி நீர் சுரப்புகளால் இந்த நிகழ்வு நிகழ்கிறது. முதல் மாத விலக்கம் நிகழ்விற்கு முன் ஊக்கி நீர்கள் (Hormones) சுரப்பால் மார்பக வளர்ச்சி, அக்குள், அடிவயிறு (Auxillary, Pubic) பகுதிகளில் முடி வளர்தல் போன்றவை ஏற்படும். சினைப்பையில் சினைமுட்டைப் பைகளில் (Follicles) சினை முட்டைகள் உற்பத்தியாகும். 28 நாள்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு சினை முட்டை மட்டுமே பக்குவமடைந்து, சினை முட்டைப் பையை உடைத்துக்கொண்டு வெளியேறி, கருமுட்டைக் குழாயில் வந்தடையும். இதை “கரு முட்டை வெளிப்பாடு’’ (Ovulation) என்கிறோம். கருக்குழாயை அடைந்த சினைமுட்டை, ஆண் அணுவோடு கரு முட்டைக் குழாயில் இணைந்தால் (பக்குவமான சினை முட்டை) கருவாக உருவாகும். கருமுட்டை வெளிப்பாடு நிகழ்ந்து, இரண்டு, மூன்று நாள்களில் இந்நிகழ்வு நடைபெற வேண்டும். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் சினை முட்டை உலர்ந்து, இரண்டு வாரங்களில் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். சினை முட்டை பக்குவமடைந்து, கருமுட்டைக் குழாய்க்கு வரும்பொழுது, கருப்பையின் உட்சுவர் புறணி கருவைத் தாங்கும் வண்ணம் பருமனாக மாறும். கருத்தரிக்காத நிலை ஏற்பட்டால் கருப்பையின் உட்சுவர் புறணி சிதைவடைந்து, இரத்தக் கசிவு உண்டாகும். புறணிக்கு வரும் தந்துகிகள் (Endometrial lining Capillaries) உடைவதால் இந்த இரத்தப்போக்கு ஏற்படும். கருத்தரிக்காத உலர்ந்த சினை முட்டையும், இந்த இரத்தப் போக்கோடு வெளியேறும். கருப்பையின் உட்சுவர் புறணி மீண்டும் பழைய நிலைக்கே மாறுபாடு அடையும். இந்த நிகழ்வு (இரத்தப் போக்கு) மூன்று முதல் அய்ந்து நாள்களுக்கு இருக்கும். இதையே ‘மாத விலக்கம்’’ (Menstruation) என்கிறோம்.

“மாத விலக்குச் சுழற்சி’’ (Menstrual Cycle) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. “சினைப்பை சுழற்சி’’ (Ovariau Cycle) என்றும், “கருப்பை சுழற்சி’’ (Uterine Cycle) என்றும் இரண்டு பிரிவாக இவை அறியப்படும். கருப்பை சுழற்சி, “ஈஸ்ட்ரஜன்’’ (Estrogen) என்ற ஊக்கி நீரால் தூண்டப்படும். ஈஸ்ட்ரஜன் தூண்டுதலால், கருப்பை உட்சுவர் புறணி விரிவடையும். சினை முட்டைப் பை (Follicle) வளர்ச்சி அடையும். ஒவ்வொரு 28 நாள்களிலும், பக்குவமடைந்த ஒரு சினைமுட்டை (Ovum) சினை முட்டைப் பையைக் கிழித்துக்கொண்டு  சினைப் பைகளிலிருந்து, கருமுட்டைக் குழாய்க்குச் செல்லும். இவ்வாறு “கருமுட்டை வெளிப்பாடு’’ (Ovulation) நிகழ்கையில், கருப்பை உட்சுவர் புறணி (Endometrial lining) உள்ள சுரப்பிகள் சுரப்பால் உட்சுவர் பருக்கும். இது “சுரக்கும் கட்டம்’’ (Secretory Phase) என்று  அழைக்கப்படுகிறது. இதையே “சினைப்பை சுழற்சி’’ என்கிறோம். “புரோஜெஸ்ட்ரான்’’ (Progesterone) என்ற ஊக்கி நீர் இந்தக் கட்டத்தில் சுரக்கும். இப்படி பருத்து வளர்ச்சியடையும், கருப்பையின் உட்சுவர் புறணி, கரு உண்டானால் அதைத் தாங்கும் வலிமையைப் பெறும். கருவுறுதல் நிகழ்ந்தால், ஊக்கி நீர் செயல்பாடு அதிகரிக்கும். புரோஜெஸ்ட்ரான் ஊக்கி நீர், சினைமுட்டை வெளிப்பாட்டுக்குப் (Ovulation) பின், சினை முட்டைப் பையால் உற்பத்தி செய்யப்படும். கருத்தரித்தல் நிகழ்ந்து, கருமுட்டைக் குழாயிலிருந்து கரு வெளியேறி கருப்பையை அடையும். கருப்பையின் உட்சுவரில் கரு ஒட்டிக் கொள்ளும். கருப்பையின் உட்சுவரில் கரு ஒட்டிக் கொண்டதும், HCG என்ற ஊக்கி நீர் கருவால் (Embryo) உருவாக்கப்படுகிறது. இதுவே சிதைவடைந்த சினை முட்டைப் பையிலிருந்து, புரோஜெஸ்ட்ரான் உற்பத்திக்கு உதவுகிறது. பிறகு புரோஜெஸ்ட்ரான் ஊக்கி நீர், நஞ்சுக் கொடியால் (Placenta) உற்பத்தி செய்யப்படுகிறது. புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பைச் சுவருக்கு கருவைச் சுமக்கும் வலிமையை வழங்குகிறது. கருவுறுதல் நிகழாவிட்டால், சிதைவடைந்த சினை முட்டைப்பை, புரோஜெஸ்ட்ரான் சுரப்பதை நிறுத்திவிடும். அதனால் கருப்பை உட்சுவர் புறணி, உடைந்து, இரத்தப் போக்காக பிறப்புறுப்பின் வழியே வெளிப்படும். மாத விலக்கம் நிகழ்வு, கருவுறுதல் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தும். சினை முட்டை வெளிப்பாட்டின் (Ovulation) பொழுது கருப்பை வாய் (Cervix) மெலிவடையும். உடல் சூடு சற்று அதிகரிக்கும். (99.40குதி).

மாதவிலக்கம் முடிவுறுதல் (இறுதி மாத விலக்கம்) (Menopause)

பெண்களின் மாதவிலக்கம் வயது முதிர்ச்சியின் விளைவாக (சுமார் 50 வயதில்) நின்றுவிடும். சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜன் சுரப்பு முழுமையாக நின்றுவிடுவதால் இது நிகழ்கிறது. மாத விலக்கம் இறுதியாக நின்று விட்டால், பெண்ணால் கருத்தரிக்க முடியாது. இயற்கையாக உற்பத்தியாகும் இந்த சுரப்புகள் நின்றுவிடுதலால், உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். நெஞ்சு படப்படப்பு(Palpitation), உடல் சூடாதல் (Hot Flashes), இரவு நேரங்களில் திடீரென வியர்த்தல் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புதல் போன்றவை நிகழும். பெண்கள் பலர் இந்த நிலையில் மனத்தளவிலும் பாதிக்கப்-படுவர். (Psycological disturbances) மனத்தளர்ச்சி நோய்கள், நீரிழிவு நோய், தன்னுடல் தாக்கு நோய்கள்(Thyroid diseases, Diabetes Mallitus, Auto-Imune diseases) போன்றவற்றால் சிறிய வயதில் மாத விலக்கம் நின்றுவிடும். சினைமுட்டைப் பை ஊக்கிநீர் (Follicular stimulating Hormone – FSH), லுயிட்னைசிங் ஊக்கி நீர் (Luteinizing Hormone – LH) அளவீடுகள், சிறிய வயதில் ஏற்படும் மாதவிலக்க நிற்றலை வெளிப்படுத்தும்.

மாதவிலக்க முன் நிகழ்வு:(Premenstrual Syndrome-PMS)

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கத்திற்கு முன்பு சில அறிகுறிகள் உண்டாகும். மாதவிலக்கத்திற்கு, ஏழு நாள்களுக்கு முன் இவ்வறிகுறிகள் தோன்றும். மாதவிலக்கம் முடியும்வரை அறிகுறிகள் தொடரும். உடலியல், மனவியல் முறைகளிலும் இப்பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, வயிறு உப்பசம், களைப்பு, முதுகு வலி, மார்பு வலி, அடிவயிற்றில் கடுமையான வலி, தலைவலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, மனத் தளர்ச்சி, எரிச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகளில் ஒன்றோ அல்லது, பல அறிகுறிகளோ பெண்களுக்குத் தோன்றலாம்.

(தொடரும்…)