சனி, 31 டிசம்பர், 2016

பெண்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு இதயத்துக்கு கேடு

விடுதலை ஞா.ம.,5.7.14


பெண்களுக்கான மாதவிலக்கின் போது ஏற்படும் பாலின ஹார்மோன் களின் மாறுபாடுகளால் இதய நோய்க்கு வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.
பெண்களுக்கு கொழுப்புச் சத்துக் குறையும்போது, ஹார்மோன் அளவுகள் மாறுபாடு அடைந்து, அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பட்ட தாரிகளுக்கான  பொது சுகாதாரப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் சாமர் ஆர். எல் கவ்தரி கூறும்போது, பெண்கள் மாதவிலக்கிற்கு காரணமாக உள்ள ஈஸ்ட்ராடியோல் என்கிற பெண்களுக்கான உறுதியான ஹார் மோன்களின் அளவு குறைவதைக் கண்டுபிடித்தோம். அந்த ஹார் மோன்கள் குறைந்து, தரம் குறைந்த கொழுப்புக்களுடன் இணைந்து கொள்வதால், இதய நோய்க்கு வாய்ப் பான காரணங்களாக அமைந்து விடுகின்றன என்று கூறினார். கொழுப் புச்சத்து இரத்த ஓட்டத்தில் சிறிய அளவில் சென்று லீப்போ-புரோட்டீன் என்று அல்லது கொழுப்பை கொண்டு செல்பவை என்று அழைக்கப் படுகின்றன.

பழைய முறை இரத்தப் பரிசோ தனைகளில் வெறுமனே கொழுப்பு அளவைக் கண்டறியும்போது லீப்போ-புரோட்டீன் அளவைமட்டும் பொது வாகக் கொள்வார்கள். ஆனால், அதில் HDL,LDL என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன.  அதிக அடர்த்தி உள்ள லீப்போ-புரோட்டீன் (High-Density Lipoprotein-HDL) இது தமனிகளில் கொழுப்பு சேர்வதை தடுப்பது,  குறைந்த அடர்த்தி கொண்ட லீப்போ-புரோட்டீன் (Low-Density Lipoprotein-LDL)  இது தமனிகளில் கொழுப்பைச் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து தடுப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

120 பெண்களிடையே மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்படி, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டறிய அணு காந்த  அதிர்வின் மூலம் செயல்படும் ஸ்பெக்ட் ரோஸ்கோபி என்னும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பெண்கள் கொழுப்பின் அளவு, அடர்த்தி, தரமற்ற கொழுப்பு ஆகிய அனைத்தும் இதய நோய்க்கு அடிகோலும் காரணிகளாக இருப்ப தால், அதிக அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கள்  ஆய்வு முடிவு பரிந் துரைப்பது என்னவென்றால், நவீனப் பரிசோதனைகள்மூலம் மதிப்பற்ற முடிவுகளைப் பெற முடிகிறது. அனைத்துவிதத்திலும் கொழுப்பைக் கொண்டு செல்பவற்றின் தரத்தை மாதவிலக்கின் தொடக்கத்திலேயே அறியமுடியும். ஆகவே, அந்த முடிவுகளின்படி, உட்கொள்ளக்கூடிய உணவுமுறைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். என்று எல் கவ்தரி குறிப்பிட்டார். இந்த ஆய்வுத்தகவல் லிபிட் ரிசர்ச் என்கிற ஏட்டில் வெளியாகி உள்ளது.

  

சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்



இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.
-வடுதலை ஞா.ம.,31.5.14

வியாழன், 29 டிசம்பர், 2016

நுட்பநோக்கி (ஸ்கேன்) ஏன்? எதற்கு?


ரத்தப் பரிசோதனையோ, ஸ்கேனோ, வேறு சோதனைகளோ... நோய்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே அவற்றின் நோக்கமல்ல. நோய்களின்றி, உங்கள்  உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்தான்! 4 லட்ச ரூபாய் செலவழித்து வாங்குகிற ஒரு காருக்கே, ஆண்டுக்கு  ஒருமுறையோ, இரு முறையோ சர்வீஸ் செய்து பராமரிக்கிறோம்.

விலைமதிக்க முடியாத உங்கள் உடலுக்கு அப்படியொரு பராமரிப்பும் கவனமும்  அவசிய மில்லையா? வருமுன் காத்துக் கொள்ள உதவுகிற அத்தகைய பரிசோதனைகளை அனைத்து மருத்துவர் களும் வலியுறுத்தக் காரணம்  இதுதான்... என்கிறார் பாரத் ஸ்கேன்ஸ் டாக்டர் பியூலா இம்மானுவேல்.

பெண்கள் தங்களது வயதுக்கேற்ப, ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய அவசியமான பரிசோதனைகள் சிலவற்றைப் பற்றி விளக்கமாகப்  பேசுகிறார் அவர்.

திருமணத்துக்கு முன்...

* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

* 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து  கொள்ளலாம்.

கருவுற்ற காலத்தில்...

* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடி இன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். அப்போதும் இதயத் துடிப்பு  இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.

* 2ஆவது ஸ்கேன்  (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம்  பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...

குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட் ரோம் உறுதி  செய்யப்படும். சில நேரங்களில் இந்த என்.டி. சோதனையில் துல்லியம் தவறிப் போகலாம். அதைத் தவிர்க்க ஆட்டோ என்.டி. என்கிற லேட்டஸ்ட்  சோதனை வந்திருக்கிறது. anomaly scan (20 வாரங்களில்) குழந்தையிடம் வேறு ஏதேனும் குறை பாடுகள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ள...

இந்தக் காலத்தில் செய்யப்படுகிற 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை தாயின் வயிற்றுக்குள் கொட்டாவி விடுவது, சொரிவது, கண்களைத்  திறந்து பார்ப்பது, கால்களை உதறுவது போன்ற சேட்டைகளைக் கூடப் பார்க்க முடியும்.

கடைசி ஸ்கேன் (கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்) குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா,  குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள... டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்  என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை,  கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கர்ப்பிணி அல்லாதவர்களுக்கான சோதனைகள்...

* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ, வலி தோன்றினாலோ,  அக்குளில் நெறிகட்டியது போலத் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். வெறும்  பத்தே நிமிடங்களில் இந்தச்சோதனையை முடிக்கலாம்.

* மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய  எஃப்.என்.ஏ.சி என்கிற fine needle aspiration cytology (FNAC) முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல்  எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் வழிகாட்டுதல்படி துல்லியமாக செய்ய  முடிகிறது.

* மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதைக் கடக்கும் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை டிஜிட்டல்  மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை  கொடுத்துவிடலாம்.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தீவிரமும் இன்று மிகவும் அதிகமாக இருக்கிறது. பாப் ஸ்மியர் சோதனை யின் மூலம் கர்ப்பப்பை வாயிலிருந்து  செல்களை எடுத்து புற்றுநோயைக் கண்டறியலாம். அதில் சந்தேகம் இருந்தால் எம்.ஆர்.அய். மற்றும் பெட் சி.டி. ஸ்கேன்களும் பரிந்துரைக்கப்படும்.

* 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு பலவீன நோய் வரும். எலும்புகளின் பலவீனத்தின்  அளவைத் துல்லிய மாகக் கண்டறிய டெக்ஸ்சா ஸ்கேன் உதவும்.

-விடுதலை,14.7.14

செவ்வாய், 20 டிசம்பர், 2016

இனிமேல் நடக்க முடியுமா?

வயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித் திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சார்ந்த மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளும்போது, இது புரிய ஆரம் பிக்கும்.

முழங்கால் மூட்டு

முழங்கால் மூட்டு நமது உடம்பில் உள்ள எல்லா மூட்டுகளை விடவும் பெரிதான மூட்டு. இது ஃபீமர்  எனப்படும் தொடை யெலும்பு, டிபியா  எனப்படும் கணுக்காலோடு இணையும் நீண்ட எலும்பு, முழங்கால் சில்லை இணைக்கக் கூடியது. இது நமது உடல் எடையைத் தாங்கவும், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்ற கடினமான வேலைகளின்போது அவற்றால் ஏற்படும் அழுத் தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூட்டுவாதம் என்றால் என்ன?

இடுப்பு, முழங்கால் போன்ற உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளைப் பொதுவாகவும், வெகு குறைவாகச் சிறிய விரல் மூட்டுகளைப் பாதிக்கும் பிரச்சினை மூட்டு நோய் எனப்படுகிறது.

முழங்கால் மூட்டுவாதம் யாரை பாதிக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும், மூட்டுவாதம் முதுமை காரணமாக ஏற்படும் நோய் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த நிலைப்பாடு இப்போது மாறி, 40-45 வயதிலும்கூட அது தாக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. முழங்கால் மூட்டுவாதம் ஏற்படுவதற்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகின்றனர்:

40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பெண்கள்
உடல்பருமன் கொண்டவர்கள்

இளம்வயதில் முழங்கால் காயமடைந்தவர்கள் அல்லது அதற்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
பலவீனமான முழங்கால் தசைகளைக் கொண்டவர்கள்

மூட்டுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்பவர்கள்

அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்பவர்கள்

மூட்டுவாதத்தால் மூட்டுக்குள் என்ன நடக்கிறது?

முதுமை காரணமாக வலுவிழக்கும் மூட்டின் உள்ள மைப்புகள், அதிக உடல் எடை, காயம், தசை வலிமையின்மை போன்ற காரணங்களால் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, மூட்டின் குருத்தெலும்பு மெல்லத் தேயத் தொடங்கிச் சிதைய ஆரம்பிக்கிறது.

இதற்கு எதிர்வினையாக, மூட்டு எலும்புகளின் நுனியில் சிறு ஊசிகள் போன்று புதிய எலும்பு வளரத் தொடங்கி நுண்நரம்புகளைக் குத்தி வலியை ஏற்படுத்தும். இவை மட்டுமல்லாது மூட்டுஉறை, தசைநார்கள் தடித்துச் சுருங்கி ஒட்டுமொத்த மூட்டையும் உருக்குலைக்கும். இப்படி மூட்டின் அனைத்து அமைப்புகளும் பாதிக்கப்படுவதால் இது முழு மூட்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.

முழங்கால் மூட்டுவாதத்தின் அறிகுறிகள் என்ன?

மூட்டு வலி, 30 நிமிடங்களுக்கு மிகாத மூட்டு விறைப்புத் தன்மை, மூட்டு வீக்கம், மூட்டை முழுதாக மடக்க அல்லது நீட்ட முடியாத நிலை, மூட்டை அசைக்கும்போது ஏற்படும் உராய்வு சத்தம் போன்றவை.

அன்றாட பிரச்சினைகளைப் பொறுத்தவரை, நடப்பது, மாடிப்படி ஏறுவது, நிற்பது, எழுந்திருப்பது, காலை மடக்கி உட்காருவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற சாதாரண நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமமும் அயர்ச்சியும் ஏற்படும். மேலும், வீட்டு விசேஷங்களில் பங்கெடுப்பது, பண்டிகைகளைக் கொண்டாடுவது, பொழுதுபோக்குச் செயல் பாடுகள், விளையாட்டுகளில் பங்கேற்பது உள்ளிட்டவையும் கேள்விக்குறியாகும். சுருக்கமாக, ஒரு நபரின் செயல்பாடு, வாழ்க்கைத் தரத்தில் குறைவு ஏற்படும்.

மூட்டுவாதத்தால் சாதாரண இயங்கு நிலையிலிருந்து, 'மூட்டுச் செயலிழப்பு' என்ற இறுதி நிலையை எட்டுவதற்குச் சராசரியாக 10-15 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், மூட்டுவாதம் கொண்ட வர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான அறிகுறிகள், அன்றாடப் பிரச்சினைகள், சிகிச்சைக்கான தேவைகளைக் கொண்டிருப்ப தில்லை.

சிலருக்கு மிதமான அளவில் பிரச்சினைகள் இருக்கலாம், வேறு சிலருக்கு மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மிகக் கடுமையான பிரச்சினை இருக்கலாம். ஒவ் வொருவருக்கும் ஏற்றவாறு வலி நிவாரணி, மருந்தில்லா சிகிச் சைகள், மூட்டு-மாற்று அறுவைசிகிச்சை எனப் பல்வேறுபட்ட சிகிச்சைத் தேர்வுகள் உள்ளன.

முழங்கால் மூட்டுவாதத்தைக் குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால், முழங்கால் மூட்டுவாதம் உரு வாவதை முன்கூட்டியே தடுப்பதற்கு, கண்டறிந்தவுடன் மோசமடையாமல் கட்டுப்படுத்துவது பெருமளவில் சாத்தியமே. அவற்றில் மிக அவசியமானவை: உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, மூட்டின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல்

உடல் எடை குறைப்பு

ஆரோக்கியமான உடல் எடையைவிட அதிகரிக்கும் ஒவ் வொரு 5 கிலோவுக்கும் முழங்கால் மூட்டுவாதத்துக்கான ஆபத்து 36 மடங்கு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

அதிக உடல் எடை மூட்டுவலியை அதிகமாக்கி, உடலியக்கத்தைக் குறைக்கும், அதனால் மேலும் எடை கூடித் தசைகள் வலுவிழந்து, மூட்டு அழுத்தம், வலி அதிகரிப்பு போன்றவற்றின் சுழற்சி மீண்டும் ஏற்படுகிறது. அதிக எடை கொண்டவர்களில், மூட்டு வாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக மொத்த எடையில் 10% வரை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறது.

உடல் எடையைக் குறைப்பதற்கு, உணவு மாற்றம் மட்டு மல்லாமல் முழு உடல் சார்ந்த உடற்பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கும். அதே போல், எடையைக் குறைத்த பின்னர், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு உடற்பயிற்சி நிபுணர், உணவியல் வல்லுநர் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பதும் பயனளிக்கும்.

காலுக்கான உடற்பயிற்சிகள்

வலுவற்ற முழங்கால் தசைகள் மூட்டுவாதம் உண்டாவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பதால், அவற்றைப் பலப்படுத்துவது அவசியம். ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் கண்காணிப்பில் தொடர்ச்சியாகச் செய்யப்படும் தசை வலிமைப் பயிற்சிகள் (குறிப்பாகக் குவாட்ரி செப்ஸ் எனப்படும் முன்தொடை தசை அல்லது முழு காலுக்கான வலிமை பயிற்சிகள்), நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது போன்ற ஏரோபிக் பயிற்சிகளை ஆறு மாதங் களுக்குச் செய்துவந்தால் மூட்டுவலி குறைந்து, செயல்பாடு அதிகரித்து, வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவது நிரூபிக்கப் பட்டுள்ளது.

நடப்பது, மிதிவண்டி ஓட்டும் உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவையா?

மூட்டுவாதம் கொண்டவர்கள் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்து உடல் செயல்பாடின் மையை முடிந்தவரை குறைக்க வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம்  19 முதல் 64 வரை வயது உடையவர்களின் ஆரோக்கியத்துக்குக் குறைந்த பட்சம் வாரத்துக்கு 150 நிமிடங்கள் துடிப்பான நடைப்பயிற்சி, யோகா, மிதிவண்டி ஓட்டுவது போன்ற மிதமான ஏரோபிக் பயிற்சி களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

இந்த உடற்பயிற்சி வழிகாட்டல்கள் மூட்டுவாதம் உடைய வர்களுக்கும் பொருந்தும். ஆரம்பத்தில் சிறிது சிரமமாகத் தெரிந் தாலும், உங்களால் முடிந்த மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியைச் செய்ய முயற்சியுங்கள். 150 நிமிடங்களை 40-50 நிமிடங்கள் எனப் பிரித்துக்கொண்டு வாரம் 3 அல்லது 4 நாட்கள் செய்யலாம். இதுவரை உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வாரம் 150 நிமி டங்களை அவசரப்படாமல் படிப்படியாக அடை வதை இலக்காகக் கொண்டு செயல்படலாம். வாய்ப்பிருந்தால் கால்கள், இடுப்பு, முதுகு, வயிறு, கைகளின் தசைகளுக்கு வலிமை தரும் பயிற்சியை வாரம் இரண்டு முறை செய்தால், மேலும் பலன்கள் கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவாதம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளைவிட, தொடர்ச்சியான உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கி, வலியைக் குறைத்து, உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்து, மூட்டின் ஆரோக் கியத்தை மேம்படுத்தி நன்மையே செய்யும்.

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் கூடுதல் பயன்கள்: இதய நோய், நீரிழிவு நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்; உடல் எடையைச் சீராக வைத்திருக்க முடியும்; மனச் சோர்வு, பதற்றம் இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க முடியும்; அன்றாட வேலைகளைச் செய்யும் திறனைப் பராமரிக்க முடியும்.

முழங்கால் மூட்டில் அதிகப்படி அழுத்தத்தைக் குறைப்பதற்கான எளிய வழிகள்

மூட்டு வலி, அதிகப்படியான மூட்டு அழுத்தத்தைக் குறைக்க வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தலாம்

மாடிப்படி ஏறும்போது, பக்கவாட்டு பிடியைப் பிடித்துக் கொண்டு ஏறலாம்

மாடிப்படி ஏறும்போது, பாதிக்கப்படாத/அல்லது குறை வாக வலியுள்ள காலை முதலில் வைத்து ஏறவும்

வெகு நேரம் காலை மடக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டாம்

ஹை-ஹீல்ஸ் செருப்புகளை அணிய வேண்டாம். இது இடுப்பு, பாதம், முழங்காலின் அமைப்பை மாற்றி மூட்டு களில் கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும்

நீங்கள் கடினமான உடலுழைப்பு தேவைப்படும் வேலையைச் செய்பவரானால், உங்கள் வேலையைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்யலாம் அல்லது தேவைக்கேற்றவாறு மற்றவர் உதவியைப் பெறலாம். 
-விடுதலை,19.12.16

வியாழன், 8 டிசம்பர், 2016

வெயில் ஏன் சோர்வடைய வைக்கிறது?

மனிதர்கள் வெப்ப ரத்தப் பிராணிகள். அதனால் நம்முடைய உடல் எப்போதும் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும். பாம்பு, தவளை போன்ற குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்பநிலை, சூரியன் இருக்கும்போது வெப்பமாகவும், சூரியன் மறைந்த பிறகு குளிராகவும் மாறிவிடும்.

தண்ணீர் வறட்சி

வெயிலில் நாம் வெளியே செல்லும்போது நம் முடைய உடல் வெப்பத்தைப் பெறும். அதேநேரம் அதிகம் வெப்பமடைந்துவிடவும் கூடாது. அப்படி அதிக வெப்பமடைந்தால் வெப்ப மயக்கம் போன்ற பிரச்சினை உடலைக் கடுமையாகப் பாதிக்கலாம். வெயிலில் மட்டுமல்லாமல் கடுமையாக உழைக்கும்போதும் உடல் வெப்பமடையும்.

இப்படி அதிக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு, வியர்வையை வெளியேற்றி உடல் தன்னையே குளுமைப்படுத்தித் தற்காத்துக்கொள்கிறது. அதிகமாக வியர்த்த பிறகு போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், ஒரு புள்ளியில் உடலில் உள்ள தண்ணீர் பெருமளவு வற்றிப் போய் உடலின் உள்ளுறுப்புகள் வறண்டுவிடும். இதனால்தான் உடல் சோர்வும் மந்தமும் அடைகிறது. அப்போது சாதாரண வேலையைச் செய்யவும், நடக்கவும், கையைத் தூக்கவும்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

உள்ளே ஒரு கடிகாரம்

வெப்பம் மட்டுமில்லாமல், குளிரும் மக்களைச் சோர்வுறச் செய்யும். நாம் வெப்பரத்தப் பிராணியாக இருப்பதால்தான் இதுவும் நடக்கிறது. குளிர்காலத்தில் உடல் தன் இயல்பான வெப்பநிலையைப் பராமரிப்பதற்கு நிறைய ஆற்றலைச் செலவழிக்கும். உடல் நடுக்கம், பற்கள் கிட்டிப்பதுகூட, குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு உடல் ஆற்றலைச் செலவழிக்கும் ஒரு வழிதான்.

அப்புறம் சூரியன் நம் உடலைச் சோர்வடைய மட்டுமே வைக்கிறது என்று நினைப்பதும், தவறான நம்பிக்கை. நமது உடலுக்குள்   என்றொரு கடிகாரம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. இந்தக் கடிகாரத்தை இயக்குவது சூரியனே.

காலை ஆனவுடன் எழுந்திருக்க வேண்டும் என்ற தூண்டு தலைத் தருவதும், மாலை ஆனவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதும் இந்தக் கடிகாரம்தான். இந்தக் கடிகாரத்தின் பேச்சைக் கேட்டு நடந்தாலே, நம் உடலில் பாதி விஷயம் ஒழுங்காக நடக்கும். ஆனால், நாம் கேட்கிறோமா
-விடுதலை,8.12.16