புதன், 4 ஜூலை, 2018

டாக்டர் பழ.ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது



சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து வப் பல்கலைக்கழக வளா கத்தில் 28.06.2018 வியாழக் கிழமை மாலை 6.00 மணியள வில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற விழா வில் சிறந்த பல் மருத்துவருக் கான விருதினை, ஊற்றங்கரை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி பழ னியப்பன், வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணிபழனியப்பன் வாழ்விணையரின் இளைய மகனும் பெரியார் மருத்துவ ரணி செயலாளரும், விழுப்பு ரம் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவத்துறை தலை வருமான மருத்துவர் பழ.ஜெகன்பாபு அவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் விருது அளித்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செய லாளர் கு. இளங்கோவன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ந.கண்ணன், மாவட்ட மளிரணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா ஆகியோர் கலந்துகொண்டு கழக சார்பில் பாராட்டை தெரிவித்தார்கள்.

-  விடுதலை நாளேடு, 30.6.18

புதன், 20 ஜூன், 2018

சிறுநீரகத்தை பாதிக்கும் மைக்ரோ புரதம்!



வாழ்க்கையில் அவசரமாகக் கடந்து போய், தவறவிட்ட கணங்கள் திருப்பிக் கிடைக்காதவை மட்டுமல்ல, தீர்க்க முடியாத சிக்கல்களையும் கொண்டுவந்து சேர்க்கும். நீரிழிவு நோயும் அப்படித்தான்.

என்ன செய்துவிடப் போகிறது? என இந்நோயில் நாம் அலட்சியமாய், அறியாமையாய்த் தவறவிடும் கணங்கள், எதிர்பாராத சிக்கல்களைப் பிற்காலத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும். சர்க்கரை நோயில் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு அப்படியான சிக்கல்களில் ஒன்று!

அவசியமில்லாமலும் சரியான மருத்துவ வழிகாட்டு தலும் இன்றி, இஷ்டத்துக்கு எடுக்கும் எந்த மருந்தும் பின்னாளில் பிரச்சினையைத்தான் தரும். அது நவீனமோ மரபோ, துல்லியமாய்க் கணித்து, திறம்பட மருந்தைப் பரிந் துரைக்காதபோது இச்சிக்கலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

அலட்சியமே முதல் காரணம்

மருந்துகளில் அலட்சியம், உணவில் அலட்சியம், உடற்பயிற்சியில் அலட்சியம் என இருப்போர் இறுதியில் வந்து சேர்வது சிறுநீரக நோய்ச் சிக்கலில்தான். கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், சில ஆண்டுகளில் சிறுநீரக நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அதுவும் இந்த அளவு, தற்போது இனிப்பு தேசத்தில் எக்குத்தப்பாக அதிகரித்து வருகிறது.

புரத அளவைப் பாருங்கள்

கட்டற்ற சர்க்கரையால் பழுதாகும் சிறுநீரகம், முதலில் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. முழுசாய் முடங்கிப் போவதற்குச் சற்று முன்னதாகத்தான் சின்னச் சின்ன அறிகுறிகளையும் ரத்தத்தில் புரதம், உப்பு, கிரி யாட்டினின்களில் மாற்றத்தையும் காட்டத் தொடங்குகிறது. ரத்தத்தில் யூரியாவும் கிரியாட்டினின் அளவும் சரியாக உள்ளது என அலட்சியமாய் இருப்பதைவிட ஆபத்து, இந்நோயில் வேறு எதுவும் கிடையாது.

கிரியாட்டினின் நம்பகத்தன்மையை நவீனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. மைக்ரோஅல்புமின் யூரியா  எனும் சிறுநீரில் வரத் தொடங்கும் நுண்ணியப் புரதக் கழிவைத்தான் இப்போது நவீன மருத்துவம் உற்றுப் பார்க்கச் சொல்கிறது.

ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும், தன் ரத்தச் சர்க்கரை அளவோடு உள்ளதா எனக் கணிக்கும் போதே, சிறுநீரில் நுண்ணியப் புரதம்  கழிகிறதா என்பதை அவ்வப்போது பார்க்கத் தவறிவிடக் கூடாது. கூடவே எஸ்டிமேஷன் ஆஃப் க்ளோமெரூலா ஃபில்ட்ரேஷன் ரேட்  எனப்படும்  என்னுமொரு மிக முக்கிய பரிசோதனையையும் பார்த்தாக வேண்டும்.

இந்த இரு சோதனைகளை எல்லா நீரிழிவு நோயினரும் அவ்வப்போது செய்து பார்த்து தம் நலத்தை, தம் சிறுநீரக நலத்தை உறுதி செய்துகொள்வது மிக மிக முக்கியம். மைக்ரோஅல்புமின் கொஞ்ச நாளில் மேக்ரோஅல்புமின்  ஆகி பின்னர் எண்ட் ஸ்டேஜ் ரீனல் டிசீஸ் எனும்  ஆவது இந்தியாவில் மிக மிக அதிகம். மேலோட்டமாக நீரிழிவுக் கென செய்யப்படும் பல பரிசோதனைகளில் சிறுநீரகத்தின் நலம் முழுதாக அறியப்படுவதில்லை.

எல்லாப் பரிசோதனைகளும் தவறு. வணிகச் சூழ்ச்சி கொண்டது என்கிற பிரசங்கம் வேறு, நீரிழிவு நோய் சார்ந்து ஆங்காங்கே பேசப்படுவதும், இப்போது கணிசமாக அதிகரித்திருப்பது இன்னும் வேதனை. மருத்துவத் துறை யிலுள்ள அறமற்ற வணிகத்தை எதிர்ப்பதாகப் புறப்பட்டு, உண்மையான அறிவியலையும் புறக்கணிக்கும் போக்கு, இந்நோயில் பல சிக்கல்களைச் சாமானியனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம், நீரிழிவு நோயுடன் யாருக்கு ரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளதோ, அவருக்கே சிறுநீரக பாதிப்பு வரும் ஆபத்து அதிகம் என்கிறது நவீன மருத்துவம். குறிப்பாக இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம், அதாவது டயாஸ்டாலிக் பிரஷர் 90-க்குள் இருக்க வேண்டும்.

உள்ளூர் உணவே நல்லது!

சிறுநீரகத்தின் அளவு ஒவ்வொரு மரபுக்கும் மாறுபடும். அதில் உள்ள மிக நுண்ணிய வடிகட்டிகள், அதாவது நெப்ரான்கள் அளவும்கூட மாறுபடும். ஆப்பிரிக்க மரபி னரின் நெப்ரான் அளவும் அமைந்தகரை மரபினரின் நெப்ரான் அளவும் நிச்சயம் ஒன்றல்ல. அதேபோல் போஷாக்காகப் பிறந்த குழந்தைக்கும், குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தைக்கும் இந்த நெப்ரான்களின் அளவில் வேறுபாடு உண்டு. எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் கெடாமலிருக்க பீட்சா, பிரெஞ்சு ஃபிரைஸ் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளைச் சாப்பிடாமல், ஏன் உள்ளூர் உணவு அவசியம் என்பதற்கான காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் மெஸ்ஸின் சாம்பாரில் உள்ள பாசிப்பயறுப் புரதத்துக்கும் அல்லது அயிரை மீன் குழம்புப் புரத்துக்கும், கலிஃபோர்னியா சந்தையில் புழங்கும் சால்மன் மீனின் புரதத்துக்கும் விலங்குப் புரதத்துக்கும் நிறையவே வித்தி யாசம் உண்டு.  சாப்பிடும் பெரும்புரத உணவின் கழிவை, இயல் பிலேயே அளவில் கூடிய அவர்கள் சிறுநீரக நெப்ரான்கள் அழகாக வெளி யேற்றிவிடுவதுபோல் நம் நெப்ரான்களால் முடிவதில்லை.

இயல்பிலேயே அளவில் குறைந்த நம் சிறுநீரக நெப் ரான்கள், இச்செயலில் விழிபிதுங்கி விக்கி அடைத்துக் கொள்ளும். மொத்தத்தில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. சிறுநீரகத்தையும் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

எப்போதும் வேண்டாம் கிழங்கு!

ஃபிங்கர் ஃப்ரைஸ்! உலகெங்கும் உருளைக் கிழங்கை நீளவாக்கில் செவ்வகத்துண்டுகளாக வெட்டி, பொரித்து விற்பனை செய்யப்படும் ஒரு பில்லியன் டாலர் நொறுக் குத்தீனி. சிப்ஸ் அதன் ஒண்ணுவிட்ட தம்பி. உலகில் கணிசமானோரின் உடல் எடையைக் கூட்டி, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய் களில் தள்ளியதில் இந்த இரண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் உருளை சிப்ஸ் கம்பெனிகளுக்குத் தர என்றே தனியாக, நீள வாக்கில் பருத்து வளரும் இயல்புடைய வீரிய ஒட்டுரக உருளை உருவாக்கப்பட்டது. நெடுங்காலம் முன்பு நம் பசியாற்ற, தென் அமெரிக்காவில் உள்ள பெரூ நாட்டில் உருவான உருளைக்கும், இந்த கம்பெனி படைக்கும் இப்போ தைய உருளைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நீள நீள துண்டுகளால், பொக்கே போல் அவை அலங் கரிக்க, மற்ற நாடுகளில் ரஸ்ஸெட் பர்பேங்க் அண்ட் மாரிஸ் பைப்பர்  வகை உருளைதான் வேண்டுமாம்.

இந்தியாவில் நல்ல பருத்த உருளைக்கென ஜோதி, சந்திரமுகி, அட்லாண்டா போன்ற வீரிய பருத்த ரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை களெல்லாம் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் படைத் தவை. தான் விரும்பும் பெரிய வடிவில் அவை விளைந்து தள்ள, பயன்படுத்தப்படும் உர ரசாயனங் களும் பூச்சிக் கொல்லிகளும் ஏராளம். இவற்றின் கூறுகள், விளை மண்ணிலும், விளைவிப்பவன் உடலிலும் ஏற்படுத்தும், நலவாழ்வின் முறிவில் ஏற்படும் ஒலிதான், நாம் அதை மொறுக் மொறுக் என ருசித்து நொறுக்கும் போது கேட்கப்படும் ஒலி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

-  விடுதலை நாளேடு, 18.6.18

செவ்வாய், 12 ஜூன், 2018

உடல் எடை; ஆய்வில் புதியத் தகவல்கள் வெளியீடு



சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் அய்ரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொ ஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபி ஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர்,  மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்த மடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனு மதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு  இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள்.

இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு இருக்காமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்... அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

அதோடு, வீட்டில் பருப்பு வகைகள், மளிகைச் சாமான்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக் கண்டெயினர்களைத் தவிர்த்து விட்டு அலுமினியம் அல்லது கண்ணாடி ஜார்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதன்மூலம் மளிகைப் பொருட்களை நிரப்பி வைக்க சிந்தெட்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ரசாயனத் தொற்றையும் நம்மால் தவிர்த்து விட முடியும் என்கின்றனர் இந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைமை மருத்துவர் ஆனா காத்தரீனா சவுசா இது குறித்து விளக்கமளிக்கையில்,  ஒபிஸோஜென் ஃப்ரீ லைஃப்ஸ்டைலைக் கட்டமைப்பதில் இது ஒரு துவக்க முயற்சி தான். ஆனாலும் இதையொரு நல்ல தொடக்கமென்றே சொல்ல வேண்டும் என்கிறார்.

அதற்கான முதல்படியாக தினந்தோறும் நமது உணவுப் பழக்கம் மற்றும் வீட்டுச் சுத்தம் இரண்டிலும் முக்கியமாகக் கவனம் செலுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். வயது வந்தோர் நாளொன்றுக்கு 50 மில்லிகிராம் தூசுகளை உட்கொள்கிறார்கள்... சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்களை பெரியவர்களோடு ஒப்பிடும் போது மேலும் இரு மடங்கு தூசுகளை உட்கொள்கிறார்கள். எனவே வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதென்பதை நமது முதல் கடமையாகக் கருத வேண்டும். அதோடு வீட்டின் ஃபர்னிச்சர்களைத் துடைக்க எப்போதும் ரசாயன திரவங் களைப் பயன்படுத்து வதைக் காட்டிலும் பெரும்பாலும் ஈரத்துணிகளை மாத்திரமே பயன்படுத்தப் பழகுங்கள். ஏனெனில் ரசாய னங்கள் கலந்த சுத்தப்படுத்தும் திரவங்கள் ஒபிசோ ஜென்களை தூண்டிப் பெருகச் செய்யும் காரணிகளில் ஒன்று என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

பிரிட்டனின் ஒபிசிட்டி விகிதாச்சாரம் கடந்த இருப தாண்டுகளில் இரு மடங்காகப் பெருகியிருக்கிறது.. அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வயது வந் தோரில் 63% பேர் அதிக எடை கொண்டவர்களாகவே கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் 2025இல் மும்மடங்காகவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

முந்தைய ஆய்வுகளில் கண்டறிந்து தெரிவிக்கப் பட்டுள்ளபடி ஹார்மோன் செயல்பாடுகளைத் தூண்டக் கூடிய இந்த ஒபிசோஜென்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட சிந்தெடிக் பொருட்கள்,  தீயணைப் பான்கள், கொசு மற்றும் பூச்சித் தடுப்பான்கள், சமைய லறைப் பாத்திரங்கள் மற்றும் துணிகள், செயற்கை இனிப்பூட்டிகள் என எல்லாவிதமான வீட்டு உபயோகப் பொருட்களிலும் இருக்கின்றன. நாம் தான் அத்தகைய பொருட்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

இந்த ஒபிசோஜென்களின் பாதிப்பு அதிகரிக்கும் முன் அவற்றைத் தவிர்க்கும் படியான ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மனிதர்களான நமது கடமை என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!

சிலருக்கு  ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும்.  அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சினைகள் அல்லது அல் ஜெமர் எனப்படும் ஞாபக மறதி பிரச்சினையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தை களின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்த கைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

- விடுதலை நாளேடு,11.6.18

சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்!

மனித மூளையின் ஆரோக்கியமான  செயல்பாடுகளுக்கு ஒவ் வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சும்போது,  அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந் தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது. அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்சினை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல் களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள்  குழப்ப மடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது  தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும்.  இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்கியக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 11.6.18

வியாழன், 17 மே, 2018

சிரமம் தரும் சிறுநீர்ச் சுரப்பி!




ஆண்களின் அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றி, தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. அதற்கு புராஸ்டேட் சுரப்பி என்று பெயர்.

பொதுவாக, இளமைப் பருவத்தில் இது ஆரோக்கிய மாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். பினைன் புராஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியா என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதைப்போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்படுகிறது. இருந்தாலும் ஒரு நோயாக மாறும்போது, பலருக்கும் இது பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதப்படுவதுண்டு. முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும்.

சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படும்போது, சிறுநீர்த் தாரை அடைத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பையில் கற்கள் உருவாகும்போது, புராஸ்டேட் சுரப்பியில் அழற்சி ஏற்படும்போது என மற்ற காரணங்களாலும் சிலருக்கு புராஸ்டேட் சுரப்பி வீங்கி விடலாம்.

அறிகுறிகள்

சிறுகச் சிறுகச் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளதுபோன்று உணர்வது, மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது, கடைசியில் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகளோடு சிறுநீரில் ரத்தம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது புராஸ்டேட் புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு.

சிகிச்சை என்ன?

சாதாரண புராஸ்டேட் வீக்கத்துக்குப் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும், ஆரம்ப நிலையில் உள்ள வீக்கத்தை மருந்துகள் மூலமே குறைத்துவிடலாம். அப்போது அறிகுறிகளும் விடைபெற்றுக்கொள்ளும். ஒருவேளை அது மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை எனும்போது, டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக்சன் ஆஃப் புராஸ்டேட் எனும் எளிமையான அறுவைசிகிச்சை மூலம் அல்லது இப்போது வந்துள்ள நவீன முறையான லேசர் சிகிச்சையின் மூலம் இந்த வீக்கத்தைக் குறைத்து விடலாம்.

என்ன பரிசோதனை?

உங்களுக்குள்ள புராஸ்டேட் பிரச்சினையை உறுதிசெய்ய, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் புராஸ்டேட் எந்த அளவில் வீங்கியுள்ளது, அதன் நிலைமை என்ன, எந்த அளவுக்குச் சிறுநீர் போவதை அது தடுக்கிறது என்பது போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, மாத்திரைகள் மட்டும் போதுமா அல்லது அறுவைசிகிச்சை தேவைப்படுமா என்பதை உறுதிசெய்ய முடியும்.

உங்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்பட்டால் நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் போன்றவற்றை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான மேல் ஆலோசனைக்கு ஒரு சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரை நீங்கள் சந்திப்பது நல்லது.

-  விடுதலை நாளேடு, 14.5.18

பாதங்களில் எரிச்சல் ஏன்?

சர்க்கரை நோய் உள்ளவருக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது மிகவும் சகஜம். சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் எல்லாமே பாதிக்கப்படும். அதற்கு டயபடிக் நியுரோபதி  என்று பெயர். தமிழில் இதை நரம்பு வலுவிழப்பு நோய் என்கிறார்கள். மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை எகிறும்போது, அந்தச் சர்க்கரையானது சாப்பிட்டால் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும். காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புற நரம்புகள்தான். இந்த நரம்புகளை சார்பிட்டால் பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.

மேலும், இவர்களுக்கு ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான ரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரிச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன. பாதம் குளிர்ந்தும் போகிறது.

என்ன பரிசோதனை?

கால் நரம்பு பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கு பயோதிசியோமெட்ரி பரிசோதனை உதவுகிறது. பாதத்தில் முக்கியமான நரம்புகள் இருக்கிற ஆறு இடங்களில் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவை எப்படி இருக்கின்றன எனக் கண்டறியும் பரிசோதனை இது. இதன் முடிவுகள் பாதத்தில் எந்த நரம்பு, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவித்துவிடும்.

ரத்தசோகை கவனிக்க!

சர்க்கரை நோய் தவிர, கால் எரிச்சலுக்கு தமனி ரத்தக் குழாய் பாதிப்பு, ரத்தசோகை, வைட்டமின் பி6, பி12 பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடிப்பது, சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு பற்றாக்குறை, சில மருந்துகளின் பக்கவிளைவு எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு என்ன காரணத்தால் காலில் எரிச்சல் வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்ததா என்பதை அறிய எச்பிஏ1சி பரிசோதனையையும் மேற்கொள்ளுங்கள். இதுவும் சரியாக இருந்தால், மற்ற காரணங்களுக்கான ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, காரணம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கால் எரிச்சல் குறைந்துவிடும்.

- விடுதலை நாளேடு, 14.5.18