செவ்வாய், 8 ஜனவரி, 2019

மருத்துவ உலக நிகழ்வுகள் 2018

நலம் காக்கும் கம்பளிப்பூச்சி


வெளிநாடுகளில் மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோ பயன்பாடு இன்று பெரிய அளவில் வந்துவிட்டது. அந்தவகையில் மருத்துவ வசதிக்காக உருவாக்கப்பட்ட சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோ (கம்பளிப்பூச்சி ரோபோ) இந்த ஆண்டு கவனம் ஈர்த்தது. ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கைவண்ணம் இது. மனித உடலில் மருந்துகளைச் சரியான இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காக இந்த ரோபோவை உருவாக்கினர். கம்பளிப்பூச்சிக்கு இருப்பதுபோலச் சிறிய கால்கள் இந்த ரோபோவுக்கு இருப்பதால், அந்தப் பெயரில் இது அழைக்கப்படுகிறது. சிறிய கால்களைப் பயன்படுத்தி உடலில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஊர்ந்து சென்று மருந்துகளைச் சரியான இடத்தில் இந்த ரோபோ சேர்த்துவிடுகிறது.

குருத்தெலும்பில் புதுக் காது


சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், ஓசை இல்லாமல் புதிய சாதனை ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் படைத்திருக் கிறார்கள். உலகிலேயே முதன்முறையாகக் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கிக் காட்டினார்கள். சில வளரும் குழந்தைகளுக்குக் காதின் வெளிப்பகுதி வளர்ச்சியடையாமல் போய்விடலாம். மைகுரோசியா என்றழைக்கப் படும் இந்தக் குறைபாடு உள்ளவர்களால், மற்றவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வகையில், நோயாளியின் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சி இந்த ஆண்டு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதயநோய் ஏற்பட காரணம்


இதயநோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா கண்டுபிடித்த அளவீட்டு முறைகளையே இன்றுவரை உலகெங்கும் பயன்படுத்திவருகிறார்கள். இந்த அளவீடுகளின் மூலம் 30 சதவீத இதய நோய் களையே கண்டறிய முடிந்தது. அந்தக் குறையை இந்திய மருத்துவர்கள் போக்கியிருக்கிறார்கள். அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயநோய் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் அளவீடு களைக் கண்டறிந்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளாகச் செய்துவந்த ஆய்வின் அடிப்படையில் இது சாத்தியமானது. இந்த அளவீடுகள்மூலம் 67 சதவீத இதய நோய்களைக் கண்டறிந்து விட முடியும்.

புதிய வைரஸ் தாக்குதல்


கேரளத்தில் நிபா என்ற வைரஸ் பரவியதால் மாநிலம் முழுவதும் பீதி நிலவியது. இந்த வைரஸ் தாக்கியதில் கோழிக்கோடு, மலபார் மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பழந்தின்னி வவ்வால்களால் நிபா வைரஸ் பரவியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது. இந்தத் தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 1998ஆம் ஆண்டில் மலேசி யாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸ், 2001ஆம் ஆண்டில் வட இந்தியாவிலும் கண்டுபிடிக்கப் பட்டது.

புது ஆண்டிபயாடிக்


தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. நீண்ட கால மாகவே புதிய ஆண்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள். அந்த முயற்சி இந்த ஆண்டு திருவினையானது. குறிப்பாக, எந்த ஆண்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாத நோயாக எலும்புருக்கி நோய் உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு, மருத்துவ உலகின் மைல்கல் என வர்ணிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமான புதிய வகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்கத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாக்கும் கவசம்


சிகிச்சையின்போதும் பரிசோதனையின்போதும் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு மருத்துவர்களும் ஆய்வகப் பணியாளர்களும் உள்ளாவது தவிர்க்க முடியாதது.

தான் கண்டுபிடித்த புது மேல் அங்கி (ஏப்ரன்) மூலம் அந்தக் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு முடிவுரை எழுதி யிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த அரசு மருத்துவர் செந்தில்குமார். ராஜாஜி அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் துறை உதவிப் பேராசிரியரான இவர். பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட் (4) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஏப்ரனை உருவாக்கியுள்ளார். அது மனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை யளிப்பதாக உள்ளது.
- விடுதலை நாளேடு, 7.1.19

உடற்பயிற்சியே உடல் ஆரோக்கியம்



உடற்பயிற்சி உடல் ஆரோக்கி யத்துக்கு மட்டுமல்லாமல்; இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாதது.  இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி இதயம் நன்றாகச் செயல்பட உதவும். தசைகள் தொடர்பான உடற்பயிற்சி தசை களை உறுதிப்படுத்த உதவும்.

இதயப் பாதுகாப்பு


இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகிறது. உடல் தசைகளைத் தொடர்ந்து அசைத்து, கால் தசைகளையும் கைத்தசைகளையும் இயங்கச் செய்தால் அது இதயத்தை நன் றாக வேலை செய்ய வைப்பதுடன் சுத்த மான காற்றைச் சுவாசிக்கவும் உதவும்.

நீந்துதல், சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இதயம் தொடர்பான உடற்பயிற்சிகளில் அடங்கும். இந்த உடற்பயிற்சிகளால் கொழுப்பின் அளவு குறைகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக் குள் வைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது. மேலும், அவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

எது சிறந்த உடற்பயிற்சி?


உடற்பயிற்சியானது ஒருவருடைய வயது, அவரது உடலமைப்பு, உடல் நலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய 20ஆவது வயதில் உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுமார் 30 வயதை எட்டும்போது உடல் தசை இயக்கம் குறையும் என்பதால், மூச்சை உள்வாங்கி வெளியிடும் (மூச்சுப் பயிற்சி) உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும். 40 வயதைத் தொடும்போது, இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், இந்தப் பருவத்தில் 30 அல்லது 45 நிமிடங்கள் குதித்துச் செய்யும் உடற் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

50 வயதைத் தாண்டும்போது தண் ணீர் குடிக்கும் (தாகம்) விருப்பம் குறைய ஆரம்பிக்கும். எனவே, ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இலகுவான, முறையான உடற் பயிற்சி செய்வது அவசியம். 60 வயதுப் பருவத்தில் மூட்டுவலி வர வாய்ப்புள்ள தால் அதிக எடை தூக்குவது போன்ற கடுமையான வேலை செய்வதைத் தவிர்த்துச் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

உடற்பயிற்சி வழிமுறைகள்


நடைப்பயிற்சியானது உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு விரைவாக வும் நாடித்துடிப்பின் அளவை உயர்த்து வதாகவும் வியர்வை ஏற்படும் வகை யிலும் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது மெதுவாக ஆரம்பித்து, உடலை உடற்பயிற்சிக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செல்லும்போது மூச்சை அடக்கிக்கொண்டு செல்லக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது, நெஞ்சில் வலி, நெஞ்சடைப்பு, கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி வரும் உணர்வு, தலைச்சுற்றல், உடல் நடுக்கம், பார்வைக் குறைபாடு ஏற்படுதல் போன் றவை இருந்தால் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

தூங்குவதற்கான உடற்பயிற்சி


படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு சாதாரணமாக இயல்பு நிலை யில் 8 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு வலது புறமாகத் திரும்பி 16 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். அதன்பின் இடது புறமாகத் திரும்பி 32 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இந்தப் பயிற்சியை முடிப்பதற்கு முன்ன தாகவே பலருக்குத் தூக்கம் வந்துவிடும்.

உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்


உடற்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையே ஏற்ற நேரமாகும். மாலை நேரத்தைவிடக் காலை நேரத்தில் சுற்றுப்புறம் தூய்மை யாகவும், ஓசோன் மண்டலம் ஆக்சிஜன் நிறைந்த காற்றைக் கொண்டதாகவும் இருக்கும். சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது. அதேநேரம், உடற் பயிற்சிக்கு முன் வயிற்றுக்கு எளிதான திரவ உணவு அருந்தலாம். பொழுது விடிதற்கு முன் (அதிகாலையில்) குளிர் இருக்கும் போது உடற்பயிற்சி செய்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும்.

 

மாதவிலக்கு சீராக - கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற் கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
- விடுதலை நாளேடு, 7.1.19

வியாழன், 27 டிசம்பர், 2018

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடில்லி, டிச.21 வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை ஒழுங்கு படுத்துவதற்கான மசோதா, மக்களவையில் 19.12.2018இல் நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதா மூலம், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இதனால், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் போன் றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதியர், இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் வாடகைத்தாயாக உதவுவோருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

மேலும், அதிக தொகை வாங்கித் தருவதாகக் கூறி, பின் னர் இடைத்தரகர்களால் ஏமாற்றப் படுகின்றனர்.

இந்நிலையில், வணிக ரீதியி லான வாடகைத்தாய் முறையை தடுக்க வேண்டும்; வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக் கத்தில் வாடகைத்தாய் முறை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கூடுதலாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்ட இந்த மசோதாவை, மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை தாக்கல் செய்து, விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:

வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையில் உள்ள பிரச்னை களைத் தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சட்ட ஆணை யமும், அரசியல் கட்சிகளும், சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் குரல் கொடுத்து வரு கின்றனர். அவர்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, இந்த மசோதா உருவாக் கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மஹ்தாப் ஆகியோர் மசோதாவில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சில பிரபலங்கள் தங்களது உடல் அழகு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறு கிறார்கள். வாடகைத்தாய் முறை யில் குழந்தை பெறுவதை நாகரிமாகக் கருதும் இத்தகைய போக்கு தடுக்கப்பட வேண்டும்‘ என்று சுப்ரியா சுலே கூறினார்.

ஒரே பாலின தம்பதிகள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தஸ்திதார் வலியுறுத்தினார்.

கட்டுப்பாட்டு விதிமுறைகள் இல்லாததால் வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகிறது’ என்று மஹ்தாப் கூறி னார்.  மேலும், குழந்தை பெறும் தம்பதிக்கு வாடகைத்தாயாக எந்த உறவுகள் எல்லாம் உதவலாம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். அதற்குப் பதில ளித்து ஜே.பி.நட்டா பேசிய தாவது:

வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். அதே நேரத்தில் நவீன மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தி, குழந் தைப் பேறு இல்லாத தம்பதி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப் படுகிறது.

வாடகைத்தாய் முறையில், இந்திய தம்பதி மட்டுமே குழந்தை பெறலாம். வெளி நாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்ச வாளியைச் சேர்ந்தவர்கள் குழந் தைப் பெற முடியாது.

மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வசிப் பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், ஓரினச்சேர்க்கையாளர் போன்றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது. ஏற்கெனவே குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது.

மேலும், வாடகைத்தாய் முறையை தவறாகப் பயன் படுத்துவோருக்கு தண்டனை விதிப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் உள்ளன என்றார் அவர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறை வேற்றப்பட்டது

- விடுதலை நாளேடு, 21.12.18

புதன், 19 டிசம்பர், 2018

நன்றாக உள்ளதா உணவுக்குழாய்?

உங்களுக்குச் சாப்பிட்ட சில நேரத் திலேயே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? எதுக்களிப்புத் தொந்தரவு இருக்கிறதா? இந்தத் தொந்தரவுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். அலட்சியம் தொடர்ந்தால் ஜெர்ட்  என்ற நோய் உங்களுக்கு வந்துவிட லாம். அதென்ன ஜெர்ட் நோய்? உணவுக் குழாயில் வரக்கூடிய பொதுவான பிரச்சினைதான் இது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்குத் திரும்பி வரு வதைத்தான்  ரிஃப்ளக்ஸ் என்று அழைக் கிறார்கள். ஜெர்ட் எனப்படும் இந்த நோயைப் பேச்சு வழக்கில் எதுக்களிப்பு நோய், நெஞ்செரிவு நோய் என்று அழைப்பதுண்டு. மனித உடலில் இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் சுருக்குத் தசை இருக்கிறது. இதை ஸ்ஃபின்க்டர்  என்று அழைப்பார்கள். இந்தச் சுருக்குத் தசை எப்போதும் மூடியே இருக்கும். இது ஒரு வழிப் பாதையைப் போன்றது.

நாம் உண்ணும் சாப்பாடு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்லும். சாப் பாட்டை இரைப்பைக்குச் செல்ல மட்டும் சுருக்குத்தசை அனுமதிக்கும். இரைப்பைக்குள் உணவு சென்றுவிட்டால், திரும்பவும் வெளியே வரவிடாது. இரைப்பையில் உள்ள அமிலம் எக்காரணம் கொண்டும் உணவுக் குழாயைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இயற்கையே செய்த அற்புதமான அம்சம் இது.

ஆனால், மனிதர்களின் தவறான பழக்க வழக்கங்களால் இந்தச் சுருக்குத் தசை பலவீனமடையவும் செய்யலாம். அப்படிப் பலவீனமடைந்தால், எப்போதும் மூடி யிருக்கும் சுருக்குத்தசை திறந்தே இருக்கும். ஒரு வழிப்பாதை என்பது இரு வழிப் பாதை ஆகிவிடும். விளைவு, இரைப்பைக்குச் சென்ற சாப்பிட்ட உணவு, இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்குத் திரும்பி வரத் தொடங்கும். இதற்குப் பெயர்தான்  ரிஃப்ளக்ஸ். இரைப்பையில் இருக்கும் அமிலம், உணவுக் குழாய்க்கு வந்தால், ஹார்ட் பர்ன் எனப்படும் நெஞ்சு எரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வயிறுமுட்ட சாப்பிட வேண்டாம்!


இந்தப் பிரச்சினை குறித்து குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன் விளக்கினார். இது ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உடலமைப்பு. இன்னொன்று பழக்கவழக்க நடைமுறை . மனிதர்கள் உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இந்த நோய் ஏற்பட முக்கியக் காரணம்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கும் இந்த நோய் வர வாழ்க்கை முறைதான் காரணம். கொழுப்பு உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, காபி, சாக்லெட், மசாலா, வறுத்த உணவு வகைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால் இந்த நோய் வரலாம். இவை தவிர புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் ஒரு காரணம்.

வயிறு முட்டச் சாப்பிட்டாலும் ரிஃப்ளக்ஸ் வர வாய்ப்பு உண்டு. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டு உடனே படுத்துவிட்டாலும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, நடக்கும்போதோ நிற்கும்போதோ இரைப்பை கீழே இருக்கும். உணவுக் குழாய் மேலே இருக்கும். ஆனால், படுக்கும்போது உணவுக் குழாயும் இரைப்பையும் சம நிலைக்கு வந்துவிடும். அந்த நேரத்தில் வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தால், திறந்துவிட்ட குழாயைப் போல சாப்பிட்ட உணவு மேலே வர ஆரம் பித்துவிடும் என்கிறார்.

மாற்றமே சிறந்த சிகிச்சை


உங்களுக்கு ரிஃப்ளக்ஸ் தொந்தரவு இருந்தால், வாழ்க்கை நடைமுறையை முற் றிலும் மாற்றிக்கொள்வதுதான் நல்லது. வெறும் மருந்து மட்டுமே இந்த நோயைக் குணப் படுத்திவிடாது என்று எச்சரிக்கிறார் சந்திர மோகன். எந்த வகையில் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும்?

இந்தப் பாதிப்பை அறிந்துகொள்ள எண்டோஸ்கோப்பி பரிசோதனை போது மானது. உணவுக் குழாயை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை எண்டோஸ் கோப்பியே சொல்லிவிடும். ரிஃப்ளக்ஸை 50 சதவீதம்தான் மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியும். எஞ்சிய 50 சதவீதம் வாழ்க்கை முறை மாற்றமே சிகிச்சை. மருந்தை நம்பி மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் பாதி அறிகுறிகளைச் சரி செய்துவிடலாம். இதுதான் இதில் முக்கியம் என்கிறார் அவர்.

தடுப்பது எப்படி?


இரைப்பையில் அமிலத்தைக் குறைப்பது, ஒரு வழிப் பாதையை ஒழுங்குபடுத்துவது, அமிலத்தைச் சமநிலைப்படுத்துவது, முகோசா படலத்தைப் பாதுகாப்பதற்கு போன்றவற்றுக்கு மருந்துகள் உள்ளன. மருந்தை மட்டும் உட்கொண்டுவிட்டு வாழ்க்கை முறையை மாற்றாமல் இருந்தால், பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டும் கதைதான் நடக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, காரம் அதிகம் இல்லாமலும் மசாலா கலக்காமலும் சாப்பிட வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது.

மது, புகைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.  அசிடிட்டியை உண்டாக்கக்கூடிய சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது எல்லாமே வாழ்க்கை முறை மாற்றம்தான் என்கிறார் சந்திரமோகன்.

பொதுவாக, எல்லோருக்கும் இரவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சாப்பிட்ட சற்று நேரத்தில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது அல்லது உறங்கச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கமும் இந்த நோய் வருவதற்கான வாசலைத் திறந்துவிடும். உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உண்ணுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு உணவில் மசாலா கூடவே கூடாது. இரவு உணவைக் குறை வாகவே சாப்பிட வேண்டும். குறைவாக என்றால், இன்னொரு இட்லியைச் சாப்பிட் டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போது நிறுத்திவிடுவது நல்லது என்கிறார் சந்திரமோகன்.

- விடுதலை நாளேடு, 17.12.18

புதன், 12 டிசம்பர், 2018

விஷமே மருந்தாகுமா?

பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்து, பாம்பின் விஷத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பாம்பி லிருந்து அதன் விஷத்தைச் சேகரித்து, வேறு கரைசல்கள் சேர்க்கப்பட்டு, குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படும். குதிரையின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, விஷத்தை முறிப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபயாட்டிக்) உருவாக்கும்.


விஷத்தைச் செலுத்திய குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர், குதிரையின் ரத்தத்தைச் சேகரித்து, அதில் இருந்து விஷ முறிவு மருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சில பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவு மருந்து ஊமத்தம் கொட்டையிலிருந்து தயாரிக் கப்படுகிறது. அதேபோல ஒடுவன்தழையிலிருந்து எடுக்கப்படும் மருந்தும் பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவுக்கு பயன்படுகிறது. அரளிக்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, இதயச் செயலிழப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.


-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

செவ்வாய், 11 டிசம்பர், 2018

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு

பெர்லின், டிச. 11- இருதய நோய் கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்கா மல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

எனவே, மனித இருதயத் துக்கு பதிலாக பன்றியின் இரு தயத்தை பொருத்தும் ஆராய்ச்சி யில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். ஜெர்மனியின் முனிச் லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

அவர்கள் பன்றியின் இரு தயத்தை எடுத்து வால் இல் லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங் குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.

இது ஒரு நல்ல முன் னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருத யத்தை வெற்றிகரமாக பொருத் தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

- விடுதலை நாளேடு, 11.12.18