வெள்ளி, 14 அக்டோபர், 2022

நீரிழிவு நோய் (DIABETES MELLITLIS (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!) [35]

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [35]

ஆகஸ்ட் 1-15,2021

நீரிழிவு நோய்

(DIABETES MELLITLIS)

நீரிழிவு நோய் வெறும் மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியாது. சர்க்கரையின் அளவை இரத்தத்தில் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவையும் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த இரண்டோடும் மருந்துகளும் எடுத்துக் கொண்டால் நோயை முழு அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

உணவுக் கட்டுப்பாடு:

*             மீன், தோலற்ற கோழி உண்ணலாம்

*             ஆலிவ் ஆயில் கொட்டைகள் உண்ணலாம்.

*             இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும்.

*              கரையும் கொழுப்பு உணவுகளை உண்ணக்கூடாது.

*             பழங்கள் (பப்பாளி, கொய்யா, சாத்துக்குடி, ஆப்பிள்) சாப்பிடக் கூடியவை.

*              ஆரஞ்சு, மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, சப்போட்டா ஆகியவை தவிர்க்க வேண்டியவை.

*              காய்கறிகளை (வறுக்காமல்) வேக வைத்துச் சாப்பிடலாம்.

*              தானிய உணவுகள்.

*             ஒரே நேரம் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவில் அதிக முறைகள் உண்ணவேண்டும்.

*             அரிசி, கோதுமை ஆகிய இரண்டிலும் ஒரே அளவில் சர்க்கரை சத்து இருக்கும். அரிசிச் சோற்றை நாம் அதிகம் உண்ணும் இயல்பு உடையவர்கள் ஆனதால், சப்பாத்தியை அந்த அளவு உண்ணமாட்டோம், என மருத்துவர்கள் சொல்வார்கள்.

பொதுவாக குறைந்த கொழுப்பும், சர்க்கரையும் அற்ற, அதிகப் புரதம் கொண்ட குறைந்த அளவு உணவு அதிக முறை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் சூப், பழங்கள், அதிக அளவு வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நலம்.

உடற் பயிற்சி :

வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 30 நிமிட நடை பயிற்சியோ, சைக்கிள் ஓட்டுதலோ வாரம் 6 நாள்கள் செய்வது நோயைக் கட்டுப் படுத்த சிறந்த வழிகளாகும்.

உடல் பருமனோ, வயதிற்கும், உயரத்திற்கும் மேல் அதிக எடை இருப்பவர்கள் 7% எடையைக் குறைத்தல் நலம். நாம் இயல்பாகச் செய்யும் வேலையை விட அதிக அளவில் உடற் பயிற்சி செய்வது நலம். தொப்பையைக் குறைக்க வேண்டும்.

மருந்துகள் :

மருந்துகளை மருத்துவர்கள் அறிவுறுத்தும் போது உங்களின் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பதறிந்து அதற்குத் தக்க மருந்துகளையே தருவர்.

முதல் வகை நீரிழிவு நோய் :

இவ்வகையில் இன்சுலின் சுரப்பதில் தடை ஏற்பட்டுள்ளதால், இன்சுலினையே மருந்தாகத் தருவர். 4 வகை இன்சுலின் மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.

*              வேகமாகச் செயல்படும் இன்சுலின் (Rapid Acting insulin): 15 நிமிடங்களில் செயல்படும் இம்மருந்து 3 முதல் 4 மணிவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

*             குறைந்த நேரம் செயல்படும் இன்சுலின் (Short Acting Insulin): லு மணிக்குள் செயல்படும் இம்மருந்து 6 முதல் 8 மணி நேரம் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது.

*              இடை நேர இன்சுலின் (Intermediate acting insulin): 1 மணி முதல் 2 மணி நேரத்தில் செயல்படத் துவங்கும் இம்மருந்து 12 முதல் 18 மணி நேரம் நோயைக் கட்டுப்படுத்தும்.

*              நீண்ட நேர இன்சுலின் (Long Acting insulin): மருந்தை எடுத்துக்கொண்ட சில மணி நேரம் கழித்து செயல்படும் இது 24 மணி நேரம் செயலாற்றும் வல்லமை உடையது.

இரண்டாம் வகை நீரிழிவு நோய்:

மாத்திரைகள் மூலமே இந்த வகை நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம். பல வகை மருந்துகள் உள்ளன. ஒரே வகை மாத்திரையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளோ உங்களின் நோயின் தன்மையையும், சர்க்கரையின் அளவையும் பொருத்து மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நோய் கட்டுக்குள் வராவிட்டால், இன்சுலின் ஊசியும் தேவைப்படும்.

கருக்கால நீரிழிவு நோய் :

குறைந்த அளவு சர்க்கரை இருப்பின் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நோயைக் கட்டுப்படுத்தும். சுமார் 10 முதல் 20 சதவிகிதம் தாய்மையுற்ற, கருக்கால நீரிழிவு நோயுற்றவர்கள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும்.

எச்சரிக்கை :

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு, மருந்துகளால் திடீரென உடலில் சர்க்கரை குறைந்து விடும். அந்த நிலை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் இந்த ஆபத்தை அதிகம் எதிர் கொள்வர். ஊசி போட்டுக் கொள்பவர்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடும். உடன் கை, கால்கள் நடுக்கம், சோர்வு, தடுமாற்றம், வேர்த்தல், மயக்கம் போன்றவை ஏற்படும். உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் இந்நிலை உயிருக்கே உலை வைத்து விடும். தொடர்ந்து விடாமல் செயல்படும் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயல்பட முடியாமல் முடங்கிவிடும். அதனால் மரணம் நேரலாம். எனவே, நீரிழிவு நோய் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, நேரத்திற்கு உணவை உண்ண வேண்டியது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதி!

அதே போல் இன்று இனிப்பு சாப்பிட்டுள்ளோம். ஒரு மாத்திரை கூட சாப்பிட்டு விட்டால் சரியாகிவிடும் என பல நோயாளிகள் தவறாகச் செயல்படுகின்றனர். இது உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அணுகுமுறை. நீரிழிவு நோய் மருந்துகளை மருத்துவர் அறிவுரைப் படிதான் சாப்பிடவோ, ஊசியாகவோ போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, நீங்களாகவே, உங்கள் விருப்பப்படி (Self Medication) சாப்பிடக் கூடாது.

நீரிழிவு நோய் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால், இதயம், சிறுநீரகம் எளிதில் பாதிப்படையும். எனவே, உரிய மருத்துவர்களிடம் அறிவுரை பெறுதலும் அவசியம்.

நோயை வெல்ல உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் என மும்முனைத் தாக்குதல் கட்டாயத் தேவை!

(தொடரும்)

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சிறுநீரகச் செயலிழப்பு(Kidney Failure) மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)


ஜனவரி 16-31,2022

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன.

இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள கருவியில் செலுத்தி சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றி மீண்டும் _ இரத்தத்தை உடலில் செலுத்துவார்கள். 3 முதல் 4 மணி நேரம் இம்முறையைச் செயல்படுத்த ஆகும். பெரும்பாலும் மருத்துவமனையிலேயே செய்யப்படும் செயல்பாடு இது. ஆனால், இணை நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு வீட்டிலும் செய்ய முடியும்.

உள்ளுடற் சவ்வு நச்சு நீக்கம்:(Peritoneal Dialysis) குழாய்களை வயிற்றின் உள்பகுதியில் செலுத்தி, அதன் மூலம் மருத்துவ நீர்மங்களைச் செலுத்தி, சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றும் முறை இது. இதை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

பொதுவாக, நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப இம்மருத்துவம் செய்யப்படும். ஆரம்பத்தில் முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூட செய்ய வேண்டியிருக்கும். பிறகு இந்தச் செயல்பாடு குறையும்.

சிறுநீரக மாற்று மருத்துவம்: 100 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு, மாற்றாக வேறு சிறுநீரகம் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை. ஆனால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது சற்று தாமதமாகலாம். அதுவரை நச்சுப் பிரிப்பு முறையில் சிறுநீரகத்தின் நச்சுகள் பிரிக்கும் மருத்துவம் மூலம் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்படும்.

*              பொதுவாக முழுமையான குணமளிக்கக் கூடிய மருத்துவ முறை.

*              ஒரு சிறுநீரகம்தான் தேவை.

*              குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கும் சிறுநீரகம் சிறந்தது.

*              இணையரிடமோ, நண்பர்களிடமோ சிறுநீரகம் பெறலாம்.

*            இவர்கள் “உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர்கள்’’ (Live Relatives Donors) என்று அழைக்கப்படுகிறார்கள்.

*              இயல்பாக ஒரு சிறுநீரகமே செயல்படப் போதுமானது. அதனால் எந்தக் குழப்பமுமின்றி சிறுநீரகம் கொடுக்கலாம்.

*              மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை தேவையானவர்களுக்குப் பொருத்தி, அவர்களின் உயிர் காக்க முடியும்.

*              பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை மருத்துவம் இது.

*              இரத்தம் ஒரே வகையானதாக சிறுநீரகம் கொடையாளர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும்.

*             “திசு ஒற்றுமை’’ (Tissue Matching) ஒன்றாக இருக்க வேண்டும்.

*              சிறுநீரகக் கொடையாளிக்கு சிறுநீரகத்தை எடுப்பதால் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இயல்பான முழு வாழ்க்கையும் எந்தக் குறைபாடும் இன்றி வாழ முடியும்.

*            சிறுநீரகம் பெறுபவர் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

*              பொருத்தப்பட்ட சிறுநீரகம் இயல்பு நிலையடைந்து, எளிதாக தன் பணியை முழுமையாகச் செய்யும்.

*              கொடையாளிக்கும், பெறுபவருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறுவை மருத்துவம் நடைபெறும்.

*              வேறு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் சிறுநீரகம், பாதுகாப்பாக, அதற்கென்று இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டு, பெறுபவர் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பொருத்தப்படும்.

*             இன்றைய மருத்துவ வாய்ப்புகளில் கண்களுக்கு அடுத்து அதிகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் உறுப்பு மாற்ற அறுவை மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவமே ஆகும்.

*              உயிரோடு இருப்பவர் சிறுநீரகங்கள் எளிதில், ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.

*              இயல்பாக அவர் செயல்பட முடியும்.

*              கொடையாளிகள் உடல் நிலையில் இணை நோய்கள் இருக்கக் கூடாது.

*              இளைஞர்களின் சிறுநீரகங்கள் எளிதில், நோயாளிகளுக்குப் பொருந்தும்.

*              கொடையாளிகள் மருத்துவமனையில் சிறிது காலமே தங்க வேண்டி இருக்கும்.

*             கொடையாளியின் மன நிறைவுக்காகவும், எந்தக் குறைபாடும் இல்லை என உறுதியளிக்கவும் சில ஆய்வுகளைச் செய்யலாம். வழமையான இரத்த ஆய்வு, சிறுநீர் ஆய்வு, மீள் ஒலிஆய்வு, ஊடுகதிர் கணினி வரைவு போன்றவை செய்து, கொடையாளிக்கு நம்பிக்கை ஊட்டலாம்.

*              கொடையாளிகளும், சிறுநீரகம் பெற்றவர்களும், குழந்தைகள் பெற முடியும் _ பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. மனத்திடத்திற்காக ஏற்கெனவே சிறுநீரகம் கொடுத்தவர்களிடம், கொடையாளிகள் கலந்துரையாடலாம்.

*             யாருக்குச் சிறுநீரகம் கொடுத்துள்ளோம் என கொடையாளிக்குத் தெரிய வேண்டியதோ, தெரிவிக்க வேண்டிய நிலைப்பாடோ சட்டப்படி கிடையாது.

சிறுநீரகச் செயலிழப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவம் செய்து முழுமையாக நன்றாக ஆக்க முடியும்.

நாள்பட்ட நோய்க்குத்தான் பெருமளவில் கடுமையான மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பு முழுமையாக இருந்தால், சிறுநீர் நச்சுப் பிரிப்பு முறையிலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் அறுவை மருத்துவம் மூலமும் நல்வாழ்வு பெற முடியும்.

சிறுநீரகச் செயலிழப்பு(Kidney Failure) 92

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (92)

ஜனவரி 1-15,2022 உண்மை இதழ்

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நோயின் அறிகுறிகள்:

*              தசை வாதம் (Muscle Paralysis)

*              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

*             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும்.

*            அதனால் முதுகு, உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படும்.

*              சிறுநீரகங்கள் “எரித்ரோபயோடின்’’ (Erythropiotin) என்ற ஊக்கி நீரை (Hormone) சுரக்கும். இந்த ஊக்கி நீர், எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டிவிட்டு சிவப்பணுக்-களை உற்பத்தி செய்து, இரத்தத்தில் கலக்கும். சிறுநீரகப் பாதிப்பு சிவப்பணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும். அதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிவப்பணுக்கள் மூலம் செல்வது தடைபடும். இதனால், “இரத்த சோகை’’ (Anaemia) ஏற்படும்.

*             இரத்த சோகை ஏற்படுவதால் களைப்பு உணடாகும்.

*              நினைவாற்றல் குறையும்.

*            கவனக் குறைவு ஏற்படும்.

*             தலைச்சுற்றல் உண்டாகும்.

*              இரத்த அழுத்தம் குறையும்.

*              இயல்பான நிலையில் புரதங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் சிறுநீரக வடிப்பான்கள் மூலம் வெளியேறாது. ஆனால், வடிப்பான்கள் சேதமடைவதால் புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும் (Micro proteinaemia) அதனால்,

*             நுரையுடன் சிறுநீர் வெளியேறும்.

*              கணுக்கால், பாதங்கள், கைகள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              பசியின்மை

*              உணவு எடுத்துக் கொள்வதில் ஆர்வமின்மை

*             தோல் கருத்துப் போதல்

*            இரத்தத்தில் புரதங்கள் தேங்குதல்

*              உயிர்க் கொல்லி மருந்துகள் (Anti-biotics-Penicillin) பென்சிலின் போன்றவை ‘வலிப்பு’ (Seizures) உண்டாக்கும்.

நோயறிதல் – ஆய்வுகள்: நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பை 5 அடுக்குகளில் அளவீடு செய்வார்கள். வடிப்பான்கள் (Glomerular Filtration rate (GFR) வடிகட்டும் தன்மைக்கேற்ப இது அளவிடப்படும். 1. வடிப்பான்கள் பாதிப்பு லேசாக இருப்பின், இது முதல் நிலையாகக் கருதப்படும். 2, 3ஆம் நிலைகளில் அதிக அளவு மருத்துவக் கண்காணிப்பு கொடுத்துக் கவனிக்க வேண்டும். நோயாளி குணமடையும் வாய்ப்பு அதிகம். 4, 5ஆம் நிலைகளில் நோயின் கடுமை அதிகமாக இருக்கும். தீவிர மருத்துவம் செய்ய வேண்டிய நிலை. 5ஆம் நிலையில் வடிப்பான் செயலிழப்பு மிகவும் ஆபத்தானது. சிறுநீரகங்கள் மாற்றும் மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இந்நிலை.

வடிப்பான் வடி திறனளவு: (Glomeruler Filtration Rate):  வடிப்பான் வடிதிறன் பல நிலைகளில் மாறுபடும். வயது, பாலினம், உடல் அளவு, சூழ்நிலை ஆகிய நிலைகளில் வேறுபடும். இது மிகவும் இயல்பானது. ஆனால், சிறுநீரக நோய் மருத்துவர்கள் இதை ஒரு சரியான அளவீடாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய சிறுநீரக நிறுவனம் (National Kidney Foundation) வடிப்பான் வடிதிறன் அளவீட்டுக் கருவியை தேவைப்பட்டால் கொடுக்கின்றனர். இரத்தத்தில் “கிரியேட்டினின்’’ அளவீடு, அறிவதற்கு வடிதிறன் கருவியைப் பயன்படுத்தத் தேவை.

யூரீமியா: (Uremia):  சிறுநீரகத் துறை வளர்ச்சியடையும் முன், சிறுநீரகச் செயலிழப்பு, யூரீமியா (Uremia) என்றே அழைக்கப்பட்டது. இரத்தத்தில் யூரியா கலப்பதையே அவ்வாறு அழைத்தனர். 1847 வரை இரத்தத்தில் சிறுநீர் கலந்து விடுவதாக மருத்துவர்கள் நினைத்தனர். சிறிதளவோ, அல்லது சிறுநீரோ போகாததால் மருத்துவர்கள் அவ்வாறு நினைத்தனர். சிறுநீரகத் துறையின் வளர்ச்சி இந்த நிலைப்பாட்டை மாற்றியது. இன்று சிறுநீரகச் செயலிழப்பின் ஓர் அறிகுறியாகவே யூரீமியா குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆய்வுகள்:

*             இரத்தத்தில் அணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் எண்ணிக்கை ஆய்வு. (சிவப்பணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, வெளுத்த தன்மை, வெள்ளணுக்கள் அளவு கூடுதல் போன்றவை நோய்த் தன்மையை வெளிப்படுத்த உதவும்.)

*              இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு கூடியிருந்தால், நோய் உள்ளதை அறிய முடியும்.

*             மீள்ஒலி பதிவில் (Ultra Sonogram) சிறுநீரகங்கள் சிறுத்துத் தெரியும்.

*              ஊடுகதிர் கணினி வரைவி (Computerised Tomography) மூலம் சிறுநீரகங்கள் அமைப்பையும், மற்ற சிறுநீரகங்களின் பாகங்களில் உள்ள குறைபாடுகளையும் எளிதில் கண்டறியலாம்.

மருத்துவம்: நீரிழிவு நோய் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோய் அற்றவர்களுக்கும், குறைந்த அளவு புரதச் சத்துள்ள உணவுகள், நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். ஆனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு இது பயனளிக்காது. அசைவ உணவுகள், அதிகப் புரதச் சத்துள்ள உணவுகள் நோயைத் தீவிரப்படுத்தும்.

மருந்துகள்: வலி நீக்கி மருந்துகள், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயலிழப்பால் ஏற்படும் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்தல் தேவையாகும். நிறமிகள் (Dye) மூலம் செய்யும் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரின் நீர்த்த தன்மையை அதிகமாக்கும் மருந்துகளை (Diuretics)

மருத்துவர்கள் கொடுப்பர்.

(தொடரும்…)

சனி, 11 ஜூன், 2022

மருத்துவ அறிவியலின் சாதனை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

சனி, 19 பிப்ரவரி, 2022

பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்

கல்லீரலை பாதிக்கும் ஹெபடைடிஸ்!

திங்கள், 24 ஜனவரி, 2022

நுரையீரலைப் பாதிக்காத ஒமிக்ரான் மாறுபாடு-வியப்பூட்டும் புதிய ஆய்வு