வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மிகு இரத்த அழுத்தம் (HYPERTENSION) - நவீன மருத்துவங்கள் (96)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (96)

மார்ச் 1-15 2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPERTENSION)

மரு.இரா.கவுதமன்

பேறுகால மிகு இரத்த அழுத்தம் (Preeclampsia):

பேறுகாலத்தில் திடீரென சில மகளிர்க்கு இரத்த அழுத்தம், எந்தக் காரணமும் இன்றி அதிகமாகிவிடும். பொதுவாகக் கருவுற்று, 20 வாரங்கள் கழிந்தாலும் இது ஏற்படலாம். பேறுகால கடைசி மூன்று மாதங்களில் (Trimester) இது ஏற்படக் கூடும். சில மகளிர்க்கு குழந்தை பிறந்த பின் ஏற்படலாம். “பேறுகால பின் மிகு இரத்த அழுத்தம்’’ (Post partum preeclampsia) என மருத்துவர் இதைக் குறிப்பிடுவர்.

நோயின் அறிகுறிகள்: 

மிகு இரத்த அழுத்தம் பல ஆண்டுகள் கூட எந்தவித அறிகுறிகளும் இன்றியே இருக்கும். பல நேரங்களில் உடல் பரிசோதனைகள் செய்யும்பொழுது மருத்துவர்களால் இது கண்டுபிடிக்கப்படும்.

*              சில நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். பெரும்பாலும் தலையின் பின்புறம் இந்த வலி ஏற்படும. காலை நேரத்தில் அதிகமாக நோயாளிகள் உணர்வர்.

*             தலை பாரம் சிலருக்கு உண்டாகும்.

*            தலைசுற்றல் (Vertigo)

*              காதில் (Tinnitus) இரைச்சல்.

*             காதில் ‘ஸ்ஸ்’ என்ற சத்தம்.

*              கண்களில் பார்வை மங்கல்.

*              சில நேரங்களில் மயக்கம்.

*             கண்களில் விழித்திரையில் பாதிப்பு உண்டாக்கும் நிலை.

*              கண்கள் குருடாகக் கூட போகும்.

*             மிகு இரத்த அழுத்தம் கண்களில் விழித்திரையில் உள்ள நுண்ணிய தந்துகிகளைத் திறந்துவிடும். இதனால் கண்களின் விழித்திரையில் இரத்தக் கசிவு ஏற்படும். இரத்தக் கசிவு அதிகமானால், கண்களின் உள்ளேயே சேர்ந்து, உறைந்து-விடும். அதனால், விழிலென்ஸின் வழி ஒளி ஊடுருவுவதில் தடை ஏற்பட்டு, பார்வை தெரியாத நிலை ஏற்படும். இதை “மிகு இரத்த அழுத்த விழித்திரை நோய்’’ (Hypertensive retinopathy) என்று கூறுவர். இதன் தீவிரத்தன்மை அய்ந்து நிலைகளாக வெளிப்-படும். முதல் நிலையையும், இரண்டாம் நிலையையும் வேறுபடுத்தி அறிதல் கடினம். நீண்ட நாள்கள் இருக்கும் மிகு இரத்த அழுத்தத்தால் இந்நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்: (Secondary hypertension)

*             இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம், வேறு நோய்களின் விளைவாக, ஏற்படும் மிகு இரத்த அழுத்தமாகும். அதனால் ஆரம்ப நோய்களின் அறிகுறிகளோடு, மிகு இரத்த அழுத்தமும் உண்டாகும். எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, நாளடை-வில் மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். நாள்பட்ட நீரிழிவு நோயில், இரத்தக் குழாய்களில், மாவுச்சத்து (Carbohydrates) படிதல், அதன் சுவர்களில் ஏற்படும். இது குறுகிய இரத்தக் குழாய்கள் வழியே இயல்பான அதே அளவு இரத்தம் செல்வதால் மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

*             ஊக்கி நீர் (Hormones) சமச்சீரின்மையும் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

*             தைராய்டு ஊக்கி நீர் அதிகம் சுரக்கும் பொழுது, அதிகம் பசி எடுக்கும். அதிகம் உணவு எடுத்தாலும் உடல் மெலியும். இதயத் துடிப்பு அதிகமாகும். முட்டைக் கண்கள் (Bulging Eyes) போன்ற தோற்றம் ஏற்படும். கைகள் நடுங்கும். சிறுநீரகத் தந்துகிகளில் அடைப்போ அல்லது குறுகலோ ஏற்படும். இதன் பக்க விளைவாக, இரண்டாம் நிலையில் மிகு இரத்த அழுத்தம் ஏற்படும்.

*              உடல் பருமன் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணம்.

*              அதிகக் கொழுப்புச் சத்து உணவுகள் இரத்தக் குழாய்களில் படிந்து அதன் பக்க விளைவாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படும்.

*              நீண்ட நாள் மிகு இரத்த அழுத்தம், சிறுநீரகத் தந்துகிகளில் பாதிப்பை உண்டாக்குவது போலவே மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களிலும் பாதிப்பு உண்டாக்கும். அந்தக் குழாய்களில் படியும் கொழுப்புப் படிவங்கள் இரத்தக் குழாய்களில் குறுகலோ (Narrowing) அடைப்போ அல்லது இரத்தக் குழாய்களில் உடைப்போ உண்டாக்கக்கூடும். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களிலோ குறுகல் ஏற்படும் நிலையில், கைகள் மதமதப்போ, உணர்வுக் குறைபாடோ, தளர்ச்சியோ (Weakness) ஏற்படலாம். அடைப்போ அல்லது உடைப்போ திடீரென்று ஏற்படக் கூடும். அதன் விளைவாக ‘பக்க வாதம்’ (Hemiplegia) ஏற்பட்டுவிடும். மிகவும் ஆபத்தான நிலை இது. மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும் பக்க வாதம், முகக் கோணல் (Facial Palsy) கை, கால் இயக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும். வலது கை பழக்கமுடை யோருக்கு ‘பேச்சு மய்யம்’ (Speech Centre) இடதுபுறமும், இடக்கை பழக்கமுடை யோருக்கு வலதுபுறமும் இருக்கும். மூளையின் இரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு இடதுகைக்காரர்களுக்கு, வலதுபுறம் ஏற்பட்டால் பேச்சு போய்விடும். அதேபோல் வலதுகைக்காரர்களுக்கு, இடதுபுறம் ஏற்பட்டால் அவர்களும் பேச்சாற்றலை இழந்துவிடுவர். மிகு இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் மிக ஆபத்தான விளைவுகளில் பக்க வாதம் ஒன்று. திடீரென்று ஏற்படும் ஆபத்து இது.

*             மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டால் மண்டைக்குள் இரத்தக்  கசிவு (Cerebal Haemorrage) ஏற்படும். அதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து, மருத்துவம் செய்யாவிட்டால், இரத்தக் கசிவு தொடர்ந்து, மண்டை ஓட்டிற்குள் இரத்தம் தேங்கும். இது மென்மையான மூளைப்-பகுதியை அழுத்தி நோயாளியை ‘ஆழ் மயக்க’த்தில் (Coma) ஆழ்த்தி விடும். ஆழ் மயக்கம் (Coma) நிலை ஏற்பட்டு விட்டால், வலியோ, ஒலி (Sound), ஒளி (Light) ஆகியவற்றுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமை, தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையும், செயலையும் செய்ய முடியாமையையோ, முழுமையான மயக்க நிலையையோ உண்டாக்கி விடும். பல நேரங்களில் ஆழ் மயக்க நிலையிலிருந்து மீளாமலேயே நோயாளி மரணமடையவும் கூடும். (இதையே ‘மூளைச் சாவு’ என்று அழைக்கின்றனர்.)

*              மிகு இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் கொழுப்புப் படிவங்கள் இதயத் தமனியில் (Coronary Artery) படியும். இதனால் இதயத் தமனிகள் குறுகலடையும். இதயத் தமனி அளவில் மிகவும் சிறியவை. கொழுப்புப் படிவங்கள் நாளடைவில் அதிகமாகி இதயத் தமனி முழுவதும் படியலாம். இதன் விளைவாக திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். பல நேரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களிலும் கொழுப்புப் படிவுகள் இருக்கும். மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணமான இப்படிவுகள் இரத்த ஓட்டத்தின் விளைவாக, இரத்தக் குழாய் சுவர்களிலிருந்து பிய்த்துக் கொண்டு இரத்த ஓட்டத்தில் நகர்ந்து செல்லும். கொழுப்புப் படிவு சிறியதாக இல்லாமல் சற்று பருமனாகவோ, பெரியதாகவோ இருந்தால், அதன் அளவை விட சிறிய இரத்தக் குழாய் வழியே செல்லும்பொழுது, அதனை அடைத்துவிடும். அதனால் அந்தப் பகுதி இரத்த ஓட்டம் முழுமையாகத் தடைப்பட்டு, அங்குள்ள திசுக்கள் மரணித்துவிடும். இந்த படிவம் இதயத் தமனியை அடைத்துவிட்டால், மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் நிகழும். மிகு இரத்த அழுத்தம் பல காலம் வெளியே தெரியாமல் இருக்கும் நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் நிகழ ஒரு முக்கியக் காரணியாகி விடும் நிலை ஏற்படும்.

*             மிகு இரத்த அழுத்தம் நாளடைவில் உடலின் செயல்பாட்டிற்கு இன்றியமையாத உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகங்களில் பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

(தொடரும்…)

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

 

மருத்துவம் : மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்!

பிப்ரவரி 1-15,2022

இன்றைய நவீன அறிவியல் உலகம் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மக்களின் மூடநம்பிக்கையை அகற்றி, மனிதர்களிடம் பகுத்தறிவுப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறது. மனித மூளை புராணங்களில் கட்டுண்டிருந்த நிலையில், நவீன மருத்துவ அறிவியல் குருதிக் கொடை வழங்குவதற்கே தயங்கிய மனிதர்-களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. விழிக்கொடை, உறுப்புக் கொடை, உடல் கொடை எனப் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டது.

மருத்துவ அறிவியலில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டதைத் தமிழ்நாடு ஜாதி, மதம் கடந்து கொண்டாடியது. அந்த வகையில் அமெரிக்கா உறுப்பு மாற்று சிகிச்சையில் புதிய சாதனையைப் படைத்து உலகுக்கு வழிகாட்டியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த

57 வயதான டேவிட் பென்னட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

வேறு இதயத்தைப் பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்கிற நிலையில் அவர் இருந்தார்.

இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத் துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்குப் பொருத்தப்-பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் பென்னட் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கெனவே மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே, மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்-பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகெங்கும் உடல் உறுப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப் பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பன்றி என்னும் சொல்லை இழிவழக்காகப் பயன்படுத்துவது மனிதர்களின் வழக்கம். ஆனால், அந்தப் பன்றிகள்தாம் தங்கள் உயிரைத் தியாகம் செய்து மனிதர்களைக் காப்பாற்றப் போகின்றன. மருத்துவ உலகில் மற்றொரு புதிய தொடக்கமாக இச்சாதனை பார்க்கப்படுகிறது.

– ச.குமார்

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) - நவீன மருத்துவங்கள் (95)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (95)

பிப்ரவரி 16-28,2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPER TENSION)

மரு.இரா.கவுதமன்

 

நோய்க் காரணிகள்:

முதன்மை மிகு இரத்த அழுத்தம்:

மரபணு இந்நோய்க்கு ஒரு காரணியாக அறியப்பட்டுள்ளது. மரபணு ஆய்வில் 35 வகை மரபணுக்கள் மிகு இரத்த அழுத்தத்திற்குக் காரணியாக அறியப்பட்டுள்ளன.

வயது மூப்பின் காரணமாக மிகு இரத்த அழுத்தம் ஏற்படலாம். மேற்கத்திய உணவு வகைகள் (Western Diet), வாழ்க்கை முறைகள் நாளடைவில், மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக பருமன் உடையவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடற் பயிற்சிகள் இல்லாத சோம்பல் வாழ்க்கை (Sedentary Life) மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணியாக அமையும்.  “காஃபின்’’ (Caffeine) பயன்பாடு (Caffine consumption), வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency), இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistance)    ஆகியவை உடல் பருமனை அதிகமாக்கும். அது மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.

வளர்சிதை மாற்ற நோய் கூட்டறிகுறிகள் (Metabolic Syndrome) கூட முதன்மை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்:

இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம், உடலில் வேறு நோய்களின் விளைவாக ஏற்படும்.

சிறுநீரக நோய்கள் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கக் குறைபாடு இந்நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக அமையும்.

சிறுநீரகத் தமனிகள் குறுகல் மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். பருமன் உடல் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உறக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea).

மகளிர்க்கு மகப்பேறு காலத்தில் இந்நோய் உண்டாகலாம்.

மகா தமனியில் சுருக்கம் (Coarctation of Aorta) மிகு இரத்த அழுத்தம் உண்டாக்கும்.

மதுப் பழக்கம், புகைப் பிடித்தல் தொடர்ச்சியாகவும், நீண்ட நாள்கள் நீடித்தலும் இந்நோயை ஏற்படுத்தும்.

சில வகை மருந்துகள் (Certain Medicines),

நாட்டு மருந்துகள் (Herbal remedies),

‘கொக்கைன்’ (Cocaine) போன்ற போதை மருந்துகள்,

‘ஆர்சனிக்’ (Arsenic) புழக்கம் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கூட்டிவிடும்.

தனிமையும்கூட சிலருக்கு இந்நோயை ஏற்படுத்தக் கூடும். மன அழுத்தம் (Stress) பலருக்கு மிகு இரத்த அழுத்தத்தை எற்படுத்தும்.

நோய்க் கூறியல் (Pathology):

மிகு இரத்த அழுத்தம் இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு இயல்பான நிலையில் இருக்கும். இரத்தக் குழாயில் இரத்தத்தின் அளவு அதே அளவு இருக்கும். ஆனால், இரத்தக் குழாய் சுருக்கத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும் (Total Peripheral Resistance). சில நோயாளிகளின், இதய இரத்த வெளியேற்றம் அதிகமாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் இயல்பாகவும் இருக்கும். பெரும்-பாலும் இந்நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன்னிலை (Pre hypertension) யாக இருக்கும். இவர்கள் வயது மூப்பாகும்பொழுது மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். அந்த நிலையில் இதய இரத்த வெளியேற்றம் (Cardiac Output) இயல்பானதாகவும், இரத்தக் குழாய் அழுத்தம் மிகுந்தும் மாறிவிடும். இதுவே இவர்களுக்கு மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் காரணமாகும். இரத்தக் குழாய் அழுத்தம், தந்துகிகளின் (Capillaries) சுவர்கள் குறுகலால்தான் அடிப்படையில் ஏற்படுகிறது. நாளடைவில் சிறு தமனிகள் குறுகலாகிவிடும்.

தந்துகிகள் அடர்த்தி குறைபாட்டால் கூட மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். பொதுவாக தந்துகிகள், தமனிகள் இவற்றின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (Narrowing) மிகு இரத்த அழுத்தம் ஏற்படுத்தும். மிகு இரத்த அழுத்தம் சிரைகளின் தந்துகிகளில் தேக்கம் (Peripheral Venous Compliance), இதயத்தில் இரத்தம் தேங்கத் துவங்கும். இது இதய விரிவாக்க செயல்-பாட்டைப் (Diastalic Dysfunction) பாதிக்கும். முதியவர்களுக்கு நாடி அழுத்தம் (Pulse Pressure) மிகு இரத்த அழுத்தம் உள்ள நிலையில் உண்டாகும். இவர்களுக்கு இதய சுருக்கழுத்தம் (Systolic) மிகவும் அதிகமாகவும், இதய விரிவழுத்தம் (Diastolic) இயல்பு நிலையிலோ அல்லது குறைவாகவோ இருக்கும். இது “மிகு சுருக்கத்தழுத்தம்’’ (Systolic Hypertension) என்று அழைக்கப்படுகிறது. முதியவர்களுக்கு இரத்தக் குழாய்கள் கெட்டிப்பட்டு (Vascular Stiffness), சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதன் விளைவாகவே நாடி அழுத்தமும், மிகு சுருக்கழுத்தமும் ஏற்படும். சிறுநீரக நோய் மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் உப்பையும், நீர் அளவுகளையும் சீராக வைத்துக் கொள்ளும். சிறுநீரக நோய்கள் இந்த நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ரெனின் ஊக்கி நீர், சுரப்பு அதிகரிக்கும் நிலை, சிறுநீரகங்களில் நோய் ஏற்படுத்தும். இதனால் இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகும் (Renin-Angiotension System). இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தானியங்கி உணர்ச்சி நரம்பு மண்டலத்தில் (Autonomous nervous system – Sympathetic nervous system) ஏற்படும் குறைபாடுகள் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக அமையும். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி (Inflammation of vessels) மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிக அளவு சோடியம், பொட்டாசியம் உடலில் சேர்வதால், மிகு இரத்த அழுத்தம் ஏற்படும். அடிப்படையில் இரத்தக் குழாய் நோய்கள், சிறுநீரக நோய்கள், பருத்த உடல், இதய நோய்கள் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கை முறையும் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.

(தொடரும்…)

மிகு இரத்த அழுத்தம் (HYPER TENSION) - நவீன மருத்துவங்கள் (94)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (94)

பிப்ரவரி 1-15,2022

மிகு இரத்த அழுத்தம்

(HYPER TENSION)

மரு.இரா.கவுதமன்

இரத்த அழுத்தம்  (Blood Pressure) நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஓர் அடிப்படைச் செயல்பாடு ஆகும். தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தம் தமனிகள் (Arteries), தந்துகிகள் மூலம் உடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவும், செலுத்தப்படுவதற்கும், இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தமே காரணம். இதயத்திலிருந்து, இரத்தம் இந்த அழுத்தத்தின் மூலமே மூளைக்குச் செலுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் இல்லாவிடில் மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்பட்டு, மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிடும். உடல் இயக்கம் நின்று விடும். மரணம் நிகழும்.

‘B.P.’  என்று பொதுவாக நம்மால் சொல்லப்படும் சொல்தான் ‘இரத்த அழுத்தம்’ என்ற செயல்பாடு. இயல்பு நிலையில் நம் உடலில் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ என்ற அளவில் இருக்கும். இதயம் சுருங்கி, விரியும் நிலையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவீடே இது. இதயம் சுருங்கும்பொழுது (Systolic) அதிக வேகத்தோடு இரத்தக் குழாய்க்குள், இரத்தம் செலுத்தும்-பொழுது அழுத்தம் அதிகளவில் இருக்கும். அதுவே 120 மி.மீ அளவு! இதயம் விரியும்பொழுது (Diastolic), இரத்தக் குழாய்க்குள் அழுத்தம் குறைவாக இருக்கும். அதுவே 80 மி.மீ என்ற அளவில் இருக்கும். நாம் வேகமாகச் செயல்படும்பொழுது, எடுத்துக்காட்டாக, ஓடும்பொழுது, படி ஏறும்பொழுது, கடின உழைப்பின்பொழுது, உடற்பயிற்சியின்போது இதயம் வேகமாகச் செயல்படும். அப்பொழுது “சுருக்க அழுத்தம்’’ (Systolic Pressure) அதிகமாகிவிடும். ஆனால், உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், இரத்த அழுத்தமும் இயல்பாகி விடும். “விரிவு அழுத்தம்’’ (Diastolic Pressure) இந்த நிலைகளில் மாற்றமடையாமல் சீரான அளவில் (80 மி.மீ) இருக்கும். விரிவு அழுத்தம் (இதயம் விரியும் நிலையில்) பெரும்பாலும் மாற்றமடையாமல் சீராக இருக்கும். விரிவு அழுத்தம் குறைவு ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரிவு அழுத்தக் குறைவினால் உடலின் கடைசிப் பகுதிக்கு இரத்தம் செல்லுவதில் குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகும்.

பொதுவாக இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதும் நம் உடல் சீராக இருப்பதற்கான ஓர் அறிகுறி! இரத்த அழுத்த மாறுபாடு இரண்டு வகைப்படும். இரத்த அழுத்தம் இயல்பான நிலையான 120/80 மி.மீ இருந்து அதிகமாக இருந்தால் அதை “மிகு இரத்த அழுத்தம்’’ (Hypertension) என்று கூறப்படுகிறது. (பொதுவாக “ஙி.றி. இருக்கிறது’’ என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மிகு இரத்த அழுத்தத்தையே அப்படி நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இரத்த அழுத்தம் குறைவை “குறை இரத்த அழுத்தம்’’ (Hypotension) என்று குறிப்பிடப்படும். இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளுதல் மிகவும் தேவையான ஒன்று. இதைச் சீராக வைத்துக் கொள்ளா-விட்டால், பல தொல்லைகளுக்கு நாளடைவில் வழிவகுக்கும்.

மிகு இரத்த அழுத்தம் (Hypertension)

மிகு இரத்த அழுத்தம், இயல்பான அளவான 120/80 மி.மீ.யை விட அதிகம் இருக்கும் நிலையாகும். மிகு இரத்த அழுத்தம் ஒரு நீண்ட காலம் இருக்கும் நோயாகும். இரத்தக் குழாய்களில் (தமனிகளில்) அழுத்தம் அதிகமாகும் பொழுது மிகு இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மிகு இரத்த அழுத்தம் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். அதனால் நோயாளிகள் அதை உணராமலேயே இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், நீண்ட நாள்கள் இருக்கும் மிகு இரத்த அழுத்தம், திடீரென ஆபத்தை உண்டாக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றை உண்டாக்கக் கூடியது மிகு இரத்த அழுத்தம் ஆகும். எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல், திடீரென உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாக மிகு இரத்த அழுத்தம் இருப்பதால் இதனை ‘அமைதியான கொலைகாரன்’’ (Silent Killer) என்று முன்பு குறிப்பிடுவர்.

நீண்ட நாள்களாக இருக்கும் மிகு இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு மேலும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். இதயச் செயலிழப்பு (Heart Failure), இதய மேலறை நடுக்கம் (Arterial Fibrillation), இரத்தக் குழாய் நோய்கள் (Arterial diseases), பார்வை இழப்பு (Vision loss), சிறு நீரகச் செயலிழப்பு (Kidney Failure) போன்ற ஆபத்துகளும் மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும். மிகு இரத்த அழுத்தம் “முதன்மை மிகு இரத்த அழுத்தம்’’ (Primary (essential) Hypertension) என்றும் “இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம்’’ (Seconday Hypertension) என்றும் இரு வகைப்படும். முதன்மை மிகுஇரத்த அழுத்தம்தான் அதிகளவில் நோயாளிகளிடம் (90%) காணப்படும். வாழ்க்கை முறை (Life Style), மரபியல் (Genetic) காரணங்களால் முதன்மை மிகு இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும்.

வாழ்வியல் முறைகள் என்பது அதிக உப்புள்ள உணவுகளை உண்ணுதல், அதிக எடை, புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் போன்றவை மிகு இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மீதியுள்ள 5 முதல் 10 சதவிகித நோயாளிகள் இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகத் தமனிகளில் குறுகல் (Narrowing of renal arteries) ஊக்கி நீர்க் குறைபாடுகள் (Hormone imbalance),  கருத்தடை மாத்திரைகள் நீண்ட நாள்கள் பயன்படுத்துதல், இரத்தத் தமனிகள் குறுகல் (Narrowing of arteries) போன்றவை இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தத்தைவிட இரண்டாம் நிலை மிகு இரத்த அழுத்தம் ஆபத்தானது. நீண்ட நாள் நோயாகவும் இது இருக்காது. நோய்க்குக் காரணமான மற்ற நோயின் அறிகுறியும் இணைந்தே தெரியும்.

முதன்மை மிகு இரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்களால் சீராக்க முடியாவிட்டால், மருந்துகள் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலை ஏற்படும். மருந்துகள் 90% நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை முழுமையாகக் கட்டுப்-படுத்திவிடும். உலகில் மிகுஇரத்த அழுத்தத்தால் 16% முதல் 37% பேர்கள் பாதிக்கப்படுவதாகவும், 18% இறப்புகள் மருத்துவம் செய்து கொள்ளப்படாத மிகு இரத்த அழுத்த நோயால் ஏற்படுவதாகவும் ஒரு மருத்துவக் குறிப்பு கூறுகிறது.

(தொடரும்…)

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - நவீன மருத்துவங்கள் (93)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)

ஜனவரி 16-31,2022

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன.

இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள கருவியில் செலுத்தி சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றி மீண்டும் _ இரத்தத்தை உடலில் செலுத்துவார்கள். 3 முதல் 4 மணி நேரம் இம்முறையைச் செயல்படுத்த ஆகும். பெரும்பாலும் மருத்துவமனையிலேயே செய்யப்படும் செயல்பாடு இது. ஆனால், இணை நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு வீட்டிலும் செய்ய முடியும்.

உள்ளுடற் சவ்வு நச்சு நீக்கம்:(Peritoneal Dialysis) குழாய்களை வயிற்றின் உள்பகுதியில் செலுத்தி, அதன் மூலம் மருத்துவ நீர்மங்களைச் செலுத்தி, சவ்வூடு பரவல் முறையில் நச்சுகளை அகற்றும் முறை இது. இதை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

பொதுவாக, நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப இம்மருத்துவம் செய்யப்படும். ஆரம்பத்தில் முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூட செய்ய வேண்டியிருக்கும். பிறகு இந்தச் செயல்பாடு குறையும்.

சிறுநீரக மாற்று மருத்துவம்: 100 சதவிகிதம் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களுக்கு, மாற்றாக வேறு சிறுநீரகம் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை. ஆனால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது சற்று தாமதமாகலாம். அதுவரை நச்சுப் பிரிப்பு முறையில் சிறுநீரகத்தின் நச்சுகள் பிரிக்கும் மருத்துவம் மூலம் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்படும்.

*              பொதுவாக முழுமையான குணமளிக்கக் கூடிய மருத்துவ முறை.

*              ஒரு சிறுநீரகம்தான் தேவை.

*              குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கும் சிறுநீரகம் சிறந்தது.

*              இணையரிடமோ, நண்பர்களிடமோ சிறுநீரகம் பெறலாம்.

*            இவர்கள் “உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர்கள்’’ (Live Relatives Donors) என்று அழைக்கப்படுகிறார்கள்.

*              இயல்பாக ஒரு சிறுநீரகமே செயல்படப் போதுமானது. அதனால் எந்தக் குழப்பமுமின்றி சிறுநீரகம் கொடுக்கலாம்.

*              மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை தேவையானவர்களுக்குப் பொருத்தி, அவர்களின் உயிர் காக்க முடியும்.

*              பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை மருத்துவம் இது.

*              இரத்தம் ஒரே வகையானதாக சிறுநீரகம் கொடையாளர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும்.

*             “திசு ஒற்றுமை’’ (Tissue Matching) ஒன்றாக இருக்க வேண்டும்.

*              சிறுநீரகக் கொடையாளிக்கு சிறுநீரகத்தை எடுப்பதால் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இயல்பான முழு வாழ்க்கையும் எந்தக் குறைபாடும் இன்றி வாழ முடியும்.

*            சிறுநீரகம் பெறுபவர் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

*              பொருத்தப்பட்ட சிறுநீரகம் இயல்பு நிலையடைந்து, எளிதாக தன் பணியை முழுமையாகச் செய்யும்.

*              கொடையாளிக்கும், பெறுபவருக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் அறுவை மருத்துவம் நடைபெறும்.

*              வேறு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் சிறுநீரகம், பாதுகாப்பாக, அதற்கென்று இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டு, பெறுபவர் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பொருத்தப்படும்.

*             இன்றைய மருத்துவ வாய்ப்புகளில் கண்களுக்கு அடுத்து அதிகமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் உறுப்பு மாற்ற அறுவை மருத்துவம் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவமே ஆகும்.

*              உயிரோடு இருப்பவர் சிறுநீரகங்கள் எளிதில், ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.

*              இயல்பாக அவர் செயல்பட முடியும்.

*              கொடையாளிகள் உடல் நிலையில் இணை நோய்கள் இருக்கக் கூடாது.

*              இளைஞர்களின் சிறுநீரகங்கள் எளிதில், நோயாளிகளுக்குப் பொருந்தும்.

*              கொடையாளிகள் மருத்துவமனையில் சிறிது காலமே தங்க வேண்டி இருக்கும்.

*             கொடையாளியின் மன நிறைவுக்காகவும், எந்தக் குறைபாடும் இல்லை என உறுதியளிக்கவும் சில ஆய்வுகளைச் செய்யலாம். வழமையான இரத்த ஆய்வு, சிறுநீர் ஆய்வு, மீள் ஒலிஆய்வு, ஊடுகதிர் கணினி வரைவு போன்றவை செய்து, கொடையாளிக்கு நம்பிக்கை ஊட்டலாம்.

*              கொடையாளிகளும், சிறுநீரகம் பெற்றவர்களும், குழந்தைகள் பெற முடியும் _ பெற்றுக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. மனத்திடத்திற்காக ஏற்கெனவே சிறுநீரகம் கொடுத்தவர்களிடம், கொடையாளிகள் கலந்துரையாடலாம்.

*             யாருக்குச் சிறுநீரகம் கொடுத்துள்ளோம் என கொடையாளிக்குத் தெரிய வேண்டியதோ, தெரிவிக்க வேண்டிய நிலைப்பாடோ சட்டப்படி கிடையாது.

சிறுநீரகச் செயலிழப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவம் செய்து முழுமையாக நன்றாக ஆக்க முடியும்.

நாள்பட்ட நோய்க்குத்தான் பெருமளவில் கடுமையான மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்பு முழுமையாக இருந்தால், சிறுநீர் நச்சுப் பிரிப்பு முறையிலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் அறுவை மருத்துவம் மூலமும் நல்வாழ்வு பெற முடியும்.ஸீ

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) - (92)

 

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்

ஜனவரி 1-15,2022

சிறுநீரகச் செயலிழப்பு

(Kidney Failure)

மரு.இரா.கவுதமன்

நோயின் அறிகுறிகள்:

*              தசை வாதம் (Muscle Paralysis)

*              அதிக நீர்மம் வெளியேற்ற முடியாத நிலையில் ஏற்படும் குறைபாடுகள்.

*             கைகள், கால்கள், முகம், கணுக்கால்கள், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து விடும். அதனால் அந்த இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              நுரையீரல்களிலும் நீர் கோத்து விடுவதால் மூச்சுத் திணறல் உண்டாகும்.

*              சிறுநீரக நீர்க்கட்டிகள் (Polycystic kidneys) சேரும். அதிக நீர், கல்லீரலுக்கும் பரவும்.

*            அதனால் முதுகு, உடலின் பக்கவாட்டில் வலி ஏற்படும்.

*              சிறுநீரகங்கள் “எரித்ரோபயோடின்’’ (Erythropiotin) என்ற ஊக்கி நீரை (Hormone) சுரக்கும். இந்த ஊக்கி நீர், எலும்பு மஜ்ஜைகளைத் தூண்டிவிட்டு சிவப்பணுக்-களை உற்பத்தி செய்து, இரத்தத்தில் கலக்கும். சிறுநீரகப் பாதிப்பு சிவப்பணுக்கள் உற்பத்தியைக் குறைக்கும். அதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிவப்பணுக்கள் மூலம் செல்வது தடைபடும். இதனால், “இரத்த சோகை’’ (Anaemia) ஏற்படும்.

*             இரத்த சோகை ஏற்படுவதால் களைப்பு உணடாகும்.

*              நினைவாற்றல் குறையும்.

*            கவனக் குறைவு ஏற்படும்.

*             தலைச்சுற்றல் உண்டாகும்.

*              இரத்த அழுத்தம் குறையும்.

*              இயல்பான நிலையில் புரதங்கள் அளவில் பெரியதாக இருப்பதால் சிறுநீரக வடிப்பான்கள் மூலம் வெளியேறாது. ஆனால், வடிப்பான்கள் சேதமடைவதால் புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும் (Micro proteinaemia) அதனால்,

*             நுரையுடன் சிறுநீர் வெளியேறும்.

*              கணுக்கால், பாதங்கள், கைகள், முகம், வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஏற்படும்.

*              பசியின்மை

*              உணவு எடுத்துக் கொள்வதில் ஆர்வமின்மை

*             தோல் கருத்துப் போதல்

*            இரத்தத்தில் புரதங்கள் தேங்குதல்

*              உயிர்க் கொல்லி மருந்துகள் (Anti-biotics-Penicillin) பென்சிலின் போன்றவை ‘வலிப்பு’ (Seizures) உண்டாக்கும்.

நோயறிதல் – ஆய்வுகள்: நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பை 5 அடுக்குகளில் அளவீடு செய்வார்கள். வடிப்பான்கள் (Glomerular Filtration rate (GFR) வடிகட்டும் தன்மைக்கேற்ப இது அளவிடப்படும். 1. வடிப்பான்கள் பாதிப்பு லேசாக இருப்பின், இது முதல் நிலையாகக் கருதப்படும். 2, 3ஆம் நிலைகளில் அதிக அளவு மருத்துவக் கண்காணிப்பு கொடுத்துக் கவனிக்க வேண்டும். நோயாளி குணமடையும் வாய்ப்பு அதிகம். 4, 5ஆம் நிலைகளில் நோயின் கடுமை அதிகமாக இருக்கும். தீவிர மருத்துவம் செய்ய வேண்டிய நிலை. 5ஆம் நிலையில் வடிப்பான் செயலிழப்பு மிகவும் ஆபத்தானது. சிறுநீரகங்கள் மாற்றும் மருத்துவம் செய்ய வேண்டிய நிலை இந்நிலை.

வடிப்பான் வடி திறனளவு: (Glomeruler Filtration Rate):  வடிப்பான் வடிதிறன் பல நிலைகளில் மாறுபடும். வயது, பாலினம், உடல் அளவு, சூழ்நிலை ஆகிய நிலைகளில் வேறுபடும். இது மிகவும் இயல்பானது. ஆனால், சிறுநீரக நோய் மருத்துவர்கள் இதை ஒரு சரியான அளவீடாகக் குறிப்பிடுகின்றனர். தேசிய சிறுநீரக நிறுவனம் (National Kidney Foundation) வடிப்பான் வடிதிறன் அளவீட்டுக் கருவியை தேவைப்பட்டால் கொடுக்கின்றனர். இரத்தத்தில் “கிரியேட்டினின்’’ அளவீடு, அறிவதற்கு வடிதிறன் கருவியைப் பயன்படுத்தத் தேவை.

யூரீமியா: (Uremia):  சிறுநீரகத் துறை வளர்ச்சியடையும் முன், சிறுநீரகச் செயலிழப்பு, யூரீமியா (Uremia) என்றே அழைக்கப்பட்டது. இரத்தத்தில் யூரியா கலப்பதையே அவ்வாறு அழைத்தனர். 1847 வரை இரத்தத்தில் சிறுநீர் கலந்து விடுவதாக மருத்துவர்கள் நினைத்தனர். சிறிதளவோ, அல்லது சிறுநீரோ போகாததால் மருத்துவர்கள் அவ்வாறு நினைத்தனர். சிறுநீரகத் துறையின் வளர்ச்சி இந்த நிலைப்பாட்டை மாற்றியது. இன்று சிறுநீரகச் செயலிழப்பின் ஓர் அறிகுறியாகவே யூரீமியா குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை ஆய்வுகள்:

*             இரத்தத்தில் அணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் எண்ணிக்கை ஆய்வு. (சிவப்பணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, வெளுத்த தன்மை, வெள்ளணுக்கள் அளவு கூடுதல் போன்றவை நோய்த் தன்மையை வெளிப்படுத்த உதவும்.)

*              இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவு கூடியிருந்தால், நோய் உள்ளதை அறிய முடியும்.

*             மீள்ஒலி பதிவில் (Ultra Sonogram) சிறுநீரகங்கள் சிறுத்துத் தெரியும்.

*              ஊடுகதிர் கணினி வரைவி (Computerised Tomography) மூலம் சிறுநீரகங்கள் அமைப்பையும், மற்ற சிறுநீரகங்களின் பாகங்களில் உள்ள குறைபாடுகளையும் எளிதில் கண்டறியலாம்.

மருத்துவம்: நீரிழிவு நோய் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோய் அற்றவர்களுக்கும், குறைந்த அளவு புரதச் சத்துள்ள உணவுகள், நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கும். ஆனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு இது பயனளிக்காது. அசைவ உணவுகள், அதிகப் புரதச் சத்துள்ள உணவுகள் நோயைத் தீவிரப்படுத்தும்.

மருந்துகள்: வலி நீக்கி மருந்துகள், சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரகச் செயலிழப்பால் ஏற்படும் இணை நோய்களுக்கும் மருத்துவம் செய்தல் தேவையாகும். நிறமிகள் (Dye) மூலம் செய்யும் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரின் நீர்த்த தன்மையை அதிகமாக்கும் மருந்துகளை (Diuretics)

மருத்துவர்கள் கொடுப்பர்.

(தொடரும்…)