புதன், 9 டிசம்பர், 2015

காய்ச்சலை தடுப்பது எப்படி?



மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருக்குக் காய்ச்சல் நீடித்தால் `ஒருவேளை இது டைபாய்டாக இருக்குமோ? என்று அய்யப்படும் அளவிற்கு 'டைபாய்டு காய்ச்சல்  பொதுமக்கள் மத்தியில் பிரபலம். தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி, பனிக்காலம் முடியும் வரைக்கும் - அதாவது, அக்டோபர் முதல் ஜனவரி வரை - டைபாய்டு காய்ச்சல் நீடிக்கும். டைபாய்டு காய்ச்சலுக்குக் 'குடற்காய்ச்சல் என்று வேறு ஒரு பெயரும் உண்டு.
காரணம், இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து, அங்கேயே வளர்ந்து, காய்ச்சலை உண்டாக்குவதுதான்.    யாருக்கு வருகிறது?     குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினரை யும் இது பாதிக்கலாம் என்றாலும் இந்தியாவில் அய்ந்திலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளையே இது பெருமளவில் பாதிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த குழந் தைகள், சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகள் போன்றோருக்கு டைபாய்டு பாதிப்பு அதிகம். பெரியவர்களைப் பொறுத்த அளவில் சாலையோர உணவகங்களில், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தில் உள்ளவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் இது ஒரு தொற்றுநோய் என்பதால், வீட்டில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அடுத்தவர்களுக்கும் வர அதிக வாய்ப்பு உண்டு.
டைபாய்டு வரும் வழிகள்: 'சால்மோனல்லா டைபை’ எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் இந்தக் காய்ச்சல் வருகிறது. நோயாளியின் சிறுகுடலிலும் அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வசிக்கின்றன. மலம், சிறுநீர் ஆகியவை மூலம் இவை வெளியேறி மண்ணில் கலக்கின்றன.
இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. கண்ட இடங்களில் உட்காரும் ஈக்கள் இந்தக் கிருமிகளைச் சுமந்து கொண்டு தெரு விலிருந்து வீட்டிற்கு வருகின்றன.
நாம் பயன்படுத்தும் குடிநீரிலும் உணவிலும் இவற்றைக் கலந்து விடுகின்றன. இந்த அசுத்த உணவையும் தண்ணீரையும் சாப்பிடு பவருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது. ஏற்கனவே டைபாய்டு வந்து குணமானவரின் குடலில் சில காலம் இவை வசிப்பது உண்டு... அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் அவரை அறியாமலேயே அவ்வப்போது வெளியேறுவதுண்டு. இந்தக் கிருமிகள் அந்த நபரை அவ்வளவாக பாதிக்காது.
ஆனால், ஈக்கள் மூலம் மற்ற வர்களை அடையும்போது அவர்களுக்கு டைபாய்டு வந்து விடுகிறது. இந்த நபர்களை `நோய் கடத்துநர்கள் () என்கிறார்கள், மருத்துவர்கள்.
நோய் பரவும் மாற்று வழிகள்: டைபாய்டு கிருமிகள் தண்ணீரில் இரண்டு நாட்கள்தான் உயிர்வாழும். ஆனால், ஈரமான நிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் வாழத் தகுதி பெறும். ஆகையால் இந்தக் கிருமிகள் வாழும் மண்ணில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சரியாகச் சுத்தம் செய்யத் தவறினால் அல்லது சரியாக வேகவைக்கத் தவறினால் அவற்றைச் சாப்பிடும் நபருக்கு டைபாய்டு வந்துவிடும்.
இந்தக் கிருமிகள் பாலில்கூட இருக்கலாம். பாலைக் கொதிக்க வைக்காமல் லேசாக சூடுபடுத்தி குடிக்கும்  பழக்கமுள்ளவர் களுக்கு இந்தக் காய்ச்சல் வர அதிக வாய்ப்புள்ளது. மேலும், குளிர் சாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கும் பனிக்கட்டி, அய்ஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளில் இவை பல மாதங்களுக்கு உயிர்வாழும். முக்கியமாக, சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில் இவை அதிகமாக வசிக்கும். அங்கு உணவு சாப்பிடும் வாடிக்கை யாளர்களுக்கு டைபாய்டு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு.
நோய் தோன்றும் முறை: அசுத்த உணவு, தூய்மையற்ற குடிநீர் போன்றவை மூலம் நம் உடலுக்குள் நுழையும் இந்தக் கிருமிகள் சிறுகுடலை அடைந்து உடனே ரத்தத்தில் கலந்துவிடும். அங்கு இவை பல்கிப்பெருகி மீண்டும் குடலுக்கே வந்து குடலில் உள்ள நிணநீர்த் திசுக்களில் குடியேறும்.
'சிறுகுடலின் பாதுகாப்புப்படை   என்று அழைக்கப்படுகின்ற `பேயரின் திட்டுகள் எனும் பகுதிகளை அழிக்கும். இதனால் குடல் சுரப்புத் திசுக்கள் மற்றும் குடல் நிணநீர் முடிச்சுகள் வீங்கும். அப்போது குடல் திசுக்களில் சில்லரைக் காசு போல் வட்ட வட்டமாக புண்கள் உண்டாகி, காய்ச்சல் வரும். இதுதான் 'டைபாய்டு காய்ச்சல்.
அறிகுறிகள்: மனித உடலுக்குள் இந்த நோய்க்கிருமி நுழைந்து, பத்திலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து டைபாய்டு அறிகுறிகள் துவங்கும். முதல் நாளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு தோன்றும். அடுத்த நான்கு நாட்களில் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் அதிகமாகும். 104  டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக காய்ச்சல் எகிறும். ஒவ்வொரு நாளும் தலைவலி அதிகரிக்கும். உடல்வலி கடுமையாகும்.
பசி குறையும். வாந்தி வரும். வயிறு வலிக்கும். ஏழாம் நாளில் நாக்கில் வெண்படலம் தோன்றும். வயிற்றுப் போக்கு தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உடலெங்கும் பரவலாக ரோஜா நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் மார்பிலும் முதுகிலும் அதிக அளவில் காணப்படும்.
சிக்கல்கள்: இந்தக் காய்ச்சலுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் மோசமாகும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் மிகவும் அதிகமாகி வலிப்பு வரலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரலாம். சுயநினைவை இழக்கலாம்.சிலருக்கு நோய் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலத்தில் ரத்தம் வெளியேறலாம்.
இன்னும் சிலருக்கு குடலில் சிறு துளைகள் விழுந்து 'ரத்த மலம் போகலாம். இத்துடன் ரத்த வாந்தியும் வர வாய்ப்புண்டு. மேலும் ரத்தத்தில் இந்த நோய்க்கிருமிகளில் நச்சுத்தன்மை அதிகரித்து, செப்டிசீமியா எனும் நிலைக்கு மாறி, நோயாளிக்கு அதிர்ச்சி நிலை உருவாகி, உயிருக்கே ஆபத்து வரலாம்.
சிகிச்சை முறைகள்: டைபாய்டு காய்ச்சலுக்கு மருத்துவர் கூறும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த நோய் கிருமிகளை நேரடியாகத் தாக்கி, டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உள்ளன.  மருத்துவர் ஆலோசனைப்படி முறைப்படி பயன்படுத்தினால் நோய் முழுவதுமாக குணமாகும். இல்லையென்றால் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் வந்துவிடும்.
-விடுதலை,9.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக