புதன், 5 ஜூலை, 2017

வாந்திக்கு என்ன காரணம்?



வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரி யாவோ ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்சார் செல்கள் உடனே உணர்ந்து, வேகஸ் நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்து விட்டால், அந்தச் செய்தியை வாந்தி மய்யத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, வாந்தி எடு என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் மூளையிலிருந்து நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும். பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத்தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப் பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள வால்வு திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எது வானாலும் ஒவ் என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறி விப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

முக்கியக் காரணங்கள்

கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன்சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந் துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தலாம். முதல் நாள் இரவில் நிறைய மது குடித்த வர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடி படுதல், மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.
காதும் ஒரு காரணம்தான்!

காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினை களாலும் வாந்தி வரும். காதில் 'வெஸ்டிபுலர் அபாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்க வைக்கிறது; உட்கார வைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்த அமைப்பு தூண்டப் படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்து / கடல் / விமானப் பயணங்களின்போது வாந்தி வருகிறது.

உளவியல் காரணங்கள்

சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாகலாம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ள பயப்படு பவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள், காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ் வகையைச் சேர்ந்தது. உங்களுக்கு என்ன காரணத்தால் வாந்தி வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். பலன் கிடைக்கும். 

குக்கர் உணவும், உடல் உபாதைகளும்

நம் மக்கள் நீரின் பண்பை அளப்பதற்கு முன்பு ஒரு அளவீட்டு முறை வைத்திருந்தனர். அது என்ன வென்றால் துவரம்பருப்பு எளிதில் வேகக்கூடிய நீர் - மென்னீர் என்றும், நேரம் எடுத்துக்கொள்ளும் நீர் - கடினநீர் என்றும் வகை பிரித்து வைத்திருந்தனர்.

மென்னீரின் உச்சம் மழைநீர். மழைநீரில் சமைத் தால் சோறு, பருப்பு அத்தனையும் தனிச்சிறப்புடன் சுவைக்கும். கொதிக்கும் மழைநீரில் பருப்பைப் போட்டால் அடுத்த நொடியில் காதலன் தொட்ட காதலி பூரித்து மலர்வாளே, அதுபோல் பருப்பு மலர்ந்து இளகிச் சிரிக்கும்.

மெய்யாகவே பருப்பின் புறவிளிம்பு பூப்போல விரிந்து இருப்பதை நம்மால் காண முடியும். இந்த முறையில் பருப்பு மலர்ந்து உயிருக்கு ஆற்றல் வழங்கும். முன்னரே சொன்னதுபோல குக்கரில் அவிக்கும் பருப்பு, விருப்பமற்ற தீண்டலுக்கு உள்ளான பெண்போல, இறுகி விரைத்துக்கொள்ளும். குக்கரில் வேக வைக்கும் போது பருப்பில் உறைந்திருக்கும் காற்று ஆற்றல், பிரிந்து வெளியேறுவதில்லை. உள்ளுக்குள்ளேயே அடைத்து திணிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை நாம் உண்ணும்போதும் காற்றுச் சத்து உடலில் உயர்கிறது. அடுத்த வேளை உண்கிறபோது முன்னர் உண்ட உணவு முழுமையாகச் செரித்திருந்தால், அதாவது வாயு வடிவிலான கழிவு முழுமையாக உடலில் இருந்து நீங்கியிருந்தால், காற்றுக் கழிவின் தேக்கம் இருக்காது. இப்படி உண்பதற்கான அடிப்படை விதியை மீறிக்கொண்டே இருப்ப தால்தான் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பின்னர் பருப்பு, கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற சத்து மிகுந்த உணவை உண்டதும், வயிறு உப்பிப் பொருமுகிறது. தொடர்ந்து வாயுப்பிடிப்பு உடல் முழுதும் சுற்றிச் சுழன்று அடிக்கிறது.

-விடுதலை,26.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக