புதன், 12 ஜூலை, 2017

எலும்புகள் வலுப்பட உட்கொள்ள வேண்டிய உணவுகள்




உடலுக்குத் தேவைப்படும் சத்துக்களில் கால்சியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனமடைவதோடு ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கே கால்சியம் சத்து குறைபாடு வருகிறது என்ற நிலை மாறி, இன்று ஆண்களும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்குத் தேவையான வைட்டமின் டி சத்தும் நமக்கு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிலெல்லாம் கால்சியம் மற்றும் வைட்ட மின் டி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா...

பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நாம் அறிந்ததே. அதனால், தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையின் பேரில் புரோட்டீன் பவுடர் கலந்தும் பால் அருந்தலாம். தயிரிலும் அதே அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும் புரதத்துடன் கால்சியம் நிறைந்திருக்கிறது.

அதேபோல், உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று அத்திப்பழத் துண்டுகளை சாப்பிடலாம். முக்கியமாக, அனைத்து கடல் உணவுகளும் கால்சியம் சத்துப்பொருளை உள்ளடக்கியவையே.

பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகளும் காணப்படு கின்றன.

சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதேபோல் கருப்பு உளுந்து, சோயாபீன்ஸ், கொள்ளு போன்றவைகளிலும் கால்சியம் உள்ளது. 

நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை



இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக     ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப் பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந் தைகள் பாதிக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக் கிறது.குழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்தசோகை யைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர்.

ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப் படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்த சோகையுடன் குழந்தை பிறக்கிறது. குழந்தை குறை மாதத்திலும் பிறக் கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக் கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.

அதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
-விடுதலை,3.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக