செவ்வாய், 24 ஜூலை, 2018

கண்களைப் பாதுகாப்போம்



இந்திய இலக்கியங்கள் கண்ணைக் கொண்டாடிய நிகழ்வுகள் ஏராளம். உண்மையில் அகத்திலுள்ளதை முகத் தில் காட்டும் முக்கிய பணியைச் செய்வது கண்கள்தாம்.

அழுக்கோ அழகோ தன் முன்னால் உள்ளதை ஒளிக்கற்றை வழியாகப் பெற்று, மூளைக்கு அனுப்பி, அங்கே அமைக்டலாவைத் தூண்டி காதலையோ கரிசனத்தையோ கொட்டச் செய்வது கண்கள் வழிதாம்.

அந்தக் கண்களை, கரிசாலை மை தடவிக் குளிர்ப்பித்த காலத்திலிருந்து, மஸ்காரா பயன்படுத்தும் காலம்வரை பராமரித்த விதங்கள் ஏராளம். 80-களில் கண்ணாடி போட்டவர்களை கேலி செய்வது, அவமானப்படுத்தும் சொல். ஆனால், இன்று கண்ணாடி அணிவது மதிப்பான ஒன்றாகிவிட்டது.

விளைவுகளை

உதாசீனப்படுத்தாதீர்

இனிப்பு தேசத்தில் இந்தக் கண்களைப் பராமரிக்க இன்னும் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது, ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு, பின்னாட்களில் பார்வைக்காகப் போராட்டம் நடத்துவோர் பலர்.

சர்க்கரை நோயினர், கண்கள் விசயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

# அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம்

# பார்வையில் கரும் புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு

# தெளிவற்ற காட்சி

# காட்சியில் ஆங்க £ங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம்

இந்தப் பிரச்சினைகள் இருந்தால் அது டயாபட்டிக் ரெட்டினோபதியின்  தொடக்கம் எனலாம்.

என்ன நடக்கிறது கண்ணில்?

கண்ணில் விழித்திரையை (ரெட்டினா) ஒட்டிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிப்புறுவதால், விழித் திரையில் உள்ள நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. ஆதலால் அந்த நுண்ணிய நரம்புகள் வலுவிழப்பது, நரம்பின் உறை வீக்கமுறுவது என பாதிப்புகள் ஏற்பட்டு, பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.

கேட்டராக்ட் நோயில் நிகழும் லென்ஸ் பாதிப்பு போன்றோ, சாதாரண கிட்ட- தூரப் பார்வை போன்றோ இது அவ்வளவு எளிதாகச் சரி செய்யக் கூடியது அல்ல என்பதை இனிப்பு நோயினர் கவனத்தில் கொள்ள வேண்டும். விழித்திரையின் நரம்பில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்பு முழுமையான பார்வை இழப்பைக் கொடுத்து விடும்.

இரண்டு வகை பிரச்சினைகள்

சர்க்கரை நோய் இரண்டு விதமாய் விழித்திரையைப் பாதிக்கிறது. நான் ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டி னல் டிசீஸ்,  ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டினல் டிசீஸ்   என்பன அவை. முதலாவதில், அடிக் கடி பார்வைத்திறன் குறைந்து கண்ணாடி மாற்றும் செலவை அடிக்கடி தரும். நரம்பு உறை நார்கள் வீக்கமும், விழித்திரையின் மய்யப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். இது தொடர்ந்தால், நாளடைவில் ரெட்டினல் டிடேச் மெண்ட் எனும் விழித்திரை விலகல் ஏற்படலாம்.

இரண்டாம் பிரிவில், விழிக்கோள நீரினுள் ரத்தக் கசிவு, விழித்திரை விலகல், க்ளுக்கோமா எனப்படும் கண் அழுத்தம் அதிகரித்தல் என ஒவ்வொன்றாய் ஏற்பட்டு முடிவில் பார்வை இழப்பு வரக் கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை நிச்சயம் அவசியம். இன்று லேசர் சிகிச்சை முதல் கண்ணுக்கு உள்ளேயே செலுத்தும் மருந்துவரை நிறைய மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. அதனால் ஆரம்ப கட்டத்தில் பரிசோதித்துவிட்டால், சிகிச்சை சுலபம்.

தவிர, சீரான ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாகக் கண்களைப் பாதுகாக்க மரபு சொல்லும் முக்கிய வழி எண்ணெய்க் குளியல். பித்தத்தைச் சீர்செய்யும் இந்த மரபுப் பழக்கம், பல நூறு ஆண்டுகள் நம்மிடம் இருந்த நலவாழ்வுப் பேணல். இனிப்புநோய் அதி பித்தத்தில் பிரதானமாய்த் தொடங்கும் நோய். ஆதலால் இனிப்பு நோயினருக்கு எண்ணெய்க் குளியல் நிச்சயம் அவசியமான ஒன்று.

கூடவே, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மீன்கள், வெள்ளாட்டு மண்ணீரல் ஆகியவை கண் களைப் பாதுகாக்க, மரபு சொன்ன உணவு வகைகள்.

- விடுதலை நாளேடு, 23.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக