திங்கள், 5 ஆகஸ்ட், 2019

நீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்



நீரிழிவு நோய் வந்துவிட்டதே என்று அஞ்சுகிறார்களோ இல்லையோ அதற்காகச் சொல்லப்படும் உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுபவர்களும் உண்டு.

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் எதையும் சரிவரச் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் என்னென்ன?

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும்  அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ அய்ட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத்  தவிர்த்துவிட வேண் டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா பகிர்ந்துகொண்ட சில ஆலோசனைகள்.

சப்பாத்தி போதுமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் உணவில் எப்போதும் சப்பாத்திக்கு முன்னுரிமை இருக்கும். அரிசிக்கு மாற்றாகச் சப்பாத்தியைத் தான் பலரும் பயன்படுத்த நினைப்பார்கள். சப்பாத்தி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?  சப்பாத்தி சாப்பிடுவது தவறு அல்ல.

சப்பாத்திக்கு ஈடாகச் சிறிது அளவு அரிசிச் சோறும் எடுத்துக்கொள்ளலாம். சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியைக் குறையுங்கள்

நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவைக் குறைத்துக்கொள்ளப் பலரும் நினைப்பார்கள். அரிசி உணவைக் குறைத்தால் போதுமா என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் திவ்யா புரு ஷோத்தமனிடம் கேட்டோம். அரிசி உணவை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாய மில்லை. அதேநேரம் அதிக அளவில் உண் ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன் படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஅய்ட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பலம் தரும் பழம்

பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்.

உதவும் அசைவம்

நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவில் ஆட்டிறைச்சியைச் சாப்பிடச் சற்று அச்சப் படுவார்கள். கொழுப்பு கூடிவிடுமோ என்று நினைப்பார்கள். அசைவ உணவு சாப்பிடுவதில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கட்டுப்பாடு தேவையா? நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

* கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

* தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

*  பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்

- விடுதலை நாளேடு, 5.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக