திங்கள், 16 நவம்பர், 2015

மார்பகப் புற்று நோயும் மகளிர் சுய சோதனையும்


- நேயன்
மார்பகப் புற்றுநோய் அக்காலத்தில் மிக அரிதாய் சிலருக்கு வந்தது. ஆனால், தற்காலத்தில் அதிக அளவில் வருகிறது. காரணம், இரசாயனம் கலந்த உணவுகள், பூச்சுகள், மாசுகள்.
இது பரம்பரையாக வரும். தாய்க்கு இல்லாத நிலையிலும் வருமா? என்றால் வரும். ஆய்வு அப்படித்தான் சொல்கிறது. Epidemiology என்னும் நோய்ப் பரவு இயலின் ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன.
இன்றைக்கு மார்பகப் புற்றுநோயால் அதிகம் அவதிப்படுவோர், அமெரிக்க, அய்ரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் வாழும் பெண்கள்தான்.
புற்றுநோயில் மார்பகப் புற்று 24% என்ற கணக்கு, இதன் பரவலை உணர்த்துகிறது.
மாதவிடாய் நிற்கப் போகும் வயதில் அதிக எடையுடன் இருப்பது; குழந்தைப் பருவத்தில் அதிகப்படியான ஊட்ட உணவை உண்பதும் அதனால் சிறு வயதிலே பருவம் அடைவதும் (பூப்படைவதும்), தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும்;  குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவதும்; கருத்தடை மாத்திரைப் பயன்படுத்துவதும்; இரசாயனம் கலந்த உணவு, கீரை, பழம், பாக்கட் உணவு உண்பதும் மார்பகப் புற்று நோய்க்கான முதன்மைக் காரணங்கள்.
அக்காலத்தில் வறுமையின் காரணமாக அளவான, எளிய உணவு; இரசாயணம் கலப்பில்லா வாழ்வு 14 வயதில் பருவம் அடைதல் 20 வயதில் திருமணம், திருமணமானவுடன் பிள்ளை பெறல் என்ற சுழற்சி இயற்கையோடு இயைந்து இருந்ததால், பெண்களின் மார்பகப் புற்று அதிகம் இல்லை.
ஆனால், இன்றைக்கு நாகரிகத்தின் பேரால், பாக்கட் உணவு, குழந்தைப் பருவம் முதலே அதிக ஊட்டமான உணவும், உடற் பருமனும்; இதனால் 10 வயதிலே பருவம் அடையும் அவலம்.
உறங்கிக் கிடக்கும் புற்று மரபணுவை உசுப்பி எழுப்பிவிடும் ஊட்ட உணவுகள் இன்று அதிகம். புற்று நோயைத் தடுக்கும் என்று எண்ணப்பட்ட சோயா, புற்று மரபணுவைத் தட்டி எழுப்புகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம், பழைய சோயாவிற்குப் பதில் தற்போது மரபணு மாற்ற சோயா பவுடர் மற்றும் பால் விற்கப்படுவதால் அவை சாப்பிடும்போது மரபணுக்களைத் தூண்டுகின்றன.
அக்காலத்தில் 60 வயதுக்குமேல் வந்து கொண்டிருந்த மார்பகப் புற்றுநோய் தற்காலத்தில் 30, 40 வயதிலே வருகிறது.
தவிர்ப்பு நடவடிக்கைகள்: புற்றுநோயைத் தவிர்க்கும் ஆற்றல் மஞ்சள் தூளுக்கு உள்ளது. எனவே, குழந்தைப் பருவம் முதற்கொண்டே பாலுடன் மஞ்சள் தூள் கலந்து தினம் அருந்தும் பழக்கத்தை அனைவரும் (ஆண் பெண் இருபாலரும்) பின்பற்றுதல் வேண்டும். இது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உடையது. 250க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் இதை உறுதி செய்கின்றன. ஒரு டம்ளர் பால், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்து தினம் பருகுதல் கூடுதல் பயன்தரும்.
பெண்கள் தங்கள் உணவில், கீரை, முட்டை, மீன், தக்காளி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை தவறாது உண்பது நல்லது.
மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, சர்க்கரை போன்றவை புற்று நோய்க்கு வித்திடும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். பச்சைத் தேநீர் இதற்கு ஏற்றது.
சுயசோதனை: மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அவர்கள் கூறுகிறபடி பெண்கள் வீட்டிலே மார்பகச் சோதனை செய்துகொள்ளலாம்.
நார்த்திரள் கட்டி (Fibroadenoma),, மார்புத் தசையில் வரும் நீர்க்கட்டிகள்(Cyst), மார்பகத் தசையில் வரும் வலியும் தடிப்பும் (மாதவிடாய்க்கு முதல் வாரம்) இருந்தால் இவை குறித்து அஞ்சத் தேவையில்லை.
பாதிப்புகள் எவை?
மார்பகத் தசைப்பகுதி தடித்து இருத்தல்.
மார்பகக் காம்பு உள்வாங்கியோ மாறுபட்டோ திரவக் கசிவுடனே இருத்தல். அடிக்கடி மார்பகத்தில் தசைநார்க் கட்டிகள் வருதல் போன்றவை பாதிப்பிற்கான அறிகுறிகள்.
மேமோகிராம் சோதனை:
பாதிப்பு இருக்கும் அறிகுறி தெரிந்தாலோ, 40 வயதைத் தாண்டிய பின்னர், மார்பகப் புற்று நோய் தாய்க்கு இருப்பின், 35 வயதுத் தாண்டும்போது இச்சோதனை அவசியம்.
----------------
ரூ.5-க்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

இன்றைய தினத்தில் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் வரை செலவாகிறது. இதைக் குறைத்து வெறும் ரூ.5 செலவில் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய கருவி தயாரிக்கும் பணியில் அய்.அய்.டி. நிறுவனம், பேட்டர்சன் புற்றுநோய் மய்யம் ஆகியவை இணைந்து பணியாற்றி வருகின்றன.
வெப்ப ஆற்றலின் மூலம் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கிராமங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிறிய அளவிலான கருவியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்தப் பரிசோதனை முடிவுகளைக் கணினி மூலம் மருத்துவர்களுக்கு அனுப்பும் வகையிலும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன.
-உண்மை இதழ்,1.15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக