வெள்ளி, 14 அக்டோபர், 2022

நீரிழிவு நோயின் வகைகள் (விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!) [33]

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [33]

ஜுலை 1-15,2021

நீரிழிவு நோய் இன்றைய நிலையில் நடுத்தர வயது மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோயாக உள்ளது. இந்நோய் ஒரு வளர்சிதை மாற்றநோய் (Metabolic disease). கணையத்தின், லாங்கர்ஹான் திட்டுக்களில் சுரக்கும் இன்சுலின் சுரப்பு குறைவினாலோ, இன்சுலினை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இந்நோய் உண்டாகிறது. இன்சுலின் என்ற ‘ஊக்கி நீர்'(Hormone) இரத்தத்தில் உள்ள சர்க்கரையை, செல்களில் செலுத்துகின்ற பணியை செய்கிறது. செல்களுக்கு செலும் சர்க்கரைதான், செல்களுக்கு இயங்கும் சக்தியையும், செல்களில் சேர்த்தும் வைக்கப்படுகிறது நீரிழிவு நோய்க்கு சரியான மருத்துவம் செய்யாவிட்டால் நரம்புகள், கண்கள், சிறுநீரகங்கள், ஈறுகள் போன்ற உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

நீரிழிவு நோயின் வகைகள் :  நீரிழிவு நோய் பொதுவாக 4 வகையாக, வகைப் படுத்தப்படும்.

1. நீரிழிவு நோய் முன் பருவம்: (Prediabetic stage)

இந்த நிலையில், இரத்தத்தில் சர்க்கைரை அளவு இயல்பைவிட அதிக அளவு இருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.

2. முதல்வகை நீரிழிவு நோய்: (Type 1 diabetes)

“தன்னுடல் தாக்கு நோய் (Auto – immune disease) வகையைச் சேர்ந்தது இந்த நோய் கணையத்தில் உள்ள செல்களை, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே அழித்து விடும். அதனால் இன்சுலின் சுரப்பது தடைப்பட்டுவிடும். இதன் காரணம் தெரியவில்லை. 10% நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes): இன்சுலின் எதிர்ப்பு உடலில் உருவாகும் பொழுது, இந்த வகை நோய் ஏற்படும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.

3. கருக்கால நீரிழிவு நோய்: (Gestational diabetes)

கருவுற்ற காலத்தில் மகளிர்க்கு ஏற்படும் நீரிழிவு நோய் இது. உடல் கருவுற்ற காலத்தில், இன்சுலின் பயன்பாடு சில மகளிர்க்கு குறையும், இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். மகப்பேறுக்கு பின் இந்நோய் இயல்பாகவே குறைந்துவிடும். (கூடுதல் சிறுநீர் கழிப்பு நோய் – இதை வெற்று நீரிழிவு நோய் (Diabetes insipidus) எனவும் அழைப்பர். இந்நோய் வழமையான நீரிழிவு நோய் இல்லை. அதிக அளவு சிறுநீர் வெளியேறும். ஆனால் அதில் சர்க்கரை இருக்காது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் குறைபாட்டால் இந்நோய் உண்டாகிறது) ஒவ்வொரு வகை நோய்க்கும் அறிகுறிகளும், காரணங்களும் மருத்துவமும் மாறுபடும்.

நோயின் அறிகுறிகள் :

இரத்தத்தில் சர்க்கை அளவு அதிகமாவதால் பல அறிகுறிகள் தோன்றும் நீரிழிவு நோயில் உள்ள பொதுவான அறிகுறிகள்:

* அதிகப் பசி எடுத்தல் (Poly Pepsia)

* அதிக தாகம் எடுத்தல் (Poly dypsia)

* அதிக சிறுநீர் கழித்தல்  (Poly urea)

* எடை குறைதல்

*உடல் மெலிதல்

* பார்வை மங்குதல்

*அதிகக் களைப்பு

* புண்கள் எளிதில் ஆறாத நிலை.

இன்சுலின் பயன்பாடு குறைவினால், செல்களுக்குள் சர்க்கரை செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் செல்களின் செயல்பாடு பாதிக்கப்படும். உடலுக்குத் தேவையான, சக்தி (Energy) கிடைக்காது. செல்களில் ஏற்படும் வளர், சிதை மாற்றச்செயல்பாடு (Metabolic activities) கள் பாதிப்படையும். அதனால் உடலில் உள்ள செல்களில் சக்தி தேவை அதிகமாகும். பல செல்களிலும் கூட்டாக இத்தேவை அதிகரிப்பதால், பசியும் அதிகமாகும். உணவு எடுத்துக் கொள்ளும் அவசியம் அதிகரிக்கும். அதனால்தான் அதிகப் பசி எடுக்கும். இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை தேங்குவதால் அதை கரைத்து வெளியேற்ற, திசுக்களிலிருந்து அதிக அளவு நீர் (Interstitial fluid) சவ்வூடு பரவல் மூலம் இரத்தக் குழாய்கள் உறிஞ்சும் நிலை ஏற்படும்.

அதனால் திசுக்களில் தண்ணீர் தேவை அதிகரிக்கும். இதுவே அதிக தாகம் (Polydypsia) எடுக்கக்காரணம். அதே போன்றே இயல்பைவிட அதிகம் நீர்மம் இரத்தக் குழாய்களில் சேர்வதால், சிறுநீரகங்கள் அதிகம் சிறுநீரில் சர்க்கரையிஅ வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். (அதனால்தான் சிறுநீர் பரிசோதனையில் சர்க்கரை இருப்பது தெரியவரும்). அந்த அதிக அளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்ற அதிக அளவு நீர் தேவைப்படும். அந்த அதிக அளவு நீர் சிறுநீரகத்தால், சிறுநீராகப் பிரித்தெடுக்கப்பட்டு வெளியேறும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சிறுநீர் கழிக்க (Poly urea) வேண்டிய நிலை உண்டாகும். உடலின் செல்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமையால், உடல் மெலியத் துவங்கும் இதன் காரணமாகவே உடலில் அதிக அளவு களைப்பும், சோர்வும் ஏற்படும் நீரிழிவு நோயில் நரம்புகளும் அதிகம் பாதிப்படையும். அதிலும் கண்ணீன் நரம்புகள் எளிதில் பாதிக்கப்படும் (diabetic neuropathy). அதனால் பார்வை மங்கும். சரியாக மருத்துவம் செய்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கண்கள் குருடாகும் நிலை கூட ஏற்படும் (விழித்திரையில் பார்வை நரம்புகள் இருப்பதால், விழித்திரைப் பாதிப்பு (Diabetic retinropathy)ஏற்படும். நுண்கிருமிகள் பல்கிப் பெருக சர்க்கரை அதிக அளவு இருப்பது வாய்ப்பான நிலை. அதனால் புண்கள் ஏற்பட்டால், நுண்கிருமிகள் பல்கிப் பெருகுவதால் புண்கள் சீக்கிரம் ஆறாது. மேலும், மேலும் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய் தொற்றும் அதிகரிக்கும். அதுவும் புண்கள் ஆறாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.

ஆண்களுக்கு ஏற்படும் தனித்துவ அறிகுறிகள்:

ஆண்களுக்கு, நீரிழிவு நோயால் தசைகள் தளர்ச்சி (Muscle weakness) ஏற்படும் ஆண்மைக் குறைவு ஏற்படும். பாலியல் உணர்வு மங்கும் (decreased sex drive) விரைப்பின்மை (Erectile disfunction) ஏற்படும்.

                                                             (தொடரும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக