திங்கள், 10 அக்டோபர், 2016

இரைப்பைப் புண்


நம் செரிமான மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை! நமக்குப் பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, செமிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைப்பது இரைப்பை. அதே நேரத்தில் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய் என வரிசையாகப் பல பிரச்னைகளைத் தருவதும் இரைப்பைதான். ஆகவே, இந்த இடத்தில் இரைப்பையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
1.இரைப்பை அழற்சி
இரைப்பையில் ஏற்படும் முதல் பிரச்சினையே இதுதான்.  புண் உண்டாவதற்கு முந்தைய நிலை என்று சொல்லலாம். இதை 'இரைப்பை அழற்சி  என்கிறார்கள். உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இரைப்பைச் சுவரில் சிவந்த சிராய்ப்புகளும் வீக்கங்களும் ஏற்படுவதால் இது உருவாகிறது. இதன் அறிகுறிகள் சிலருக்குப் பசி இருக்காது.
சிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளும் வெளிப்படும். இதன் அறிகுறிகள் சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மட்டும் ஏற்பட்டால், அது தற்காலிக இரைப்பை அழற்சி  எனவும், மாதக்கணக்கில் நீடித்தால் நாட்பட்ட இரைப்பை அழற்சி  எனவும் அழைக்கிறோம்.
நோய்க்கான காரணங்கள், கண்டு பிடிக்கப் பயன்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு உள்ளவையே. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இரைப்பையில் அழற்சி ஏற்படும்போது, அமிலச்சுரப்பு குறைந்துவிடும். இதனால், நாம் சாப்பிடும் உணவிலிருந்து இரும்புச் சத்து கிரகிக்கப்படாது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும், இதன் விளைவாக, ரத்தசோகை உண்டாகும்.
2.இரைப்பைப் புண்
இரைப்பையில் ஏற்படுகிற நோய்களில் முக்கியமானது, `அல்சர் என அனைவராலும் அழைக்கப்படும் இரைப்பைப் புண். இது உணவுக்குழலின் இறுதிப்பகுதி, இரைப்பை, முன் சிறுகுடல், மெக்கலின் பக்கப்பை ஆகிய நான்கு இடங்களில் வரும். இரைப்பையில் வருவதை 'இரைப்பைப் புண்   எனவும், முன்சிறுகுடலில் வருவதை `முன்சிறுகுடல் புண் எனவும் தனித்தனி பெயர்களில் மருத்துவர்கள் அழைக் கிறார்கள்.
இந்த இரண்டையும் சேர்த்து `செரிமானப் புண் அல்லது பெப்டிக் அல்சர் எனவும் அழைக்கிறார்கள். இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கதிகமாக சுரக்கும்போது இரைப் பையிலும் முன்சிறுகுடலிலும் உள்ள சிலேட்டுமப் படலம் சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.
காரணங்கள்
இரைப்பைப் புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. `ஹெலிக்கோபேக்டர் பைலோரி  எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான் இப்போது அதிகம். அசுத்தமான  குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப் போருக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது எச்சிலில் கூட இருக்கும். முத்தம் கொடுக்கும்போது இது மற்றவர்களுக்குப் பரவிவிடும்.
இது பல ஆண்டுகளுக்கு இரைப்பையில் வாழும்.  அதிகபட்சமாக 100ல் 10 பேருக்கு இது இரைப்பைப் புண்ணை உண்டாக்கும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், காரம் நிறைந்த உணவு, புளிப்பு மிகுந்த உணவு, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு போன்றவற்றை அதிகஅளவில் உண்பது, கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகப்படியாக குடிப்பது, ஆஸ்துமா மற்றும் மூட்டுவலிகளுக்கு தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், தலைவலிக்குத் தரப்படும்.
ஆஸ்பிரின், அனால்ஜின், இபுபுரூஃபன், பேரசிட்டமால் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால் பெப்டிக் அல்சர் வருகிறது. உணவை நேரந்தவறி சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, அவசர அவசரமாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்களாலும் இவ்வாறு புண் ஏற்படலாம்.
எலுமிச்சை, நெல்லிக்காய், கடுக்காய் போன்ற புளிப்புச் சுவை உடையவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் இந்த நோய் ஏற்படும்.  மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதும் இந்த நோய்க்கு வழி அமைக்கும்.  சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பாக, உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டவர் களுக்கு இந்நோய் ஏற்பட மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
'ஓ' ரத்தப்பிரிவு உள்ளோருக்கு இயற்கையிலேயே இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு சிறுவயதிலேயே இது வந்துவிடுகிறது. மனக்கவலை, மனஉளைச்சல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பரபரப்பு, ஓய்வில்லாதது போன்ற காரணங்களாலும் இது பலரையும் பாதிக்கிறது.
அறிகுறிகள்
இந்நோயின் தொடக்கத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு ஏற்படும். நெஞ்சில் ஏதோ பந்து போல் திரண்டு வந்து அடைப்பது போலத் தோன்றும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். நோயின் அடுத்த கட்டமாக வயிற்றில் வலி தோன்றும்.
இரைப்பையில் சுரக்கும் அமிலம் அங்குள்ள புண்மேல் படுவதால் இந்த வலி வருகிறது. அடுத்து உணவு சாப்பிட்ட பின்பு இதேவலி உண்டாகும். இதற்குக் காரணம், உண்ட உணவு இரைப்பைப் புண்ணில் படுவதுதான்.
சிலருக்கு இந்த வயிற்று வலி நடு முதுகுக்கும், வயிற்றின் வலது பக்கத்திற்கும் பரவலாம். வயிற்று வலிக்கு அடுத்தபடியாக வாந்தி வரும். வாந்தியினால் நோயாளிக்கு நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. அடிக்கடி வாந்தி வந்தால் சரியாக உணவு சாப்பிட முடியாது, இதனால் உடல் எடை குறையும். உடல் மெலியும். இது தீமை. இரைப்பைப் புண் உள்ளவர்கள் வாந்தி எடுக்கும்போது, இரைப்பையில் உள்ளவை எல்லாமே வெளியில் வந்துவிடுவதால் அங்கு அமிலத்தன்மை குறைந்துவிடும்.
இதனால் வயிற்றுவலி தற்காலிகமாக குறையும். இது இவர்களுக்கு நன்மை. இதற்காக வயிற்று வலியைத் தாங்க இயலாத ஒரு சிலர் தாங்களாகவே வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கத் தூண்டுவார்கள். இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி எடுத்தால் வயிற்றுவலி குறையும். அதேநேரத்தில் முன்சிறுகுடலில் புண் உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் வயிற்று வலி குறையும்.
நோய் அறியும் முறைகள்
முன்பெல்லாம் இரைப்பைப் புண்ணை உறுதி செய்ய அமில சுரப்புப் பரிசோதனை மற்றும் பேரியம் கதிர்வீச்சுப் படங்கள்  உதவின. இப்போது 'எண்டோஸ்கோப்பி பரிசோதனை  மூலம் நோயாளியின் செரிமானப் பாதையில் இருக்கும் புண்ணின் இருப்பிடம், அளவு, நிலைமை, ரத்தக்கசிவு, குடலடைப்பு போன்ற பல தகவல்களை மருத்துவரே நேரடியாகப் பார்த்து உறுதி செய்கிறார்.
இரைப்பைக்கு உதவுங்கள்
வயிறு நிறைய சாப்பிடாதீர்கள். உடல் உழைப்பு குறைந்தவர்கள் முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.
நொறுக்குத் தீனி சாப்பிடுவதை நிறுத்தவும்.
அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.
இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவையே சாப்பிடுங்கள்.
சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரேநேரத்தில் சாப்பிட வேண்டாம்.
உணவு சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடாதீர்கள்.
உணவு சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்ளாதீர்கள. குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கழித்து நீர் அருந்தி விட்டு படுக்கைக்கு செல்லவும்.
உணவை சீரான இடைவெளியில் புசித்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. முன்சிறுகுடல் புண்
இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரக்கப்படும் போது, அது முன்சிறுகுடலின் முதலாவது பகுதியையும் அரித்துப் புண்ணாக்கிவிடும். இதுதான் முன்சிறுகுடல் புண் என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வயிற்றில் வலி வந்தால் அது முன்சிறுகுடல் புண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் நள்ளிரவிலும், அதிகாலையிலும்தான் இவர்களுக்கு வயிற்று வலி வரும். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி வராது. பசி நன்றாக இருக்கும். எடை குறையாது. நாட்பட்ட நோயாளிகளுக்கு மலத்தில் ரத்தம் வரலாம். புண்ணானது முன்சிறுகுடலை அடைத்துக்கொண்டது என்றால், வயிற்று வலியோடு வாந்தியும் வரும். முன்சிறுகுடல் புண்ணுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு சொல்லப்பட்டவையே.
-விடுதலை,10.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக